எபிரெயர் 12:18-29

எபிரெயர் 12:18-29 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அன்றியும், தொடக்கூடியதும், அக்கினி பற்றியெரிகிறதுமான மலையினிடத்திற்கும், மந்தாரம் இருள் பெருங்காற்று ஆகிய இவைகளினிடத்திற்கும், எக்காளமுழக்கத்தினிடத்திற்கும், வார்த்தைகளுடைய சத்தத்தினிடத்திற்கும், நீங்கள் வந்து சேரவில்லை; அந்தச் சத்தத்தைக் கேட்டவர்கள் பின்னும் தங்களுக்கு வார்த்தை சொல்லப்படாதபடிக்கு வேண்டிக்கொண்டார்கள். ஏனெனில் ஒரு மிருகமாகிலும் மலையைத் தொட்டால், அது கல்லெறியுண்டு, அல்லது அம்பினால் எய்யுண்டு சாகவேண்டுமென்று சொல்லப்பட்ட கட்டளையைச் சகிக்கமாட்டாதிருந்தார்கள். மோசேயும்: நான் மிகவும் பயந்து நடுங்குகிறேன் என்று சொல்லத்தக்கதாக அந்தக் காட்சி அவ்வளவு பயங்கரமாயிருந்தது. நீங்களோ சீயோன் மலையினிடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமினிடத்திற்கும், ஆயிரம்பதினாயிரமான தேவதூதர்களினிடத்திற்கும், பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபையினிடத்திற்கும், யாவருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடத்திற்கும், பூரணராக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளினிடத்திற்கும், புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்துசேர்ந்தீர்கள். பேசுகிறவருக்கு நீங்கள் செவிகொடுக்கமாட்டோமென்று விலகாதபடி எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில், பூமியிலே பேசினவருக்குச் செவிகொடுக்கமாட்டோமென்று விலகினவர்கள் தப்பிப்போகாமலிருக்க, பரலோகத்திலிருந்து பேசுகிறவரை நாம் விட்டுவிலகினால் எப்படித் தப்பிப்போவோம்? அவருடைய சத்தம் அப்பொழுது பூமியை அசையப்பண்ணிற்று; இன்னும் ஒருதரம் நான் பூமியை மாத்திரமல்ல, வானத்தையும் அசையப்பண்ணுவேன் என்று இப்பொழுது வாக்குத்தத்தஞ்செய்திருக்கிறார். இன்னும் ஒருதரம் என்கிற சொல்லானது அசையாதவைகள் நிலைத்திருக்கத்தக்கதாக, அசைவுள்ளவைகள் உண்டாக்கப்பட்டவைகள்போல் மாறிப்போகும் என்பதைக் குறிக்கிறது. ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம். நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே.

எபிரெயர் 12:18-29 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

நீங்கள் இப்பொழுது வந்திருப்பது தொடக்கூடியதும், நெருப்பு பற்றி எரிகிறதும், இருளும், மந்தாரமும், புயலும் சூழ்ந்துள்ள அந்த மலையின் பக்கம் அல்ல. அங்கே எக்காளம் முழங்கியது, ஒரு குரல் வார்த்தைகளைப் பேசியது. கேட்டவர்கள் இன்னொருமுறை அந்தக் குரலைத் தாங்கள் கேட்கக்கூடாது என்று, மன்றாடிக் கேட்டுக்கொண்டார்கள். ஏனெனில், “அந்த மலையை ஒரு மிருகம் தொட்டாலும், அந்த மிருகம் கல்லெறிந்து கொல்லப்படவேண்டும்” என்று சொல்லப்பட்டக் கட்டளையை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாமலிருந்தது. அந்தக் காட்சி மிகவும் பயங்கரமாக இருந்ததினாலே மோசே, “நான் பயத்தினால் நடுங்குகிறேன்” என்று சொன்னான். ஆனால் நீங்களோ, இப்பொழுது ஜீவனுள்ள இறைவனின் நகரமாயிருக்கிற பரலோக எருசலேமாகிய சீயோன் மலைக்கே வந்திருக்கிறீர்கள். ஆயிரம் ஆயிரமான இறைத்தூதர்கள் மகிழ்ச்சியாய் சபை கூடுதலுக்கும், பரலோகத்தில் பெயர்கள் எழுதப்பட்டிருக்கின்ற முதற்பேறானவர்களின் திருச்சபைக்கும், எல்லா மனிதருக்கும் நீதிபதியாய் இருக்கிற இறைவனிடத்திற்கும், முழு நிறைவடைந்த நீதிமான்களின் ஆவிகளினிடத்திற்கும், புதிய உடன்படிக்கையின் நடுவரான இயேசுவினிடத்திற்கும், ஆபேலின் இரத்தத்தைவிட மேன்மையான வார்த்தையைப்பேசும் இயேசுவின் தெளிக்கப்பட்ட இரத்தத்தினிடத்திற்குமே நீங்கள் வந்திருக்கிறீர்கள். ஆகவே உங்களிடம் பேசுகிற இறைவனை மறுக்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் பூமியிலே அவர்களை எச்சரித்த, மோசேயுடைய வார்த்தைகளைக் கேட்க மறுத்தவர்கள் தப்பிப் போகவில்லை. அப்படியானால், பரலோகத்திலிருந்து எச்சரிக்கிறவருக்கு செவிகொடுக்க மறுத்தால், நாம் எப்படித் தப்பமுடியும்? அக்காலத்தில் இறைவனுடைய குரல் பூமியை அசைத்தது. இப்பொழுதோ அவர், “நான் இன்னும் ஒருமுறை பூமியை மட்டுமல்ல, வானத்தையும் சேர்த்து அசைப்பேன்” என்று இறைவன் வாக்களித்துள்ளார். “இன்னொருமுறை” என்ற வார்த்தை, அசைக்கப்படக் கூடிய படைப்புகள் அகற்றப்படும் என்பதையே தெளிவுபடுத்துகிறது. இதனால், அசைக்கப்பட முடியாதவை தொடர்ந்து நிலைத்திருக்கும். ஆகவே, அசைக்கப்படாத ஒரு அரசையே பெறுகிறவர்களாகிய நாம் நன்றியுடையவர்களாய், இறைவன் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில், பயபக்தியுடன், ஆராதிப்போம். ஏனெனில், நமது இறைவனோ சுட்டெரிக்கும் நெருப்பாய் இருக்கிறார்.

