லூக்கா 15:25-32

லூக்கா 15:25-32 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“இவ்வேளையில், மூத்த மகன் வயலில் இருந்தான். அவன் வீட்டிற்கு திரும்பிவந்து கொண்டிருக்கையில், ஆடல் பாடலின் சத்தம் அவனுக்குக் கேட்டது. எனவே, அவன் வேலைக்காரரில் ஒருவனைக் கூப்பிட்டு, ‘என்ன நடக்கிறது?’ என்று விசாரித்தான். அதற்கு அவன், ‘உம் சகோதரன் வந்திருக்கிறார். அவர் சுகபெலத்துடன் தம்மிடம் மீண்டும் வந்து சேர்ந்ததால், உமது தந்தை மிக சிறப்பான விருந்தை ஆயத்தபடுத்தியிருக்கிறார்’ என்றான். “அப்பொழுது அந்த மூத்த சகோதரனோ கோபமடைந்து, உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தான். எனவே அவனது தந்தை வெளியே போய், அவனை உள்ளே வரும்படி கெஞ்சிக்கேட்டான். அவனோ தன் தந்தையிடம், ‘இதோ, இத்தனை வருடங்களாக நான் உங்களுக்கு அடிமையாய் வேலைசெய்துகொண்டு வருகிறேன், நான் ஒருபோதும் உங்கள் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியாமல் போனதில்லை. அப்படியிருந்தும், நான் எனது நண்பர்களுடன் கொண்டாடும்படி, நீங்கள் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியைகூட கொடுக்கவில்லை. ஆனால் வேசிகளோடு உங்கள் சொத்தை வீணடித்த இந்த உங்கள் மகன் வீட்டிற்கு வந்த உடனே, இவனுக்காக நீங்கள் மிக சிறப்பான விருந்தை ஆயத்தப்படுத்தி இருக்கிறீர்கள்’ என்றான். “அப்பொழுது தந்தை, ‘என் மகனே! நீ எப்பொழுதும் என்னுடனே தான் இருக்கிறாய். எனக்குரியவை எல்லாம் உனக்குரியவைகளே. ஆனால் உம் சகோதரனான இவன் இறந்து போயிருந்தான்; இப்பொழுது மீண்டும் உயிர்பெற்றிருக்கிறான். காணாமல் போயிருந்தான்; மீண்டும் நமக்குக் கிடைத்திருக்கிறான். அதனால், நாம் சந்தோஷத்தோடே கொண்டாடுவது முறையானதே’ என்றான்.”

லூக்கா 15:25-32 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவனுடைய மூத்தகுமாரன் வயலில் இருந்தான். அவன் திரும்பி வீட்டிற்கு அருகில் வருகிறபோது, கீதவாத்தியத்தையும் நடனக்களிப்பையும் கேட்டு; வேலைக்காரர்களில் ஒருவனை அழைத்து: இதென்ன என்று விசாரித்தான். அதற்கு அவன்: உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினாலே அவருக்காகக் கொழுத்தக் கன்றை அடித்திருக்கிறார் என்றான். அப்பொழுது அவன் கோபமடைந்து உள்ளே போக விருப்பமில்லாதிருந்தான். தகப்பனோ வெளியே வந்து அவனை வருந்தி அழைத்தான். அவன் தகப்பனுக்கு மறுமொழியாக: இதோ, இத்தனை வருடகாலமாக நான் உமக்கு வேலைச்செய்து, எப்பொழுதுமே எல்லாவற்றிலும் உம்முடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்திருந்தும், என் நண்பர்களோடு நான் மகிழ்ச்சியாக இருக்கும்படி நீர் ஒருபோதும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை. வேசிகளிடத்தில் உம்முடைய சொத்துக்களை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்தக் கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான். அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடு இருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாக இருக்கிறது. உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் கொண்டாடி மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமே என்று சொன்னான் என்றார்.

