அப்போஸ்தலருடைய நடபடிகள் 20
20
மக்கெதோனியா, கிரேக்கம் வழியாக பவுலின் பயணம்
1கலகம் ஓய்ந்த பின் பவுல் சீடர்களை அழைத்து அவர்களை உற்சாகப்படுத்தினான். பின் அவர்களிடம் விடைபெற்று மக்கெதோனியாவுக்குப் போகப் புறப்பட்டான். 2அவன் அந்தப் பகுதிகள் வழியாகப் போய் மக்களை அதிகமாய் உற்சாகப்படுத்திப் பேசினான். பின்பு அவன் கிரேக்க நாட்டிற்கு வந்தான். 3அங்கே அவன் மூன்று மாதங்கள் தங்கியிருந்தான். ஆயினும், அவன் கப்பல் மூலமாக சீரியாவுக்குப் புறப்பட இருக்கையில் யூதர்கள் அவனுக்கு எதிராய் சதி செய்தார்கள். அதனால் அவன், திரும்பி மக்கெதோனியா வழியாகப் போகத் தீர்மானித்தான். 4அவனுடனேகூட பெரோயா பட்டணத்தைச் சேர்ந்த பீருவின் மகன் சோபத்தர், தெசலோனிக்கேயாவைச் சேர்ந்த அரிஸ்தர், செக்குந்துஸ், தெர்பையைச் சேர்ந்த காயு, தீமோத்தேயு, ஆசியா மாகாணத்தைச் சேர்ந்த தீகிக்கு, துரோபீப் ஆகியோரும் போனார்கள். 5இவர்கள் எங்களுக்கு முன்பாகப் போய் துரோவா பட்டணத்தில் எங்களுக்காகக் காத்திருந்தார்கள். 6ஆனால் நாங்களோ, புளிப்பூட்டப்படாத அப்பப் பண்டிகைக்குப் பின் பிலிப்பி பட்டணத்திலிருந்து கப்பல் மூலமாகப் புறப்பட்டு ஐந்து நாட்களின் பின் துரோவா பட்டணத்திற்கு வந்து அவர்களோடு சேர்ந்து கொண்டோம். அங்கே நாங்கள் ஏழு நாட்கள் தங்கியிருந்தோம்.
ஐத்திகு உயிர் பெறுதல்
7வாரத்தின் முதலாம் நாளிலே, நாங்கள் அப்பம் பகிர்ந்துகொள்வதற்கு ஒன்றுகூடியிருந்தோம். பவுல் மக்களுக்குப் பிரசங்கித்துக் கொண்டிருந்தான். அவன் மறுநாள் போக எண்ணியிருந்ததனாலே, நள்ளிரவு வரை பேசிக் கொண்டேயிருந்தான். 8நாங்கள் கூடியிருந்த மேல்வீட்டு அறையிலே பல விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. 9ஐத்திகு எனப்பட்ட ஒரு வாலிபன் ஜன்னலில் உட்கார்ந்து பவுல் தொடர்ந்து பேசுவதைக் கேட்டு ஆழ்ந்த நித்திரை மயக்கத்தில் இருந்தான். அவன் முழுவதுமாய் ஆழ்ந்த நித்திரைக்குள்ளானபோது மூன்றாம் மாடியிலிருந்து கீழே விழுந்தான். விழுந்தவனைத் தூக்கியபோது, அவன் இறந்திருந்தான். 10பவுல் கீழே இறங்கிப் போய் அந்த வாலிபன் மீது விழுந்து அவனைத் தனது கைகளினால் அணைத்துக்கொண்டு, அங்கே நின்றவர்களிடம், “பயப்பட வேண்டாம். இவன் உயிரோடிருக்கிறான்” என்று சொல்லி அவனை அவர்களிடம் ஒப்படைத்தான். 11பின்பு அவன், மேல்மாடிக்குத் திரும்பவும் போய் விசுவாசிகளுடன் அப்பம் பகிர்ந்து சாப்பிட்டான். அவன் விடியும் வரை அவர்களோடு கலந்துரையாடிவிட்டு, அவர்களைவிட்டுப் புறப்பட்டுச் சென்றான். 12மக்கள் அந்த வாலிபனை உயிருடன் வீட்டிற்குக் கொண்டுபோனார்கள். அது அவர்களுக்கு பெரிதும் ஆறுதலாயிருந்தது.