எபிரெயர் 12:18-29 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அன்றியும், தொடக்கூடியதும், அக்கினி பற்றியெரிகிற மலையினிடமும், மந்தாரம், இருள், பெருங்காற்று ஆகிய இவைகளிடமும், எக்காளமுழக்கத்தினிடமும், வார்த்தைகளுடைய சத்தத்தினிடமும், நீங்கள் வந்து சேரவில்லை; அந்தச் சத்தத்தைக் கேட்டவர்கள் பின்னும் தங்களுக்கு வார்த்தை சொல்லப்படாதபடி வேண்டிக்கொண்டார்கள். ஏனென்றால், ஒரு மிருகமானாலும் மலையைத் தொட்டால், அது கல்லெறியப்பட்டு, அல்லது அம்பினால் எய்யப்பட்டுச் சாகவேண்டும் என்று சொல்லப்பட்ட கட்டளையைச் சகிக்கமுடியாமல் இருந்தார்கள். மோசேயும்: நான் மிகவும் பயந்து நடுங்குகிறேன் என்று சொல்லும் அளவிற்கு அந்தக் காட்சி அவ்வளவு பயங்கரமாக இருந்தது. நீங்களோ சீயோன் மலையினிடமும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமிடமும், ஆயிரமாயிரம் தேவதூதர்களிடமும், பரலோகத்தில் பெயர் எழுதியிருக்கிற தலைப்பிள்ளைகளின் சர்வசங்கமாகிய சபையினிடமும், எல்லோருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடமும், பூரணர்களாக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளினிடமும், புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடமும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைவிட நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடமும் வந்து சேர்ந்தீர்கள். பேசுகிறவருக்கு நீங்கள் கவனிக்கமாட்டோம் என்று விலகாமல் இருக்க எச்சரிக்கையாக இருங்கள்; ஏனென்றால், பூமியிலே பேசினவருக்கு கவனிக்கமாட்டோம் என்று விலகினவர்கள் தண்டனைக்குத் தப்பித்துக்கொள்ளாமல் இருக்க, பரலோகத்தில் இருந்து பேசுகிறவரை நாம் விட்டுவிலகினால் எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்? அவருடைய சத்தம் அப்பொழுது பூமியை அசையப்பண்ணினது; இன்னும் ஒருமுறை நான் பூமியை மட்டுமல்ல, வானத்தையும் அசையப்பண்ணுவேன் என்று இப்பொழுது வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். இன்னும் ஒருமுறை என்கிற சொல்லானது அசையாதவைகள் நிலைத்திருப்பதற்காக, அசைவுள்ளவைகள் உண்டாக்கப்பட்டவைகள்போல மாறிப்போகும் என்பதைக் குறிக்கிறது. ஆகவே, அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாக ஆராதனை செய்வதற்காக கிருபையைப் பற்றிக்கொள்ளவேண்டும். நம்முடைய தேவன் சுட்டெரிக்கிற அக்கினியாக இருக்கிறாரே.