லூக்கா 15:25-32 பரிசுத்த பைபிள் (TAERV)

“மூத்த குமாரன் வயலில் இருந்தான். அவன் வீட்டுக்கு அருகாமையில் திரும்பி வந்து கொண்டிருந்தான். இசை, ஆடல் ஆகியவற்றின் சத்தத்தைக் கேட்டான். எனவே மூத்த குமாரன் வேலைக்காரச் சிறுவர்களில் ஒருவனை அழைத்து, ‘இவையெல்லாம் எதற்காக நடைபெறுகின்றன?’ என்று கேட்டான். வேலைக்காரன், ‘உங்கள் சகோதரன் திரும்பி வந்துள்ளார். உங்கள் தந்தை கொழுத்த கன்றை உண்பதற்காகக் கொன்றுள்ளார். உங்கள் சகோதரன் பாதுகாப்பாகவும் நல்ல முறையிலும் மீண்டும் வீட்டுக்குத் திரும்பி இருப்பதால் உங்கள் தந்தை மகிழ்ச்சியாக இருக்கிறார்’ என்றான். “மூத்த குமாரன் கோபமுற்று விருந்துக்குச் செல்லவில்லை. எனவே தந்தை வெளியே வந்து அவனிடம் வற்புறுத்தினார். உள்ளே வருமாறு அழைத்தார். குமாரன் தந்தையை நோக்கி, ‘நான் உங்களுக்கு ஓர் அடிமையைப் போல் பல ஆண்டுகள் உழைத்தேன்! உங்கள் கட்டளைக்கு எப்போதும் கீழ்ப்படிந்து நடந்தேன். ஆனால் ஒரு வெள்ளாட்டையாகிலும் நீங்கள் எனக்காகக் கொன்றதில்லை. எனக்கும் என் நண்பர்களுக்கும் நீங்கள் விருந்தளித்ததில்லை. ஆனால் உங்கள் இன்னொரு குமாரன் பணத்தை எல்லாம் வேசிகளிடம் செலவழித்தான். பின்னர் வீடு திரும்பியதும் அவனுக்காகக் கொழுத்த கன்றுக் குட்டியை கொன்றீர்கள்’ என்றான். “ஆனால் தந்தை அவனை நோக்கி, ‘மகனே! நீ எப்போதும் என்னோடு இருக்கிறாய். எனக்குரியவை அனைத்தும் உனக்கு உரியவை. நாம் சந்தோஷமாக விருந்துண்ண வேண்டும். ஏனெனில் உன் சகோதரன் இறந்து போயிருந்தான், இப்போது உயிரோடு வந்துள்ளான். காணாமல் போயிருந்தான், ஆனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டான்’ என்றார்” என்று கூறினார்.

லூக்கா 15:25-32 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவனுடைய மூத்தகுமாரன் வயலிலிருந்தான். அவன் திரும்பி வீட்டுக்குச் சமீபமாய் வருகிறபோது, கீதவாத்தியத்தையும் நடனக்களிப்பையும் கேட்டு; ஊழியக்காரரில் ஒருவனை அழைத்து: இதென்ன என்று விசாரித்தான். அதற்கு அவன்: உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினாலே அவருக்காகக் கொழுத்த கன்றை அடிப்பித்தார் என்றான். அப்பொழுது அவன் கோபமடைந்து, உள்ளே போக மனதில்லாதிருந்தான். தகப்பனோ வெளியே வந்து, அவனை வருந்தியழைத்தான். அவன் தகப்பனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, இத்தனை வருஷகாலமாய் நான் உமக்கு ஊழியஞ்செய்து, ஒருக்காலும் உம்முடைய கற்பனையை மீறாதிருந்தும், என் சிநேகிதரோடே நான் சந்தோஷமாயிருக்கும்படி நீர் ஒருக்காலும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை. வேசிகளிடத்தில் உம்முடைய ஆஸ்தியை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்த கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான். அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது. உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்கவேண்டுமே என்று சொன்னான் என்றார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்