எபேசுவில் மூப்பருக்கு பிரியாவிடை
13பவுல் தரை வழியாக ஆசோ பட்டணத்திற்குப் போக ஏற்கெனவே தீர்மானித்திருந்ததால் நாங்கள் அவனுக்கு முன்னே கப்பலேறி ஆசோ பட்டணத்திற்குப் போனோம். அங்கே பவுலை எங்களுடனே கப்பலில் ஏற்றிக்கொள்வது எங்கள் நோக்கமாயிருந்தது. 14ஆசோ பட்டணத்தில் அவன் எங்களை சந்தித்தபோது அவனையும் கப்பலில் ஏற்றிக்கொண்டு மித்திலேனே பட்டணத்திற்குப் போனோம். 15மறுநாள் நாங்கள் கப்பலில் கீயுஸ் தீவைப் போய்ச் சேர்ந்தோம். அதற்கடுத்த நாள் சாமு தீவைக் கடந்து அதற்கடுத்த நாள் மிலேத்து பட்டணத்திற்குப் போய்ச் சேர்ந்தோம். 16பெந்தெகொஸ்தே நாளிலே எருசலேமைச் சென்றடைய வேண்டுமென்று பவுல் ஆவலுடையவனாய் இருந்தான். ஆதலால் அவன் ஆசியா மாகாணத்திலே காலத்தைக் கழிப்பதைத் தவிர்த்துக்கொள்ள விரும்பி எபேசுவில் தரையிறங்காமல் கடந்து போகத் தீர்மானித்தான்.
17பவுல், மிலேத்து பட்டணத்திலிருந்து ஆளனுப்பி, எபேசு பட்டணத்துத் திருச்சபையின் மூப்பர்களைத் தன்னிடம் வரவழைத்தான். 18அவர்கள் அவனிடம் வந்தபோது அவன் அவர்களைப் பார்த்து, “நான் ஆசியா மாகாணத்துக்கு வந்த நாள் தொடங்கி, உங்களுடன் இருந்த காலம் முழுவதும் எப்படி வாழ்ந்தேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். 19நான் அதிக தாழ்மையோடும் கண்ணீரோடும் ஆண்டவருக்கு ஊழியம் செய்தேன். ஆனால் நான் யூதரின் சூழ்ச்சிகளினாலே மிகவும் சோதிக்கப்பட்டேன். 20உங்களுக்கு பயனுள்ளதாய் இருக்கக் கூடிய எதையும், உங்களுக்கு பிரசங்கிப்பதற்கு நான் தயங்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். நான் வெளிப்படையாகவும், வீடுவீடாகச் சென்றும் உங்களுக்குக் கற்பித்தேன். 21யூதர், கிரேக்கர் ஆகிய இரு பிரிவினருக்கும், அவர்கள் மனந்திரும்பி, இறைவனிடம் திரும்ப வேண்டும் என்றும் நம் ஆண்டவர் இயேசுவில் விசுவாசமாய் இருக்க வேண்டும் என்றும் நான் அறிவித்தேன்.
22“இப்போதும் பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டவனாய், நான் எருசலேமுக்குப் போகின்றேன். அங்கே எனக்கு என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியாது. 23நான் சிறையில் இடப்படுவேன் என்றும், துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்றும் எல்லாப் பட்டணங்களிலும் பரிசுத்த ஆவியானவர் என்னை எச்சரிக்கிறார். இதை மட்டுமே நான் அறிவேன். 24ஆயினும் என் வாழ்வை மதிப்புக்குரிய ஒன்றாக நான் கருதவில்லை. எனக்கு ஒப்புவிக்கப்பட்ட ஓட்டத்தை ஓடி முடிக்கவும், ஆண்டவர் இயேசு எனக்குக் கொடுத்திருக்கிற ஊழியத்தை நிறைவேற்றவுமே நான் விரும்புகிறேன். இறைவனுடைய கிருபையின் நற்செய்திக்கு சாட்சி கொடுக்கும் ஊழியத்தையே அவர் எனக்குக் கொடுத்திருக்கிறார்.
