YouVersion Logo
Search Icon

தேவனுக்கே முதலிடம் கொடுங்கள்Sample

தேவனுக்கே முதலிடம் கொடுங்கள்

DAY 4 OF 5

“தேவனின் உதவியோடு வாழ்வின் போராட்டங்களில் வெற்றி பெறுதல்”

நமது வாழ்நாள் முழுக்க நமக்கெதிரான போராட்டங்கள்   இருந்துகொண்டேயிருக்கும். ஒரு பக்கம், மேற்கொள்ளக் கடினமாயிருக்கும் பழைய பாவ இயல்பின் விளைவுகளான சோதனைகளும்   இச்சைகளும் தொந்தரவு செய்து கொண்டேயிருக்கும். தேவனோடு நாம் தொடர்ந்து   நடக்கும்போது, இவைகளின்   ஆதிக்கம் பலமிழந்துவிடும். மறுபக்கம், நமது வாழ்வில் தங்கியிருக்கும் பரிசுத்த ஆவியானவரின் செல்வாக்கு அதிகர்த்துக்கொண்டேயிருக்கும். 

ஒன்றுக்கொன்று எதிரான இந்த   இரண்டு வல்லமைகளும் கலாத்தியருக்கு எழுதிய நிருபத்தில் விளக்கப்பட்டிருக்கின்றன:

“ பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள். மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது.”-கலாத்தியர் 5:16-17.

“ஆவியினால் பிழைத்திருக்கும்படி” தேவ வார்த்தை நம்மை   ஊக்குவிக்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், நமது வாழ்வில் கிரியை செய்யும் பாவ இயல்புக்கு விரோதமாக பரிசுத்த ஆவியானவர்   நம்மில் கிரியை செய்து ஜெயம்கொள்ளும்படி நாம் அவரை அனுமதிக்க வேண்டும். 

அனேகவேளைகளில், இது சொல்வதற்கு எளிதாகவும்,   நடைமுறைப்படுத்த கடினமாகவும் இருக்கும். சுயத்தை மையமாகக்கொண்ட நமது ஆசைகளையும், லட்சியங்களையும் நிறவேற்றும்படியான தீர்மானங்களை எடுப்பதற்கே நமது பாவ   இயல்பு நம்மைத் தூண்டிக்கொண்டேயிருக்கும்.

இதைத்தான் நாம் சோதனை என்று சொல்கிறோம்.   யாக்கோபு இதனை இவ்வாறு சொல்கிறார்:

“சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப் படுகிறான்.”

-யாக்கோபு 1:13-14.

நமது சோதனையில் விழுந்துவிடும்படி தீர்மானிக்காதவரையில்   அது பாவமாகாது. 

“பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்”

– யாக்கோபு 1:15.

எனினும்,   ஆச்சரியப்படும்விதமாக, கிறிஸ்தவர்கள்   அனைவருக்கும் அளிக்கப்பட்ட தேவனுடைய அளவற்ற அன்பு, கிருபையின் வெளிப்பாடாக, தேவன் நம்மை   மன்னித்து நமது எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மைச் சுத்திகரிக்கிறார்.   நூற்றுக்கு நூறு பங்கு முற்றிலும் நாம் மன்னிக்கப்படுகிறோம்.

“நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்”- 1 யோவான் 1:9.

ஆனாலும், பாவத்தைக்   கண்டுகொள்ளாமல் நாம் அனுமதித்துக் கொண்டேயிருப்போமானால், அது ஆபத்தானது. தேவன் நம்மை மன்னித்து, சுத்திகரித்தாலும், பாவத்தினால்   கெடுக்கப்பட்ட சூழலையும், பாவத்தின்   விளைவுகளையும் நம்மிலிருந்து எடுத்துப்போடுவார் என்கிற அவசியம் இல்லை. நாம்   மோசமான தீர்மானங்களை எடுக்கும் கடினமான வேளைகளிலும் தேவன் நமக்கு உதவுவார்   என்றாலும், முதலாவதாக   அப்படிப்பட்ட மோசமான தீர்மானங்களைத் தவிர்ப்பதே மிகவும் நல்லது. 

கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் நிருபம், சோதனையையும் பாவத்தையும் தீவிரமாக மேற்கொள்ளுவதின் இரண்டு முக்கிய   அம்சங்களை விளக்குகிறது:

“மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்”-1 கொரி 10:13

முதலாவது உண்மை, நமது போராட்டங்களில் நாம் தனியாக இல்லை. உங்களுக்கு நேரிடுகிற அதே   சோதனைகளிலும், பாவங்களிலும்   30 நாட்கள் அல்லது 30 வருடங்கள் கிறிஸ்தவ அனுபவம் உள்ள மற்ற கிறிஸ்தவர்களும்   தங்கள் வாழ்க்கையில் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். 

இரண்டாவது உண்மை, பாவத்தைத் தவிர்க்கும்படி நாம் தீர்மானம் எடுக்கமுடியாத கடினமான கணம்   வரையிலும் நாம் சோதிக்கப்பட தேவன் அனுமதிக்க மாட்டார். நாம் தப்பிக்கொள்ளும்   வழியை அவர் எப்போதும் அளிப்பார். நமது சோதனைகளின் மத்தியில் அந்த வழியைக்   கண்டுகொள்ளும் சவாலான காரியத்தை நாம் செய்யவேண்டும். 

பாவத்தையும் சோதனைகளையும் நிச்சயமாய் மேற்கொள்ளுவதற்கான வழிமுறைகளை வேதத்தின்   அடிப்படையில் கீழ்க்கண்ட பகுதி விளக்குகிறது. இந்த வாசிப்புத் திட்டத்தை   நடைமுறைப்படுத்துவது, தேவனுக்கு உங்கள் வாழ்வில் முதல் இடத்தைக்   கொடுப்பதற்கான இன்னொரு வழியாகும்!

Day 3Day 5

About this Plan

தேவனுக்கே முதலிடம் கொடுங்கள்

நமது வாழ்வில் தேவனுக்கு முதலிடம் கொடுப்பது என்பது ஒரேயொருமுறை நடக்கும் செயல் அல்ல; அது, ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் வாழ்நாளெல்லாம் நடக்கும் தொடர்நிகழ்வு. நீங்கள் பலவருட அனுபவம் மிக்க கிறிஸ்தவரானாலும் சரி, புதிய விசுவாசியானாலும் சரி, வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்வுக்கு பலனுள்ள வியூகமாக இருக்கிற இந்த வாசிப்புத்திட்டம், உங்களால் புரிந்துகொள்ளக்கூடியதாகவும், நடைமுறையில் பயிற்சிக்கக்கூடியதாகவும் இருக்கும். இது David J. Swandt அவர்கள் எழுதிய “இந்த உலகிற்கும் அப்பால் : கிறிஸ்தவ வளர்ச்சிக்கும் நோக்கத்துக்குமான வழிகாட்டி” (A Christian’s Guide to Growth and Purpose) என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.

More