YouVersion Logo
Search Icon

லேவியராகமம் 4

4
அசம்பாவிதமாகச் செய்த பாவங்களுக்கான காணிக்கைகள்
1கர்த்தர் மோசேயிடம், 2“நீ, இஸ்ரவேல் ஜனங்களிடம் கூற வேண்டியதாவது: செய்யக்கூடாது என கர்த்தர் சொன்ன காரியங்களைச் செய்ய நேர்ந்தாலும், அசம்பாவிதமாக பாவம் செய்ய நேர்ந்தாலும், ஒருவன் கீழ்க்கண்டபடி செய்ய வேண்டும்.
3“அபிஷேகம் பெற்ற ஆசாரியன், ஜனங்கள் குற்றத்திற்கு உட்படத்தக்கதாகப் பாவம் செய்தால் அந்த ஆசாரியன் தன் பாவத்துக்காக கர்த்தருக்குச் சில காணிக்கைகளைச் செலுத்த வேண்டும். அந்த ஆசாரியன் குறையற்ற ஒரு இளங்காளையைப் பாவப் பரிகாரப் பலியாகக் கொண்டு வரவேண்டும். 4ஆசாரியன் ஆசரிப்புக் கூடார வாசலுக்கு கர்த்தரின் சந்நிதானத்திற்கு அந்தக் காளையைக் கொண்டு வரவேண்டும். அவன் அதன் தலையின் மேல் தன் கையை வைத்து அதனைக் கொல்ல வேண்டும். 5பின் அந்த அபிஷேகம் பெற்ற ஆசாரியன் காளையின் இரத்தத்தை எடுத்து ஆசரிப்புக் கூடாரத்திற்குள் கொண்டு வரவேண்டும். 6அவன் தன் விரலால் அந்த இரத்தத்தைத் தொட்டு மகாபரிசுத்த ஸ்தலத்தின் திரைக்கு எதிரே கர்த்தரின் சந்நிதியில் ஏழுமுறை தெளிக்க வேண்டும். 7பின் ஆசாரியன் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து நறுமண பலிபீடத்தின் மூலைகளில் பூச வேண்டும். (இந்த பலிபீடமானது ஆசரிப்புக் கூடாரத்திலே கர்த்தருக்கு முன் இருக்கும்.) காளையின் எல்லா இரத்தத்தையும் தகன பலிபீடத்தின் அடியில் ஊற்ற வேண்டும். (இப்பலிபீடமானது ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் இருக்கும்.) 8அதற்குப் பிறகு, பாவப்பரிகாரப் பலியாகத் தரப்பட்ட காளையின் கொழுப்பு அனைத்தையும் எடுக்க வேண்டும். காளையின் உட்பகுதிகளிலும் அதைச் சுற்றிலும் உள்ள கொழுப்பு முழுவதையும் எடுத்து, 9அவன் அதன் இரண்டு சிறு நீரகங்களையும் அவற்றையொட்டி கீழ்ப்புறத்திலும், மேல்புறத்திலும் ஒட்டி இருக்கிற கொழுப்பையும் கல்லீரலில் இருக்கும் கொழுப்புப் பகுதிகளையும் சிறுநீரகங்களோடு சேர்த்து, 10சமாதானப் பலியின் போது காளையிலிருந்து எடுப்பது போன்று இப்பாகங்களை எடுத்து ஆசாரியன் பலிபீடத்தின் மேல் வைத்து எரிக்க வேண்டும். 11-12ஆனால் ஆசாரியன் காளையின் தோலையும், அதன் குடல்களையும், கழிவுப் பொருட்களையும் தலையிலும் கால்களிலும் உள்ள மாம்சத்தையும் தனியே எடுக்க வேண்டும். அவற்றைக் கூடாரத்திற்கு வெளியே கொண்டுபோய் சாம்பல் கொட்டுகிற சிறப்புக்குரிய இடத்தில் குவிக்க வேண்டும். பின்பு ஆசாரியன் இக்குவியலை விறகுகளின் மேல் அடுக்கி எரிக்க வேண்டும். சாம்பல் குவிக்கப்பட்டிருக்கும் இடத்தில் காளை எரிக்கப்பட வேண்டும்.
13“இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் அறியாமையால் பாவம் செய்து, கர்த்தர் எவற்றைச் செய்யக் கூடாது என்று சொன்னாரோ அவற்றை அவர்கள் தெரியாமல் செய்து பாவத்திற்குரியவர்களாகலாம். 14அவர்கள் தங்கள் பாவங்களை அறிந்துகொள்ளும்போது, அதற்காக ஒரு இளங்காளையைப் பாவப்பரிகார பலியாக தங்கள் முழு நாட்டிற்காகவும் அளிக்க வேண்டும். அதனை அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் முன்பு கொண்டு வரவேண்டும். 15இஸ்ரவேலின் மூப்பர்கள் கர்த்தருக்கு முன்பாக தங்கள் கைகளை அதன் தலையில் வைக்க வேண்டும். பின்னர் அதனை கர்த்தருடைய சந்நிதானத்தில் கொல்ல வேண்டும். 16பின்னர் அபிஷேகம் பெற்ற ஆசாரியன் அக்காளையின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து ஆசரிப்புக் கூடாரத்திற்குள் கொண்டு வர வேண்டும். 17ஆசாரியன் தனது விரலை இரத்தத்தில் தொட்டு கர்த்தருக்கு முன்னால் உள்ள திரையில் ஏழுமுறை தெளிக்க வேண்டும். 18பிறகு ஆசாரியன் கொஞ்சம் இரத்தத்தை எடுத்து பலிபீடத்தின் மூலைப்பகுதிகளில் பூச வேண்டும். (இப்பலிபீடம் ஆசாரிப்புக் கூடாரத்திற்குள் கர்த்தருக்கு முன்னால் இருக்கும்.) பின்பு ஆசாரியன் அக்காளையின் எல்லா இரத்தத்தையும் தகனபலிபீடத்தின் அடியில் ஊற்ற வேண்டும். (இது ஆசாரிப்புக் கூடாரத்தின் வாசலில் இருக்கும்.) 19பின் அக்காளையிடம் உள்ள கொழுப்பு முழுவதையும் எடுத்து பலிபீடத்தின் மேல் எரிக்க வேண்டும். 20பாவப்பரிகாரப் பலியைப் போலவே ஆசாரியன் இதன் பாகங்களையும் செய்து முடிக்க வேண்டும். இதன் மூலம், ஜனங்கள் அனைவரையும் சுத்திகரிக்க முடியும். இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரையும் தேவன் மன்னிப்பார். 21ஆசாரியன் மற்ற காளையைக் கூடாரத்திற்கு வெளியே கொண்டு சென்று முன்பு செய்தது போலவே இதையும் எரித்துவிடவேண்டும். இது முழு சமுதாயத்திற்கான பாவப்பரிகாரப் பலியாகும்.