25“இப்போது நான் உங்கள் மத்தியில் இறைவனுடைய அரசைப் பற்றிப் பிரசங்கித்ததைக் கேட்ட நீங்கள் எவரும், எனது முகத்தை இனி ஒருபோதும் காண மாட்டீர்கள் என்பதை நான் அறிவேன். 26ஆகவே உங்களில் யாராவது கெட்டழிந்து போனால் அந்த இரத்தப் பழி என்மேல் சுமத்தப்படாது என்று இன்று நான் உங்களுக்கு உறுதியாய் அறிவிக்கிறேன். 27ஏனெனில் இறைவனுடைய முழுத் திட்டத்தையும் உங்களுக்கு நான் அறிவிப்பதற்குத் தயங்கவில்லை. 28உங்களைக் குறித்து நீங்கள் கவனமாயிருங்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களை மேற்பார்வையாளர்களாக நியமித்த, உங்கள் மந்தை முழுவதைக் குறித்தும் கவனமாயிருங்கள். இறைவனுடைய திருச்சபைக்கு மேய்ப்பர்களாய் இருங்கள். அதை அவர் தமது சொந்த இரத்தத்தையே விலையாகக் கொடுத்து பெற்றுக்கொண்டாரே! 29நான் போன பின் உங்களிடையே கொடிய ஓநாய்கள் வரும் என்றும், அவை மந்தையைத் தாக்காது விடுவதில்லை என்றும் எனக்குத் தெரியும். 30தங்கள் பக்கமாய் சீடர்களை இழுத்துக்கொள்வதற்காக உண்மையைத் திரித்துக் கூறுகின்ற சிலர் உங்கள் மத்தியிலிருந்தும் எழும்புவார்கள். 31எனவே நீங்கள் கவனமாயிருங்கள்! நான் மூன்று வருடங்களாக இரவும் பகலும் உங்களைக் கண்ணீருடன் எச்சரிக்கை செய்ததை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
32“இப்போது நான் உங்களை இறைவனுக்கும், அவருடைய கிருபையுள்ள வார்த்தைக்கும் ஒப்புக்கொடுத்திருக்கிறேன். அந்த வார்த்தையே உங்களைக் கட்டியெழுப்பி பரிசுத்தமாக்கப்பட்ட எல்லோருடனும்கூட உங்களுக்கும் உரிமைச் சொத்தைக் கொடுக்க வல்லமையுள்ளது. 33எவருடைய வெள்ளிக்கோ, தங்கத்திற்கோ, உடைக்கோ நான் ஆசைப்பட்டதில்லை. 34என்னுடைய தேவைகளுக்காகவும், என்னுடன் இருந்தவர்களின் தேவைகளுக்காகவும் என் கைகளினாலேயே வேலை செய்தேன் என்பது உங்களுக்குத் தெரியும். 35நாம் இவ்விதம் கஷ்டப்பட்டு வேலை செய்தே வறியோருக்கு உதவி செய்ய வேண்டும் என்று நான் செய்த எல்லாவற்றிலும் உங்களுக்கு ஒரு முன்மாதிரியைக் காண்பித்தேன். ‘பெற்றுக்கொள்வதைப் பார்க்கிலும் கொடுப்பதே அதிக ஆசீர்வாதம்’ என்று ஆண்டவர் இயேசு, தாமே சொன்னதையும் உங்களுக்கு நினைவுபடுத்தினேன்” என்றான்.
36அவன் இதைச் சொன்ன பின்பு அவர்கள் எல்லோருடனும் முழந்தாழிட்டு மன்றாடினான். 37அவர்கள் எல்லோரும் அவனை அணைத்து முத்தமிட்டு அழுதார்கள். 38“நீங்கள் எனது முகத்தை இனி ஒருபோதும் காண மாட்டீர்கள்” என்று அவன் சொன்ன அந்த வார்த்தைகள் அவர்களை ஆழ்ந்த துக்கத்திற்குள்ளாக்கின. பின்பு அவர்கள் அவனை அழைத்துக்கொண்டு கப்பல் வரைக்கும் போனார்கள்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
அப்போஸ்தலருடைய நடபடிகள் 20: TRV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.