YouVersion Logo
Search Icon

நியாயாதிபதிகளின் புத்தகம் 14

14
சிம்சோனின் திருமணம்
1சிம்சோன் திம்னாத் என்னும் நகரத்திற்குச் சென்றான், அங்கு ஒரு பெலிஸ்திய இளம் பெண்ணைக் கண்டான். 2அவன் வீட்டிற்குத் திரும்பியதும் தன் தந்தையையும், தாயையும் நோக்கி, “ஒரு பெலிஸ்திய பெண்ணைத் திம்னாவில் நான் பார்த்தேன், அவளை நீங்கள் எனக்காக அழைத்து வரவேண்டும். நான் அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்” என்றான்.
3அவனது தந்தையும் தாயும், “இஸ்ரவேலில் உனக்கு திருமணம் செய்வதற்கு நிச்சயமாக ஒரு பெண் வாய்ப்பாள். பெலிஸ்தியரிலிருந்து ஒரு பெண்ணை நீ திருமணம்செய்ய வேண்டுமா? அந்த ஜனங்கள் விருத்தசேதனம் செய்யப்பட்டவர்கள் அல்ல” என்றார்கள்.
ஆனால் சிம்சோன், “அப்பெண்ணை எனக்காக அழைத்து வாருங்கள்! அப்பெண்ணே எனக்கு வேண்டும்!” என்றான். 4(சிம்சோனின் பெற்றோர் கர்த்தர் இவ்வாறு நிகழ வேண்டுமென விரும்பியதை அறியாதிருந்தார்கள். கர்த்தர் பெலிஸ்தியருக்கு எதிராகச் செயல்படும் வகையை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். பெலிஸ்தியர் அக்காலத்தில் இஸ்ரவேலரை ஆண்டுகொண்டிருந்தனர்.)
5சிம்சோன் திம்னாத் நகரத்திற்கு தன் தந்தையோடும் தாயோடும் சென்றான். அவர்கள் அந்த நகரத்திற்கு அருகேயுள்ள திராட்சைத் தோட்டத்தை நெருங்குகையில் ஒரு இளம் சிங்கம் திடீரென கெர்ச்சித்தபடி சிம்சோனை நோக்கி வந்தது. 6கர்த்தருடைய ஆவியானவர் வல்லமையோடு சிம்சோனின் மீது இறங்கினார். அவன் தனது வெறுங்கைகளாலேயே சிங்கத்தைக் கொன்றான். இதை அவனால் எளிதாகச் செய்ய முடிந்தது. ஒரு வெள்ளாட்டைக் கொல்வதுபோல் எளிதாக அதனைக் கொன்றான். ஆனால் அவன் அதை தன் தந்தைக்கோ, தாய்க்கோ தெரிவிக்கவில்லை.
7பின்பு சிம்சோன் நகரத்திற்குச் சென்று அந்த பெலிஸ்தியப் பெண்ணைச் சந்தித்துப் பேசினான். அவனுக்குப் அவளை பிடித்திருந்தது. 8பல நாட்களுக்குப் பின்பு அந்த பெலிஸ்தியப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள சிம்சோன் திரும்பி வந்தான். வழியில் சிங்கத்தைப் பார்க்க சென்றான். மரித்த சிங்கத்தின் உடலில் தேனீக் கூட்டத்தைக் கண்டான். அவை தேனைச் சேகரித்திருந்தன. 9சிம்சோன் தனது கைகளால் அதில் கொஞ்சம் தேனை எடுத்தான். அவன் தேனைச் சுவைத்துக் கொண்டே வழியில் நடத்தான். அவன் தன் பெற்றோரிடம் வந்தபோது அவர்களுக்கும் சிறிது தேனைக் கொடுத்தான். அவர்களும் அதை உண்டனர். ஆனால் மரித்த சிங்கத்திடமிருந்து எடுத்த தேன் அது என்று அவர்களிடம் சிம்சோன் கூறவில்லை.
10சிம்சோனின் தந்தை பெலிஸ்திய பெண்ணைப் பார்ப்பதற்காகச் சென்றார். மணமகனுக்கான முறைமைப்படி சிம்சோன் ஒரு விருந்து கொடுத்தான். 11பெலிஸ்தியர்கள் 30 பேரை விருந்துக்கு அனுப்பி வைத்தனர்.
