நெகேமியா 12:27-43

நெகேமியா 12:27-43 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

எருசலேமில் கட்டப்பட்ட மதிலின் அர்ப்பண நாளுக்கு, லேவியர்கள் அவர்கள் வாழ்ந்த இடங்களிலிருந்து மக்கள் அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து கொண்டுவந்தார்கள். நன்றி செலுத்தும் பாடல்களுடனும், வீணை முதலியவற்றின் இசையுடனும் அந்த அர்ப்பணம் மகிழ்ச்சியுடன் கொண்டாடும்படி இவர்களைக் கொண்டுவந்தார்கள். எருசலேமைச் சுற்றியிருந்த பகுதிகளிலிருந்தும் பாடகர்கள் ஒன்றுகூட்டிச் சேர்க்கப்பட்டார்கள். நெத்தோபாத்தியரின் கிராமங்களிலிருந்தும், பெத்கில்காலிலும், கேபாவின் பிரதேசத்திலும், அஸ்மாவேத்திலும் இருந்தும் பாடகர்கள் வந்திருந்தார்கள். ஏனெனில் இந்தப் பாடகர்கள் எருசலேமைச் சுற்றிலும் தங்களுக்குச் சொந்தமான கிராமங்களை அமைத்திருந்தார்கள். லேவியரும், ஆசாரியரும் முதலில் தங்களைச் சம்பிரதாய முறைப்படி சுத்திகரித்துக்கொண்ட பின்பு அங்குள்ள மக்களையும், வாசல்களையும், மதிலையும் சுத்திகரித்தார்கள். பின்பு நான் யூதாவின் தலைவர்களை மதிலின்மேல் ஏறச்செய்தேன். அங்கு நன்றி செலுத்துவதற்கு இரண்டு பெரிய பாடல் குழுவினரையும் நியமித்தேன். ஒரு குழு மதிலின்மேல் வலப்பக்கமாகக் குப்பைமேட்டு வாசலை நோக்கிப் போகும்படி செய்தேன். ஓசாயாவும், யூதாவின் தலைவர்களில் பாதிப் பேரும் அவர்களின் பின்சென்றார்கள். அவர்களுடன் அசரியா, எஸ்றா, மெசுல்லாம், யூதா, பென்யமீன், செமாயா, எரேமியா ஆகியோரும் போனார்கள். அவர்களுடன் எக்காளம் வைத்திருந்த ஆசாரியரும் இருந்தனர். சகரியாவும் அவர்களுடன் இருந்தான். இவன் யோனத்தானின் மகன், யோனத்தான் செமாயாவின் மகன், செமாயா மத்தனியாவின் மகன், மத்தனியா மிகாயாவின் மகன், மிகாயா சக்கூரின் மகன், சக்கூர் ஆசாப்பின் மகன். சகரியாவின் கூட்டாளிகளான செமாயா, அசரெயேல், மிலாலாய், கிலாலாய், மகாய், நெதனெயேல், யூதா, அனானி ஆகியோரும் இறைவனின் மனிதனான தாவீதின் இசைக்கருவிகளையே வைத்துக் கொண்டிருந்தார்கள். சட்ட ஆசிரியனான எஸ்றாவே இந்த ஊர்வலத்தை தலைமைதாங்கி நடத்தினான். அவர்கள் ஊற்று வாசலின் அருகே மேட்டிலுள்ள தாவீதின் நகரத்தின் படிகளில் தொடர்ந்து மதிலின்மேல் ஏறி, தாவீதின் வீட்டுக்கு மேலாகக் கடந்து கிழக்கிலிருந்த தண்ணீர் வாசலுக்குப் போனார்கள். இரண்டாவது பாடகர் குழு எதிர்த்திசை நோக்கிச்சென்றது. நான் மக்களில் பாதிப் பேருடன் மதிலின்மேல் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றேன். நாங்கள் சூளைகளின் கோபுரத்திலிருந்து அகன்ற மதில்வரை போய், எப்பிராயீம் வாசலையும், பழைய வாசலையும், மீன் வாசலையும், அனானயேலின் கோபுரத்தையும், நூறுபேரின் கோபுரத்தையும் கடந்து, அங்கிருந்து செம்மறியாட்டு வாசல்வரை தொடர்ந்து சென்று காவல்வாசலில் போய் நின்றோம். நன்றி செலுத்துவதற்கு அந்த இரண்டு பாடகர் குழுக்களும் இறைவனுடைய ஆலயத்தில் தங்கள் இடங்களில் நின்றார்கள்; நானும் என்னுடன் நின்ற அதிகாரிகளில் பாதிப் பேரும் அப்படியே செய்தோம். அத்துடன் ஆசாரியர்களான எலியாக்கீம், மாசெயா, மினியாமீன், மிகாயா, எலியோனாய், சகரியா, அனனியா ஆகியோரும் தங்கள் எக்காளங்களைப் பிடித்துக்கொண்டு நின்றார்கள். மாசெயா, செமாயா, எலெயாசார், ஊசி, யோகனான், மல்கியா, ஏலாம், ஏசேர் ஆகியோரும் நின்றார்கள். இந்தப் பாடகர் குழுக்கள் யெஷரகியாவின் தலைமையின்கீழ் பாடினார்கள். இறைவன் அவர்களுக்கு அதிக சந்தோஷத்தை அந்த நாளில் கொடுத்தபடியால், பெரும் பலிகளைச் செலுத்தி, சந்தோஷப்பட்டார்கள். பெண்களும் குழந்தைகளும்கூட சந்தோஷப்பட்டார்கள். எருசலேமிலிருந்து மகிழ்ச்சியின் சத்தம் வெகுதூரம்வரை கேட்கக் கூடியதாயிருந்தது.

