லூக்கா எழுதிய சுவிசேஷம் 1:36-56

லூக்கா எழுதிய சுவிசேஷம் 1:36-56 TAERV

உனது உறவினளாகிய எலிசபெத்தும் கருவுற்றிருக்கிறாள். அவள் மிகவும் வயதானவள். குழந்தை பெற முடியாதவள் என அவள் நினைக்கப்பட்டாள். ஆனால் ஒரு குமாரனைப் பெறப்போகிறாள். இது அவளுக்கு ஆறாவது மாதம். தேவனால் எந்தக் காரியத்தையும் செய்ய முடியும்” என்றான். மரியாள், “நான் கர்த்தருக்குப் பணிவிடை செய்யும் பெண். நீங்கள் சொன்னபடியே எனக்கு நடக்கட்டும்” என்றாள். பின் தூதன் சென்றுவிட்டான். மலைநாடான யூதேயாவில் உள்ள பட்டணத்துக்கு மரியாள் எழுந்து விரைந்து சென்றாள். அவள் சகரியாவின் வீட்டுக்குள் நுழைந்து எலிசபெத்தை வாழ்த்தினாள். மரியாளின் வாழ்த்துதலை எலிசபெத் கேட்டதும் இன்னும் பிறக்காமல் எலிசபெத்துக்குள் இருக்கும் குழந்தை துள்ளிக் குதித்தது. எலிசபெத் உரத்த குரலில் “வேறெந்தப் பெண்ணைக் காட்டிலும் அதிகமாக தேவன் உன்னை ஆசீர்வதித்துள்ளார். உனக்குப் பிறக்கவிருக்கும் குழந்தையையும், தேவன் ஆசீர்வதித்திருக்கிறார். கர்த்தரின் தாயாகிய நீ என்னிடம் வந்துள்ளாய். அத்தனை நல்ல காரியம் எனக்கு நடந்ததேன்? உன் சத்தத்தை நான் கேட்டதும் எனக்குள் இருக்கும் குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. உன்னிடம் கர்த்தர் கூறியதை நீ நம்பியதால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறாய். இது நடக்கக் கூடியதென நீ நம்பினாய்” என்று சொன்னாள். அப்போது மரியாள், “எனது ஆத்துமா கர்த்தரைப் போற்றுகிறது. தேவன் எனது இரட்சகர். எனவே என் உள்ளம் அவரில் மகிழ்கிறது. நான் முக்கியமற்றவள், ஆனால் தேவன் தனது கருணையைப் பணிப்பெண்ணாகிய எனக்குக் காட்டினார். இப்போது தொடங்கி, எல்லா மக்களும் என்னை ஆசீர்வதிக்கப்பட்டவள் என்பர். ஏனெனில் ஆற்றல் மிகுந்தவர் எனக்காக மேன்மையான செயல்களைச் செய்தார். அவர் பெயர் மிகத் தூய்மையானது. தேவனை வணங்கும் மக்களுக்கு அவர் எப்போதும் இரக்கம் செய்வார். தேவனின் கைகள் பலமானவை. செருக்குற்ற மனிதர்களையும் சுயதம்பட்டக்காரர்களையும் அவர் சிதறடிக்கிறார். சிம்மாசனத்தினின்று மன்னர்களைக் கீழே இறக்குகிறார். தாழ்ந்தவர்களை உயர்த்துகிறார். நல்ல பொருட்களால் பசித்த மக்களை நிரப்புகிறார். செல்வந்தரையும், தன்னலம் மிகுந்தோரையும் எதுவுமின்றி அனுப்பிவிடுகிறார். தனக்குப் பணிசெய்வோருக்கு அவர் உதவினார். அவர்களுக்குத் தன் இரக்கத்தை அருளினார். நம் முன்னோருக்கும் ஆபிரகாமுக்கும் தம் குழந்தைகளுக்கும் அவர் கொடுத்த வாக்குறுதியை என்றைக்கும் நிறைவேற்றுகிறார்” என்று சொன்னாள். மரியாள் எலிசபெத்துடன் ஏறக்குறைய மூன்று மாதகாலம்வரைக்கும் தங்கி இருந்தாள். பின்பு மரியாள் தனது வீட்டுக்குச் சென்றாள்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த லூக்கா எழுதிய சுவிசேஷம் 1:36-56