22“ஒரு ஆட்சியாளன் அசம்பாவிதமாக தன் தேவனாகிய கர்த்தர் செய்யவேண்டாம் என்று கூறியவற்றை மீறி செய்யத்தகாததைச் செய்து பாவத்திற்குரியவனாயிருக்கலாம். 23அந்த ஆட்சியாளன் தனது பாவத்தைத் தெரிந்துகொண்டதும் அவன் எவ்விதக் குறைபாடும் இல்லாத ஆண் வெள்ளாட்டைக் கொண்டு வரவேண்டும். அதுவே அவனது காணிக்கை. 24ஆட்சியாளன் தன் கையை ஆட்டின் தலைமேல் வைத்து, அதனை கர்த்தருக்கு முன்பு தகன பலியிடக் கூடிய இடத்தில் கொல்ல வேண்டும். அந்த வெள்ளாடுதான் பாவப்பரிகார பலியாகும். 25ஆசாரியன் கொஞ்சம் இரத்தத்தைத் தன் விரலால் எடுத்து தகனபலிபீடத்தின் மூலைப் பகுதிகளில் பூச வேண்டும். மிச்சமுள்ள இரத்தத்தைத் தகன பலிபீடத்தின் அடியில் ஊற்ற வேண்டும். 26ஆசாரியன் அந்த ஆட்டின் கொழுப்பு முழுவதையும் பலிபீடத்தின் மேல் எரிக்க வேண்டும். சமாதானப் பலியில் செய்தது போன்றே இதிலும் கொழுப்பை எரித்துவிடவேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ஆசாரியன் ஆட்சியாளனைப் பரிசுத்தப்படுத்திவிடலாம். தேவனும் அவனை மன்னித்துவிடுவார்.
27“பொது ஜனங்களில் ஒருவன் அசம்பாவிதமாக பாவம் செய்துவிடலாம். இப்படி அவன் கர்த்தர் சொன்னதை மீறி செய்யத் தகாததைச் செய்துவிடுகிறான். 28அவன் தான் செய்தது பாவம் என்பதைத் தெரிந்துகொண்டவுடனே அவன் பழுதற்ற பெண் ஆட்டைக் கொண்டு வர வேண்டும். அதுவே அவனுடைய பாவப்பரிகாரப் பலி ஆகும். அவன் செய்த பாவத்திற்காக அவன் அதைக் கொண்டுவர வேண்டும். 29அவன் தன் கையை அதன் தலைமீது வைத்து, தகன பலிக்குரிய இடத்தில் அதனைக் கொல்ல வேண்டும். 30பிறகு ஆசாரியன் தன் விரல்களில் அதன் இரத்தத்தை எடுத்து தகன பலிபீடத்தின் கொம்புகளில் பூச வேண்டும். பின் அவன் மிச்சமுள்ள இரத்தத்தை பலிபீடத்தின் அடியில் ஊற்ற வேண்டும். 31சமாதானப் பலியில் செய்தது போன்று ஆட்டின் கொழுப்பு முழுவதையும் பலிபீடத்தில் எரித்துவிட வேண்டும். கர்த்தருக்கு இனிய நறுமணம் தரும்படி ஆசாரியன் அதனைப் பலிபீடத்தில் எரிக்கவேண்டும். இம்முறையில் ஆசாரியன் அம்மனிதனைச் சுத்தப்படுத்தலாம். தேவன் அவனை மன்னித்துவிடுவார்.
32“அவன் பாவப்பரிகாரப் பலியாக ஒரு ஆட்டுக் குட்டியைக் கொண்டு வருவானாகில், அது பழுதற்ற பெண் குட்டியாக இருக்க வேண்டும். 33அதன் தலைமீது தன் கையை வைத்து, தகனபலிகளை வழங்கும் இடத்தில் அதனை பாவப்பரிகாரப் பலியாகக் கொல்ல வேண்டும். 34ஆசாரியன் அதன் இரத்தத்தைத் தன் விரலில் எடுத்து தகன பலிபீடத்தின் மூலைகளில் தடவ வேண்டும். பின் அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் ஊற்ற வேண்டும். 35சமாதானப் பலிகளில் செய்தது போலவே ஆட்டின் கொழுப்பை தகனபலிபீடத்தின் மேல் வைத்து எரிக்க வேண்டும். மற்ற பலி முறைகளில் செய்தது போலவே பலிபீடத்தில் வைத்ததை எரிக்க வேண்டும். இவ்வாறு ஆசாரியன் அவன் செய்த பாவத்திலிருந்து சுத்தப்படுத்தலாம். தேவனும் அவனை மன்னித்துவிடுவார்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in