நெகேமியா 12:27-43 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எருசலேமின் மதிலை பிரதிஷ்டைசெய்யும்போது, துதியினாலும் பாடலினாலும், கைத்தாளம் தம்புரு சுரமண்டலம் முதலான கீதவாத்தியங்களினாலும், பிரதிஷ்டையை மகிழ்ச்சியோடே கொண்டாட எல்லா இடங்களிலும் இருக்கிற லேவியர்களை எருசலேமுக்குக் கூட்டிவரத் தேடினார்கள். அப்படியே பாடகர்களின் குழுவினர் எருசலேமின் சுற்றுப்புறங்களான சமபூமியிலும், நெத்தோபாத்தியர்களின் கிராமங்களிலும், பெத்கில்காலிலும், கேபா, அஸ்மாவேத் ஊர்களின் நாட்டுப்புறங்களிலுமிருந்து வந்து கூடினார்கள்; பாடகர்கள் எருசலேமைச் சுற்றிலும் தங்களுக்குக் கிராமங்களைக் கட்டியிருந்தார்கள். ஆசாரியர்களும் லேவியர்களும் தங்களைச் சுத்தம்செய்துகொண்டு, மக்களையும் பட்டணவாசல்களையும் மதிலையும் சுத்தம்செய்தார்கள். அப்பொழுது நான் யூதாவின் பிரபுக்களை மதிலின்மேல் ஏறச்செய்து, துதிசெய்து நடந்துபோவதற்காக இரண்டு பெரிய கூட்டத்தார்களை நிறுத்தினேன்; அவர்களில் ஒரு கூட்டத்தார் மதிலின்மேல் வலதுபுறமாகக் குப்பைமேட்டு வாசலுக்குப் போனார்கள். அவர்கள் பின்னே ஓசாயாவும், யூதாவின் தலைவர்களில் பாதிப்பேர்களும், அசரியா, எஸ்றா, மெசுல்லாம், யூதா, பென்யமீன், செமாயா, எரேமியா என்பவர்களும், பூரிகைகளைப் பிடிக்கிற ஆசாரியர்களின் மகன்களில் ஆசாப்பின் மகன் சக்கூரின் மகனாகிய மிகாயாவுக்கு மகனான மத்தனியாவின் மகன் செமாயாவுக்குப் பிறந்த யோனத்தானின் மகன் சகரியாவும், தேவனுடைய மனிதனாகிய தாவீதின் கீதவாத்தியங்களை வாசிக்கிற அவனுடைய சகோதரர்களான செமாயா, அசரெயேல், மிலாலாய், கிலாலாய், மகாய், நெதனெயேல், யூதா, அனானி என்பவர்களும் போனார்கள்; வேதபாரகனாகிய எஸ்றா இவர்களுக்கு முன்பாக நடந்தான். அங்கேயிருந்து அவர்கள் தங்களுக்கு எதிரான தண்ணீர்வாசலுக்கு வந்தபோது, மதிலைவிட உயரமான தாவீது நகரத்தின் படிகளில் ஏறி, தாவீது வீட்டின் மேலாகக் கிழக்கேயிருக்கிற தண்ணீர்வாசல்வரை போனார்கள். துதிசெய்கிற இரண்டாம் கூட்டத்தார் எதிரேயிருக்கிற வழியாக நடந்துபோனார்கள், அவர்கள் பின்னே நான் போனேன்; மக்களில் பாதிப்பேர் மதிலின்மேல் சூளைகளின் கோபுரத்தைக் கடந்து, அகழ் மதில்வரை நேராகப்போய், எப்பிராயீம்வாசலையும், பழையவாசலையும், மீன்வாசலையும், அனானெயேலின் கோபுரத்தையும், மேயா என்கிற கோபுரத்தையும் கடந்து, ஆட்டுவாசல்வரை புறப்பட்டுக் காவல்வீட்டுவாசலிலே நின்றார்கள். அதற்குப்பின்பு