அப்போஸ்தலருடைய நடபடிகள் 19

19
எபேசு பட்டணத்தில் பவுல்
1அப்பொல்லோ கொரிந்து பட்டணத்தில் இருக்கையில், பவுல் தரைவழியாகப் பிரயாணம் செய்து எபேசு பட்டணத்திற்கு வந்தான். அங்கே பவுல் சில சீடர்களைக் கண்டான். 2அவன் அவர்களிடம், “நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியானவரைப் பெற்றீர்களா?” என்று கேட்டான்.
அதற்கு அவர்கள், “பரிசுத்த ஆவியானவர் என்று ஒருவர் இருக்கின்றார் என்றுகூட நாங்கள் கேள்விப்படவில்லை” என்றார்கள்.
3அப்போது பவுல், “அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானத்தைப் பெற்றீர்கள்?” என்று கேட்டான்.
அதற்கு அவர்கள், “யோவானுடைய ஞானஸ்நானம்” என்றார்கள்.
4எனவே பவுல், “யோவானின் ஞானஸ்நானமானது, மனந்திரும்புதலின் ஞானஸ்நானமே. அவன் மக்களிடம், தனக்குப் பின்வருகின்றவரான இயேசுவிலேயே அவர்கள் விசுவாசம் வைக்க வேண்டும் என்று சொன்னான்” என்றான். 5அவர்கள் இதைக் கேட்டு, ஆண்டவர் இயேசுவின் பெயரில் ஞானஸ்நானம் பெற்றார்கள். 6பின்பு பவுல் அவர்கள்மீது தனது கைகளை வைத்தபோது பரிசுத்த ஆவியானவர் அவர்கள்மீது இறங்கினார். அவர்கள் பிறமொழிகளைப் பேசி, இறைவாக்கு உரைத்தார்கள். 7அங்கே ஏறக்குறைய, பன்னிரண்டு பேர் இருந்தார்கள்.
8பவுல் ஜெபஆலயத்திற்குள் சென்று துணிவுடன் பேசினான். அங்கே மூன்று மாதங்களாக இறைவனுடைய அரசைக் குறித்து, மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய விதத்தில் விவாதித்துக் கொண்டிருந்தான். 9ஆனால் அவர்களில் சிலர் பிடிவாதமுள்ளவர்களாகி விசுவாசிக்க மறுத்தார்கள். அவர்கள் வெளிப்படையாக கிறிஸ்துவின் மார்க்கத்தைக்#19:9 மார்க்கத்தை – கிரேக்க மொழியில் வழி என்று மட்டுமே குறிக்கப்பட்ட இது கிறிஸ்துவின் மார்க்கத்தை குறிக்கிறது. குறித்து தீமையாய்ப் பேசினார்கள். எனவே பவுல் சீடர்களைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு அவ்விடத்தைவிட்டுப் போய் திறன்னு என்பவனின் கல்விக்கூடத்திலே ஒவ்வொரு நாளும் கலந்துரையாடல்களை நடத்தினான். 10இது இரண்டு வருடங்களாக தொடர்ந்து நடைபெற்றது. இதனால், ஆசியா மாகாணத்தில் வாழ்ந்த யூதர், கிரேக்கர் அனைவரும் கர்த்தரின் வார்த்தையைக் கேட்டார்கள்.
11இறைவன் பவுலைக் கொண்டு மிகப் பெரிய அற்புதங்களைச் செய்தார். 12பவுலின் உடலில் பட்ட கைக்குட்டைகளையும், மேலாடைகளையும் கொண்டுபோய் நோயாளிகள் மீது போட்டபோது அவர்களுடைய வியாதிகள் குணமடைந்தன. தீய ஆவிகள் அவர்களைவிட்டு வெளியேறின.
13அப்போது, பேய்களைத் துரத்தும் சில யூதர் வெவ்வேறு இடங்களுக்குப் போய் அசுத்த ஆவி பிடித்திருந்தவர்களின் மேல் ஆண்டவர் இயேசுவின் பெயரை உபயோகிக்க முயன்றார்கள். அவர்கள், “பவுல் பிரசங்கிக்கின்ற இயேசுவின் பெயராலே வெளியே வரும்படி நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்” என்று சொன்னார்கள். 14யூத தலைமை மதகுருவான ஸ்கேவாவின் ஏழு மகன்களே இவ்வாறு செய்தார்கள். 15ஒரு நாள் அந்த அசுத்த ஆவி அவர்களிடம், “இயேசுவை எனக்குத் தெரியும், பவுலையும் அறிந்திருக்கிறேன்; ஆனால் நீங்கள் யார்?” என்று திருப்பிக் கேட்டது. 16பின்பு அசுத்த ஆவியுள்ள மனிதன் அவர்கள்மீது பாய்ந்து, அவர்கள் எல்லோரையும் தாக்கி திணறடித்தான். அவன் அவர்களை அதிகமாக அடித்ததனால் அவர்கள் அந்த வீட்டை விட்டு இரத்தக் காயங்களுடன் உடைகளின்றி ஓடிப் போனார்கள்.
