YouVersion Logo
Search Icon

சங்கீதம் 21

21
சங்கீதம் 21
பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.
1யெகோவாவே, அரசன் உமது பெலத்தில் களிகூருகிறார்.
நீர் கொடுக்கும் வெற்றிகளில் அவருடைய மகிழ்ச்சி எவ்வளவு பெரிதாயிருக்கிறது.
2அவருடைய இருதயத்தின் வாஞ்சையை நீர் அவருக்குக் கொடுத்திருக்கிறீர்;
அவருடைய உதடுகளின் வேண்டுதலை நீர் புறக்கணிக்கவில்லை.
3நிறைவான ஆசீர்வாதங்களுடன் நீர் அவரை வரவேற்று,
சுத்தத் தங்கத்தினாலான மகுடத்தை நீர் அவர் தலையின்மேல் வைத்தீர்.
4அவர் உம்மிடம் ஆயுளைக் கேட்டார், அதை நீர் அவருக்குக் கொடுத்தீர்;
அவர் என்றென்றும் வாழ, நீடித்த ஆயுளைக் கொடுத்தீர்.
5நீர் கொடுத்த வெற்றிகளின் மூலம் அவருடைய மகிமை பெரியதாயிருக்கிறது;
நீர் அவரை மகிமையாலும் மகத்துவத்தாலும் நிரப்பியிருக்கிறீர்.
6நிச்சயமாகவே நீர் அவருக்கு நித்திய ஆசீர்வாதங்களைக் கொடுத்திருக்கிறீர்;
உமது சமுகத்தின் ஆனந்தத்தால், அவரை மகிழ்ச்சியாக்கினீர்.
7ஏனெனில் அரசன் யெகோவாவிலேயே நம்பிக்கை வைக்கிறார்;
உன்னதமானவரின் உடன்படிக்கையின் அன்பினிமித்தம்
அவர் அசைக்கப்படமாட்டார்.
8உமது கரம் உம்முடைய பகைவர் எல்லோரையும் பிடிக்கும்;
உமது வலதுகரம் உம்முடைய எதிரிகளைப் பிடித்துக்கொள்ளும்.
9நீர் வரும் நேரத்தில்
அவர்களை ஒரு நெருப்புச் சூளையைப்போல் ஆக்கிவிடுவீர்.
யெகோவா தமது கடுங்கோபத்தில் அவர்களை அழித்துவிடுவார்;
அவருடைய நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கும்.
10நீர் அவர்களுடைய சந்ததிகளைப் பூமியிலிருந்து அழிப்பீர்,
அவர்களுடைய சந்ததிகளை மனுக்குலத்திலிருந்து அழிப்பீர்.
11உமது பகைவர் உமக்கு எதிராக தீமையான சதி செய்தார்கள்,
பொல்லாத சதித்திட்டங்களை வகுத்தார்கள்; ஆனாலும் அவர்களால் வெற்றி பெறமுடியாது.
12நீர் வில்லை நாணேற்றி அவர்களை குறிபார்த்து எய்யும்போது,
அவர்களை புறமுதுகு காட்டப்பண்ணுவீர்.
13யெகோவாவே, உமது பெலத்தில் நீர் உயர்த்தப்பட்டிருப்பீராக;
நாங்கள் உமது வல்லமையைப் பாடித் துதிப்போம்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in