துதிசெய்கிற இரண்டு கூட்டத்தார்களும் தேவனுடைய ஆலயத்திலே வந்து நின்றார்கள்; நானும் என்னோடு இருக்கிற தலைவர்களில் பாதிப்பேர்களும், பூரிகைகளைப் பிடிக்கிற எலியாக்கீம், மாசெயா, மினியாமீன், மிகாயா, எலியோனாய், சகரியா, அனனியா என்கிற ஆசாரியர்களும், மாசெயா, செமாயா, எலெயாசார், ஊசி, யோகனான், மல்கியா, ஏலாம், ஏசேர் என்பவர்களும் நின்றோம்; பாடகர்களும், அவர்களை நடத்துகிறவனாகிய யெஷரகியாவும் சத்தமாகப் பாடினார்கள். அந்த நாளிலே அதிகமான பலிகளைச் செலுத்தி, தேவன் தங்களுக்குப் பெரிய சந்தோஷத்தை உண்டாக்கியதால் மகிழ்ச்சியாக இருந்தார்கள்; பெண்களும் பிள்ளைகளும்கூடக் களிகூர்ந்தார்கள்; எருசலேமின் களிப்பு தூரத்திலே கேட்கப்பட்டது.

நெகேமியா 12:27-43 பரிசுத்த பைபிள் (TAERV)

ஜனங்கள் எருசலேமின் சுவரைப் பிரதிஷ்டை செய்தனர். அவர்கள் அனைத்து லேவியர்களையும் எருசலேமிற்குக் கொண்டுவந்தனர். லேவியர்கள் தாம் வாழ்ந்த பட்டணங்களிலிருந்து வந்தனர். அவர்கள் எருசலேமின் சுவரைப் பிரதிஷ்டை செய்யும் விழாவிற்கும், லேவியர்கள் தேவனுக்கு நன்றி சொல்லியும், துதித்தும் பாடல்களைப் பாட வந்தனர். அவர்கள் தமது கைத்தாளம், தம்புரு, சுரமண்டலம் ஆகியவற்றை இசைத்தனர். அனைத்துப் பாடகர்களும் எருசலேமிற்கு வந்தனர். அவர்கள் எருசலேமைச் சுற்றியுள்ள பட்டணங்களிலிருந்து வந்தனர். அவர்கள் நெத்தோபாத்தியரின் கிராமங்களிலிருந்தும், பெத்கில்காலிலும், கேபா, அஸ்மாவேத் ஊர்களின் நாட்டுப்புறங்களிலும் இருந்து வந்து கூடினார்கள். பாடகர்கள் எருசலேமைச் சுற்றியுள்ள பகுதிகளில் தங்களுக்காக சிறு ஊர்களைக் கட்டியிருந்தனர். ஆசாரியரும் லேவியரும் தங்களை ஒரு சடங்கில் சுத்தம்பண்ணிக்கொண்டனர். பிறகு அவர்கள் ஜனங்கள், வாசல்கள், எருசலேமின் சுவர் ஆகியவற்றை சடங்கில் சுத்தம்பண்ணினார்கள். நான் யூதாவின் தலைவர்களிடம் மேலே ஏறி சுவரின் உச்சியில் நிற்கவேண்டும் என்று சொன்னேன். தேவனுக்கு நன்றி செலுத்துவதற்கு இரண்டு பாடகர் குழுவை நான் தேர்ந்தெடுத்தேன். ஒரு குழு சுவரின் உச்சிக்கு மேலே ஏறி வலது பக்கத்தில் சாம்பல் குவியல் வாயிலை நோக்கிப்போனார்கள். ஒசாயாவும், யூதாவின் தலைவர்களில் பாதி பேரும் அவர்களைப் பின்தொடர்ந்து போனார்கள். அசரியா, எஸ்றா, மெசுல்லாம், யூதா, பென்யமீன், செமாயா, எரேமியா ஆகியோரும் பின்தொடர்ந்துச் சென்றனர். ஆசாரியர்களில் சிலர் எக்காளங்களோடு சுவர் வரையிலும் பின்தொடர்ந்துச் சென்றனர். சகரியாவும் பின்தொடர்ந்து