17எபேசு பட்டணத்திலுள்ள யூதரும் கிரேக்கரும் இதை அறிந்தபோது அவர்கள் எல்லோருக்கும் பயமுண்டாயிற்று. ஆண்டவர் இயேசுவின் பெயர் மகிமைப்பட்டது. 18விசுவாசித்தவர்களில் அநேகர் முன்வந்து தாம் கடைபிடித்து வந்த தீய வழக்கங்களை ஏற்றுக்கொண்டு அவற்றை பகிரங்கமாக வெளிப்படுத்தினார்கள். 19மந்திரவித்தையில் ஈடுபட்டிருந்த பலர், தங்களுடைய புத்தகச் சுருள்களைக் கொண்டுவந்து பகிரங்கமாக எரித்தார்கள். அந்தப் புத்தகச் சுருள்களின் பெறுமதியை அவர்கள் கணக்கிட்டபோது, ஐம்பதாயிரம் வெள்ளிக் காசு#19:19 ஐம்பதாயிரம் வெள்ளிக் காசு – இது மிக அதிக பணத் தொகைக்குச் சமமாகும் பெறுமதியுடையதாய் இருந்தது. 20இவ்விதமாய், கர்த்தரின் வார்த்தை எங்கும் பரவி வல்லமையாய்ப் பெருகியது.
21இவையெல்லாம் நடந்ததன் பின், பவுல் மக்கெதோனியா, அகாயா நாடுகள் வழியாக எருசலேமுக்குப் போக ஆவியில் தீர்மானித்தான். “நான் அங்கு போன பின், ரோமுக்கும் போக வேண்டும்” என்று சொன்னான். 22அவன் தனது உதவியாளர்களில் தீமோத்தேயு, எரஸ்து ஆகிய இருவரையும் மக்கெதோனியாவுக்கு அனுப்பினான். தானோ ஆசியா மாகாணத்திலே இன்னும் சிறிது காலம் தங்கினான்.
எபேசு பட்டணத்தில் கலவரம்
23அக்காலத்தில் கிறிஸ்துவின் மார்க்கத்தைக்#19:23 மார்க்கத்தை – கிரேக்க மொழியில் வழி என்று மட்டுமே குறிக்கப்பட்ட இது கிறிஸ்துவின் மார்க்கத்தை குறிக்கிறது. குறித்து, ஒரு பெரிய குழப்பம் உண்டாயிற்று. 24தேமேத்திரியு என்னும் பெயருள்ள ஒரு பொற்கொல்லன்#19:24 கொல்லன் – கிரேக்க மொழியில், வெள்ளி நாணயங்களையும் பாத்திரங்களையும் செய்பவன் என்றுள்ளது. இருந்தான். அவன் அர்த்தமிஸ் தேவதையின் கோவிலை வெள்ளியினால் வடிவமைத்து, அந்தத் தொழிலைச் செய்பவர்களுக்கு நல்ல வியாபாரத்தை ஏற்படுத்திக் கொடுத்திருந்தான். 25அவன் அந்தத் தொழில் செய்கின்றவர்களையும், இந்த வியாபாரத்தில் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களையும் ஒன்றுகூட்டி அவர்களிடம், “மக்களே, இந்த வியாபாரத்திலிருந்து, நாம் நல்ல வருமானத்தைப் பெற்று வருகின்றோம் என்பது உங்களுக்குத் தெரியும். 26பவுல் என்பவன் கைகளினால் செய்யப்பட்டவை தெய்வங்கள் அல்ல என்று சொல்லி பெருந்திரளான மக்களை நம்பும்படி செய்து, தன் பக்கமாகத் திரும்பச் செய்திருக்கின்றான். எபேசுவில் மட்டுமல்ல, முழு ஆசியா மாகாணத்திலுமே அவன் இப்படிச் செய்திருக்கின்றான். இதை நீங்கள் கண்டும் கேட்டும் இருக்கின்றீர்கள். 27நம் வியாபாரத்தின் நற்பெயருக்கு இழுக்கு ஏற்படும் ஆபத்து உருவாகியிருப்பது மட்டுமல்ல, மாபெரும் தேவதையான அர்த்தமிசின் கோவிலானது மதிப்பிழந்தும் போகப் போகின்றது. ஆசியா மாகாணத்திலும், உலகமெங்கும் வணங்கப்படும் அந்தத் தேவதையின் மகத்துவமும் இல்லாது போய்விடும்” என்றான்.