12அந்த 30 பேருக்கும் சிம்சோன், “நான் உங்களுக்கு ஒரு விடுகதை சொல்ல விரும்புகிறேன். இந்த விருந்து 7 நாட்கள் நீடிக்கும். இந்த நாட்களுக்குள் அந்த விடுகதைக்கான பதிலை நீங்கள் சொல்ல வேண்டும். அந்நாட்களுக்குள் உங்களால் விடுகதையை விடுவிக்கக் கூடுமாயின் 30 பஞ்சாடைகளையும், 30 மாற்று ஆடைகளையும் கொடுப்பேன். 13ஆனால் நீங்கள் பதில் தராவிட்டால் 30 பஞ்சாடைகளையும், 30 மாற்று ஆடைகளையும் எனக்குத் தரவேண்டும்” என்றான். அந்த 30 பேரும், “உன் விடுகைதையைச் சொல். நாங்கள் கேட்க விரும்புகிறோம்” என்றார்கள்.
14சிம்சோன் அவர்களிடம்,
“சாப்பிடுவோரிடமிருந்து சாப்பிடுவதற்குக் கொஞ்சம் கிடைத்தது.
பலமானவரிடமிருந்து இனிப்பும் கிடைத்தது.”
என்ற விடுகதையைச் சொன்னான்.
30 பேரும் 3 நாட்கள் இந்த விடுகதையை விடுவிக்க முற்பட்டனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.
15நான்காம் நாள் அவர்கள் சிம்சோனின் மனைவியிடம் வந்தனர். அவர்கள், “எங்களை வறியோராக்கும்படிக்கு அழைத்தீர்களா? விடுகதையின் பதிலை அறியும்படிக்கு நீ உனது கணவனைத் தந்திரமாய் வசப்படுத்த வேண்டும். நீ அதை எங்களுக்கு அறிவிக்காவிட்டால் உண்னையும் உன் தந்தையின் வீட்டார் எல்லோரையும் நெருப்பிட்டுக் கொல்லுவோம்” என்றார்கள். 16சிம்சோனின் மனைவி அவனிடம் வந்து அழுதாள். அவள் சிம்சோனிடம், “உங்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை! நீங்கள் உண்மையில் என்மீது அன்பு செலுத்தவில்லை! எங்கள் ஆட்களுக்கு விடுகதை போட்டுள்ளீர்கள். ஆனால் என்னிடம் நீங்கள் பதிலைக் கூறவில்லை” என்றாள்.
17விருந்தின் 7 நாட்களும் முடியும்வரை சிம்சோனின் மனைவி அழுதாள். அதனால் 7வது நாள் சிம்சோன் அவளுக்கு விடுகதையின் பதிலைக் கூறினான். அவள் தொடர்ந்து அவனைத் தொந்தரவு செய்ததினாலும் வற்புறுத்தியதாலும் அவளுக்குக் கூறினான். அவள் அந்தப் பதிலை தனது ஜனங்களுக்குக் கூறினாள்.
18ஏழாவது நாள் சூரியன் மறையும் முன்னர், பெலிஸ்தியர்கள் பதிலை அறிந்தனர். அவர்கள் சிம்சோனிடம்,
“தேனைவிட சுவையானது எது?
சிங்கத்தைக் காட்டிலும் வலிமையானது எது?” என்றார்கள்.
அப்போது சிம்சோன் அவர்களிடம்,
“என் பசுவால் நீங்கள் உழாவிட்டால்
என் விடுகதைக்கு நீங்கள் பதில் சொல்லியிருக்கமாட்டீர்கள்” என்றான்.
19சிம்சோன் மிகவும் கோபமாக இருந்தான். கர்த்தருடைய ஆவியானவர் சிம்சோன் மீது வல்லமையோடு வந்தார். அதினால் அவன் அஸ்கலோன் நகரத்திற்குச் சென்று அங்கு 30 பெலிஸ்தியரைக் கொன்றான். அவர்களது ஆடைகளையும், சொத்துக்களையும் எடுத்துக் கொண்டான். அந்த ஆடைகளைப் பதில் சொன்ன 30 பேருக்கும் கொடுத்தான். அதன் பின்பு தனது தந்தையின் வீட்டிற்கு வந்தான். 20சிம்சோன் தன் மனைவியைத் தன்னோடு அழைத்துச் செல்லவில்லை. மாப்பிள்ளைத் தோழன் அவளை வைத்துக் கொண்டான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for நியாயாதிபதிகளின் புத்தகம் 14