சென்றான். (சகரியா யோனத்தானின் குமாரன். அவன் செமாயாவின் குமாரன். அவன் மத்தனியாவின் குமாரன். அவன் மீகாயாவின் குமாரன். அவன் சக்கூரின் குமாரன். அவன் அஸ்பாவின் குமாரன்.) அங்கே அஸ்பாவின் சகோதரர்களும் இருந்தனர். அவர்கள் செமாயா, அசரெயேல், மிலாலாய், கிலாலாய், மகாய், நெதனெயேல், யூதா, அனானி ஆகியோரும் போனார்கள். அவர்களிடம் தேவமனிதனான தாவீது செய்த இசைக்கருவிகளும் இருந்தன. போதகனான எஸ்றா அந்த குழுவை நடத்திச் சென்று சுவரைப் பிரதிஷ்டை செய்யச் சென்றான். அவர்கள் நீருற்றுள்ள வாசலுக்குச் சென்றனர். தாவீதின் நகரத்துக்கான வழியிலுள்ள படிக்கட்டுகளில் அவர்கள் நடந்துச் சென்றனர். அவர்கள் நகரச்சுவரின் மேல் நின்றார்கள். அவர்கள் தாவீதின் வீட்டின் மேல் நடந்து நீருற்று வாசலுக்குக் சென்றனர். இரண்டாவது இசைக்குழு அடுத்தத் திசையில் இடதுபுறமாகச் சென்றனர். நான் அவர்களை பின் தொடர்ந்தேன். அவர்கள் சுவரின் உச்சிக்குச் சென்றனர். ஜனங்களில் பாதிபேர் அவர்களைப் பின் தொடர்ந்தனர். மேல் சூளைகளின் கோபுரத்தைக் கடந்து அகல் சுவர் மட்டும் போனார்கள். பிறகு அவர்கள் எப்பிராயீம் வாசல், பழைய வாசல், மீன் வாசல், அனானெயேல் கோபுரம், நூறு கோபுரம் மற்றும் ஆட்டு வாசல் மட்டும் புறப்பட்டு காவல் வீட்டு வாசலில் நின்றார்கள். பிறகு இரு இசைக் குழுக்களும் தேவனுடைய ஆலயத்திலுள்ள தங்களது இடத்திற்குச் சென்றன. நான் எனது இடத்தில் நின்றேன். ஆலயத்தில் அதிகாரிகளில் பாதி பேர் தங்கள் இடங்களில் நின்றார்கள். பிறகு இந்த ஆசாரியர்கள் ஆலயத்திலுள்ள தங்களது இடங்களில் நின்றார்கள். எலியாக்கீம், மாசெயா, மினியாமீன், மிகாயா, எலியோனாய், சகரியா, அனானியா, இந்த ஆசாரியர்கள் தங்களுடன் எக்காளங்களை வைத்திருந்தனர். பிறகு ஆலயத்தில் இந்த ஆசாரியர்கள் தங்கள் இடங்களில் நின்றார்கள்: மாசெயா, செமாயா, எலெயாசார், ஊசி, யோகனான், மல்கியா, ஏலாம், ஏசேர். பிறகு இரண்டு பாடகர் குழுக்களும் யெஷரகியாவின் தலைமையில் பாட ஆரம்பித்தனர். எனவே அந்தச் சிறப்பு நாளில் ஆசாரியர்கள் ஏராளமான பலிகளைச் செலுத்தினார்கள். ஒவ்வொருவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். தேவன் ஒவ்வொருவரையும் மகிழ்ச்சியுடன் வைத்திருந்தார். பெண்களும் குழந்தைகளுங்கூட மகிழ்ச்சியோடு இருந்தார்கள். எருசலேமில் இருந்து வருகின்ற மகிழ்ச்சிகரமான ஓசைகளை தொலைதூரத்தில் உள்ள ஜனங்களால் கூட கேட்க முடிந்தது.