28அவர்கள் இதைக் கேட்டபோது மிகவும் கோபம்கொண்டு, “எபேசியரின் அர்த்தமிஸ் தேவதையே வாழ்க!” என்று சத்தமிட்டார்கள். 29உடனேயே முழுப்பட்டணமும் கலவரமடைந்தது. கூடியிருந்த மக்களோ ஒன்றுதிரண்டு, பவுலுடன் பயணம் செய்தவர்களான மக்கெதோனியாவைச் சேர்ந்த காயு, அரிஸ்தர்க்கு என்பவர்களைப் பிடித்து, அரங்க மண்டபத்திற்குள் இழுத்துக்கொண்டு போனார்கள். 30பவுல் மக்கள் கூட்டத்திற்கு முன் போக விரும்பினான். ஆனால் சீடர்களோ அவனைப் போக விடவில்லை. 31பவுலின் நண்பர்களான அந்த மாகாணத்தின் அதிகாரிகளில் சிலரும்கூட அவனை அரங்க மண்டபத்திற்குள் போக வேண்டாம் என்று கூறி அவனுக்குச் செய்தியனுப்பினார்கள்.
32அங்கே கூடியிருந்த மக்கள் மிகக் குழப்பமடைந்திருந்தார்கள். சிலர் ஒன்றைச் சொல்லி சத்தமிட்டுக் கொண்டிருக்க, மற்றவர்களோ வேறு ஏதோ ஒன்றைச் சொல்லி சத்தமிட்டார்கள். அவர்களில் அநேகருக்குத் தாங்கள் ஏன் அங்கு வந்திருக்கிறார்கள் என்பதுகூட தெரிந்திருக்கவில்லை. 33யூதரோ, அலெக்சாந்தர் என்பவனை கூட்டத்திற்கு முன்னே தள்ளிவிட்டார்கள். சிலர் அவனைப் பார்த்து, ஏதோ சொல்லிச் சத்தமிட்டார்கள். அப்போது அவன், நியாயத்தை எடுத்துக் கூறுவதற்காக மக்களை மௌனமாய் இருக்கும்படி சைகை காட்டினான். 34ஆனால் அவன் ஒரு யூதன் என்று அவர்கள் அறிந்தபோது இரண்டு மணி நேரமாக, “எபேசியர்களின் அர்த்தமிஸ் தேவதையே வாழ்க!” என்று ஒரே குரலில் சத்தமிட்டார்கள்.
35அந்த நகரத்தின் ஆணையாளர், மக்கள் கூட்டத்தை அமைதிப்படுத்தி அவர்களிடம், “எபேசு பட்டணத்தாரே, மகா அர்த்தமிஸ் உருவச் சிலையானது வானத்திலிருந்து விழுந்தது என்பதையும், இந்த தேவதைக்கும் உருவச் சிலைக்கும் எபேசு பட்டணமே பாதுகாவலின் இடமாக இருக்கின்றது என்பதையும் இந்த முழு உலகமும் அறியுமே. 36இவை மறுக்க முடியாத உண்மைகளாய் இருப்பதனால், நீங்கள் எதையுமே முன்யோசனையின்றி செய்யாமல் அமைதியாய் இருக்க வேண்டும். 37நீங்கள் இந்த மனிதரை இங்கு கொண்டுவந்திருக்கிறீர்கள். ஆனால் இவர்களோ ஆலயங்களைக் கொள்ளையடிக்கவும் இல்லை, நமது தேவதையை நிந்தித்துப் பேசவும் இல்லை. 38எனவே தேமேத்திரியுவுக்கும் அவனுடைய சக தொழிலாளிகளுக்கும் எவர் மீதாவது ஒரு முறைப்பாடு இருக்குமானால் அதற்காக நீதிமன்றங்கள் திறந்தே இருக்கின்றன. அங்கே மாகாண அதிபதிகளும் இருக்கின்றார்கள். எனவே அவர்கள் தங்கள் குற்றச்சாட்டுக்களை அங்கே எடுத்துச் சொல்லட்டும். 39இதைவிட வேறு ஏதாவது உங்களுக்கு இருக்குமானல், அது சட்டமன்றக் கூட்டத்திலே தீர்த்துக்கொள்ளப்பட வேண்டும். 40இன்று நடந்த இந்த சம்பவத்தினால் நாம் கலகம் செய்ததாக அரசாங்கத்தினால் குற்றம் சாட்டப்படக் கூடிய ஒரு ஆபத்தில் இப்போது இருக்கின்றோம். அவ்வாறு குற்றம் சாட்டப்பட்டால், இந்தக் கலகம் நியாயமானது எனக் காட்ட நம்மால் முடியாது, ஏனெனில், நாம் சொல்லக்கூடிய காரணம் எதுவும் இல்லை” என்றான். 41அவன் இதைச் சொல்லி முடித்த பின்பு கூடியிருந்தவர்களைக் கலைந்து போகும்படி செய்தான்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

அப்போஸ்தலருடைய நடபடிகள் 19: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்