எபிரெயர் 12:18-29 பரிசுத்த பைபிள் (TAERV)

நீங்கள் புதிய இடத்திற்கு வந்திருக்கிறீர்கள். உங்களால் தொடமுடிகிற இடமில்லை இது. நெருப்பு எரிவதும், அடர்த்தியான மேகங்களாலும் இருட்டாலும், புயலாலும் சூழ்ந்த மலையில்லை இது. எக்காள சத்தத்தைக் கேட்டோ அல்லது கட்டளையிடும் ஒரு குரலைக் கேட்டோ நீங்கள் அந்த இடத்துக்கு வரவில்லை. வார்த்தைகளின் சத்தமும் எழும்பாது. அந்த சத்தத்தைக் கேட்டவர்கள் மீண்டும் தங்களுக்கு வார்த்தை சொல்லப்படாதபடிக்கு வேண்டிக்கொண்டார்கள். ஏனென்றால் “ஒரு மிருகமாகிலும் அம்மலையைத் தொட்டால் கற்களால் அடிபட்டுச் சாக வேண்டியதிருக்கும்” என்ற கட்டளையைக் கேட்க அவர்கள் விரும்பவில்லை. “நான் பயத்தால் நடுங்குகிறேன்” என்று மோசேயும் சொல்லத்தக்கதாக அந்தக் காட்சி அவ்வளவு பயங்கரமாக இருந்தது. ஆனால் நீங்கள் அது போன்ற இடத்துக்கு வரவில்லை. இந்தப் புதிய இடத்தின் பெயர் சீயோன் மலை. தேவன் வசிக்கும் நகரத்திற்கு வந்திருக்கிறீர்கள். இது பரலோகமான எருசலேம். ஆயிரக்கணக்கான தேவதூதர்கள் மகிழ்ச்சியோடு கூடுகிற இடம். இங்கே பரலோகத்தில் பெயரெழுதப்பட்ட முதற் பேறானவர்களின் சர்வ சங்கமாகிய சபை உள்ளது. எல்லோரையும் நியாயம் தீர்க்கிற நீதிபதியாக தேவன் இருக்கிறார். முழுமையாக்கப்பட்ட நீதிமான்களின் ஆவிகள் உள்ளன. இயேசுவிடம் வந்திருக்கிறீர்கள். அவரே தம் மக்களுக்கு தேவனிடமிருந்து புதிய உடன்படிக்கையைக் கொண்டு வந்தவர். ஆபேலின் இரத்தம் பேசியதைவிட நன்மைகளைப் பேசுகிற, தெளிக்கப்பட்ட இயேசுவின் இரத்தமிருக்கும் இடத்துக்கு நீங்கள் வந்து சேர்ந்தீர்கள். எச்சரிக்கையாய் இருங்கள். தேவன் பேசும்போது கவனிக்கத் தவறாதீர்கள். பூமியில் எச்சரிக்கப்பட்டபோதும் கூட இஸ்ரவேல் மக்கள் இதுபோலத்தான் கவனிக்க மறுத்தார்கள். அதனால் அவர்களால் தப்பிக்க முடியாமல் போய்விட்டது. இப்போது பரலோகத்திலிருந்து தேவன் பேசுகிறார். அதைக் கவனிக்க மறுக்கிறவர்கள் முன்பைவிட மோசமான நிலையை அடைவார்கள். அவருடைய பேச்சு அப்போது பூமியை அசைத்தது. இப்பொழுதோ அவர், “இன்னொருமுறை நான் பூமியை மாத்திரமல்ல, வானத்தையும் அசைப்பேன்” என்று வாக்குறுதி அளித்திருக்கிறார். “இன்னொரு முறை” என்பது என்னால் உருவாக்கப்பட்டவை எல்லாம் அழிக்கப்படும் எனப் பொருள்படும். அவை அசையத்தக்க பொருட்களே. அசைக்கக் கூடாத பொருட்களே என்றும் நிலைத்திருக்கும். அசைக்கப்பட முடியாத ஓர் இராஜ்யத்தை நாம் பெற்றுக்கொண்டிருப்பதால் நாம் நன்றி சொல்லவேண்டும். மிகவும் அச்சத்தோடும் மரியாதையோடும் கூடிய ஒப்புக்கொள்ளத்தக்க ஒரு வழியில் நாம் தேவனை வழிபடவேண்டும். ஏனென்றால் நமது தேவன் அனைத்தையும் அழிக்கும் நெருப்பைப் போன்றவர்.