நெகேமியா 12:27-43 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

எருசலேமின் அலங்கத்தைப் பிரதிஷ்டைபண்ணுகையில், துதியினாலும் பாடலினாலும், கைத்தாளம் தம்புரு சுரமண்டலம் முதலான கீதவாத்தியங்களினாலும், பிரதிஷ்டையை மகிழ்ச்சியோடே கொண்டாட எல்லா இடங்களிலும் இருக்கிற லேவியரை எருசலேமுக்கு வரும்படி தேடினார்கள். அப்படியே பாடகரின் புத்திரர் எருசலேமின் சுற்றுப்புறங்களான சமபூமியிலும், நெத்தோபாத்தியரின் கிராமங்களிலும், பெத்கில்காலிலும், கேபா, அஸ்மாவேத் ஊர்களின் நாட்டுப்புறங்களிலும் இருந்து வந்து கூடினார்கள்; பாடகர் எருசலேமைச் சுற்றிலும் தங்களுக்குக் கிராமங்களைக் கட்டியிருந்தார்கள். ஆசாரியரும் லேவியரும் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு, ஜனத்தையும் பட்டணவாசல்களையும் அலங்கத்தையும் சுத்தம்பண்ணினார்கள். அப்பொழுது நான் யூதாவின் பிரபுக்களை அலங்கத்தின்மேல் ஏறப்பண்ணி, துதிசெய்து நடந்துபோகும்படி இரண்டு பெரிய கூட்டத்தாரை நிறுத்தினேன்; அவர்களில் ஒரு கூட்டத்தார் அலங்கத்தின்மேல் வலதுபுறமாகக் குப்பைமேட்டு வாசலுக்குப் போனார்கள். அவர்கள் பிறகாலே ஒசாயாவும், யூதாவின் பிரபுக்களில் பாதிப்பேரும், அசரியா, எஸ்றா, மெசுல்லாம், யூதா, பென்யமீன், செமாயா, எரேமியா என்பவர்களும், பூரிகைகளைப் பிடிக்கிற ஆசாரியரின் புத்திரரில் ஆசாப்பின் குமாரன் சக்கூரின் மகனாகிய மிகாயாவுக்குக் குமாரனான மத்தனியாவின் மகன் செமாயாவுக்குப் பிறந்த யோனத்தானின் குமாரன் சகரியாவும், தேவனுடைய மனுஷனாகிய தாவீதின் கீதவாத்தியங்களை வாசிக்கிற அவன் சகோதரரான செமாயா, அசரெயேல், மிலாலாய், கிலாலாய், மகாய், நெதனெயேல், யூதா, அனானி என்பவர்களும் போனார்கள்; வேதபாரகனாகிய எஸ்றா இவர்களுக்கு முன்பாக நடந்தான். அங்கேயிருந்து அவர்கள் தங்களுக்கு எதிரான ஊருணிவாசலுக்கு வந்தபோது, அலங்கத்தைப் பார்க்கிலும் உயரமான தாவீது நகரத்தின் படிகளில் ஏறி, தாவீது வீட்டின் மேலாகக் கிழக்கேயிருக்கிற தண்ணீர்வாசல் மட்டும் போனார்கள். துதிசெய்கிற இரண்டாம் கூட்டத்தார் எதிரேயிருக்கிற வழியாய் நடந்து போனார்கள், அவர்கள் பிறகாலே நான் போனேன்; ஜனத்தில் பாதிப்பேர் அலங்கத்தின்மேல் சூளைகளின் கொம்மையைக் கடந்து, அகழ் மதில்மட்டும் நெடுகப்போய், எப்பிராயீம்வாசலையும், பழையவாசலையும், மீன்வாசலையும், அனானெயேலின் கொம்மையையும், மேயா என்கிற கொம்மையையும் கடந்து, ஆட்டுவாசல்மட்டும் புறப்பட்டுக் காவல்வீட்டுவாசலிலே நின்றார்கள். அதற்குப்பின்பு துதிசெய்கிற இரண்டு கூட்டத்தாரும் தேவனுடைய ஆலயத்திலே வந்து நின்றார்கள்; நானும் என்னோடேகூட இருக்கிற தலைவரில் பாதிப்பேரும், பூரிகைகளைப் பிடிக்கிற எலியாக்கீம், மாசெயா, மினியாமீன், மிகாயா, எலியோனாய், சகரியா, அனானியா என்கிற ஆசாரியர்களும், மாசெயா, செமாயா, எலெயாசார், ஊசி, யோகனான், மல்கியா, ஏலாம், ஏசேர் என்பவர்களும் நின்றோம்; பாடகரும், அவர்கள் விசாரிப்புக்காரனாகிய யெஷரகியாவும் சத்தமாய்ப் பாடினார்கள். அந்நாளிலே மிகுதியான பலிகளைச் செலுத்தி, தேவன் தங்களுக்கு மகா சந்தோஷத்தை உண்டாக்கினதினால் மகிழ்ச்சியாயிருந்தார்கள்; ஸ்திரீகளும் பிள்ளைகளுங்கூடக் களிகூர்ந்தார்கள்; எருசலேமின் களிப்பு தூரத்திலே கேட்கப்பட்டது.