ஆண்டவருக்காக நிற்காமல் ஓடுவது எப்படி?மாதிரி

ஆண்டவருக்காக நிற்காமல் ஓடுவது எப்படி?

7 ல் 1 நாள்

நீ முன்னேற முடியாதபடிக்குத் தடைகளை உணர்கிறாயா?

மின்னஞ்சல் வாசகர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களையும் கருத்துக்கணிப்புகளையும் வாசிக்கும்போது,​“என்னால் முன்னோக்கிச் செல்ல முடியவில்லை என உணர்கிறேன்,” “எனது தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேறுவது என்பது எனக்கு மிகப்பெரிய சிரமமாய் இருக்கிறது,” “நான் ஆண்டவரில் வளரவில்லை என்பது எனக்குத் தெரிகிறது,” “எனக்காக ஜெபியுங்கள், நான் முன்னர் ஆண்டவரோடு நெருங்கி ஜீவித்ததைப்போல, இப்போது வாழ விரும்புகிறேன்,” “எனது திட்டங்கள் தடைபட்டதுபோல் இருக்கிறது, மேலும் எனக்குத் தெளிவான வழி கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,” என்பன போன்ற பல பதில்களை நான் கவனித்திருக்கிறேன். இந்த விரக்தி நிறைந்த பதில்களை நான் உண்மையில் புரிந்துகொள்கிறேன். இனி வரவிருக்கும் நாட்களில், "ஆண்டவருக்காக நிற்காமல் ஓடுவது எப்படி" என்ற தொடரில், உன் கிறிஸ்தவ வாழ்க்கையிலும், ஆண்டவர் உனக்காக வைத்திருக்கும் திட்டங்களிலும் முன்னேறுவதற்கான பல திறவுகோல்களை உன்னுடன் பகிர்ந்துகொள்ள வேண்டுமென என் இருதயத்தில் வாஞ்சிக்கிறேன்!

இந்த வல்லமை வாய்ந்த வசனம் உனக்குத் தெரியுமா? “உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்." (2 சாமுவேல் 22:30)

இந்த வார்த்தைகளை எழுதியவரான தாவீது, ஒரு சாதாரண மேய்ப்பனாக இருந்து இஸ்ரவேலுக்கு ராஜாவாக மாறினார். இந்த தாவீதின் வாழ்க்கையும் எதிர்கால நம்பிக்கையும்தான் பல ஆண்டுகளாக தடையை சந்தித்து வந்தன.

தாவீதும் கூட தடைகளையும் ஏமாற்றங்களையும் அனுபவித்தார். இவர் ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்ட பிறகு மீண்டும் மேய்ப்பனாகவே இருந்து வந்தார். அவர் அபிஷேகம் பண்ணப்பட்டதற்கும் அரியணை ஏறியதற்கும் இடையே 30 வருடங்கள் கடந்திருக்கலாம் என்பது சிலரின் கணிப்பாகும்.

அவர் அநேக தடைகளைச் சந்திக்க வேண்டிய ஒரு நிலை காணப்பட்டது! ஆண்டவர் அவரை அழைத்ததுபோல் தாவீது இன்னும் மாறவில்லை என்றாலும், அவர் தனது பழைய பணியைச் செய்துவந்தார். தெய்வீக திட்டம் அவர் மூலம் நிறைவேறியது.

ஏன் அப்படி தடை ஏற்பட்டது? இந்த வசனத்தில் அதற்கான ஒரு காரணம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக அதில், "தேவனாலே" என்ற ஒரு வார்த்தை காணப்படுகிறதை நான் பார்க்கிறேன். தாவீது ஆண்டவர் இல்லாமல் தானாக எதுவும் செய்யவில்லை. எல்லாவற்றையும் ஆண்டவருடன் இணைந்து செய்ய வேண்டும் என்பதை அவர் புரிந்துகொண்டார். "தேவனாலே பராக்கிரமஞ்செய்வோம்" (சங்கீதம் 108:13) என்று தாவீது மீண்டும் கூறுகிறார்.

“உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்” என்று வசனம் கூறுகிறது. அவருடன் இணைந்து செயல்பட வேண்டும், அவர் இல்லாமல் எதுவும் செய்யக் கூடாது! தாவீது ஆண்டவரோடு தொடர்ந்து நேரத்தைச் செலவழித்தார். அவர் தன் முழு இருதயத்தோடும் ஆண்டவருடைய தெய்வீக சமூகத்தைத் தேடினார்.

ஆண்டவருடன் நெருக்கமான, ஆழமான மற்றும் உண்மையான உறவில் உள்ள வல்லமையை விட உன் வாழ்க்கையில் வேறு எதுவும் அதற்கு இணையான ஒன்றாக இருக்க முடியாது. உன் கிறிஸ்தவ வாழ்க்கையை வாழத் துவங்குவதற்கான முதல் திறவுகோலை நான் ஒரே சொற்றொடரில் சுருக்கமாகக் கூற வேண்டுமானால், அது இதுதான்: ஆண்டவருடன் இணைந்திரு, ஆண்டவரை விட்டுவிட்டு தனியாக செயல்படாதே!"

உன் திட்டங்களும், உன் முயற்சிகளும் மற்றும் நீ எடுக்கும் எல்லா முடிவுகளும் ஆண்டவரது சித்தத்திற்கேற்ப அமையும்படி அவரை உன் வாழ்வில் அழைக்குமாறு இன்று நான் உன்னை ஊக்குவிக்கிறேன்.

உன் வேலையிலும், உன் வீட்டிலும், உன் எல்லா செயல்களிலும், மிகச் சாதாரணமானவற்றிலும் கூட ஆண்டவர் முன்னின்று நடத்தும்படி அவரை அழைக்கவும். ஆண்டவருடன் இணைந்திரு, ஆண்டவர் இல்லாமல் தனியாக இராதே... தடைகள் மாறவும் விடுதலையை அனுபவிக்கவும், ஆண்டவருடன் இணைந்திரு, ஆண்டவரின்றி தனியாக வாழாதே!

இந்த திட்டத்தின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை இலவசமாக பெறுவதற்கு இங்கே பதிவு செய்யலாம்: https://tamil.jesus.net/

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

ஆண்டவருக்காக நிற்காமல் ஓடுவது எப்படி?

Description: உன் கடந்த கால வாழ்வு உன்னை முன்னேறவிடாமல் தடுக்கிறதா? தவறு செய்துவிடுவேனோ என்று எண்ணி தயங்கி நிற்கிறாயா? "ஆண்டவருக்காக நிற்காமல் ஓடுவது எப்படி" என்ற இந்த தியானத்தின் மூலம், உன் கிறிஸ்தவ வாழ்க்கையிலும், ஆண்டவர் உனக்காக வைத்திருக்கும் திட்டங்களிலும் முன்னேறுவதற்கான பல திறவுகோல்களை உன்னுடன் பகிர்ந்துகொள்ள வேண்டுமென என் இருதயத்தில் வாஞ்சிக்கிறேன்! பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, தடைகளைத் தகர்த்தெறிகிற ஆண்டவரோடு இணைந்து முன்னணறிச் செல்வாயாக.

More

இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=becomeunstoppableforgod