சங்கீத புத்தகம் 78:1-39

சங்கீத புத்தகம் 78:1-39 TAERV

என் ஜனங்களே, என் போதனைகளுக்கு செவிக்கொடுங்கள். நான் கூறுவனவற்றைக் கவனித்துக் கேளுங்கள். நான் உங்களுக்கு இந்தக் கதையைக் கூறுவேன். நான் உங்களுக்கு இப்பழங்கதையைக் கூறுவேன். நாங்கள் இக்கதையைக் கேட்டோம், அதை நன்றாக அறிந்தோம். எங்கள் தந்தையர் இக்கதையைக் கூறினார்கள். நாங்கள் இக்கதையை மறக்கவும்மாட்டோம். இறுதி தலைமுறை வரைக்கும் எங்கள் ஜனங்கள் இக்கதையைச் சொல்லிக்கொண்டேயிருப்பார்கள். நாம் அனைவரும் கர்த்தரைத் துதிப்போம். அவர் செய்த அற்புதமான காரியங்களைக் குறித்துச் சொல்வோம். கர்த்தர் யாக்கோபோடு ஒரு உடன்படிக்கையைச் செய்தார். தேவன் இஸ்ரவேலருக்குச் சட்டத்தை (நீதிமுறையை) கொடுத்தார். நம் முற்பிதாக்களுக்கு தேவன் கட்டளைகளை அளித்தார். தமது பின் சந்ததியினருக்கு அந்தச் சட்டங்களைப் போதிக்குமாறு அவர் நம் முற்பிதாக்களுக்குக் கூறினார். புது குழந்தைகள் பிறப்பார்கள், அவர்கள் இனைஞராக வளருவார்கள். அவர்கள் அக்கதைகளைத் தங்கள் குழந்தைகளுக்குச் சொல்வார்கள். இவ்வகையில் கடைசி தலைமுறையினர் வரைக்கும் எல்லோரும் சட்டத்தை அறிந்திருப்பார்கள். எனவே அந்த ஜனங்கள் எல்லோரும் தேவனை நம்புவார்கள். தேவன் செய்தவற்றை அவர்கள் மறக்கமாட்டார்கள். அவர்கள் கவனமாக அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவார்கள். தங்கள் தேவனுடைய கட்டளைகளை ஜனங்கள் அவர்கள் குழந்தைகளுக்குச் சொல்வார்களானால், அந்தக் குழந்தைகள் அவர்களின் முற்பிதாக்களைப்போல் இருக்கமாட்டார்கள். அவர்கள் முற்பிதாக்கள் தேவனுக்கு எதிராகத் திரும்பினார்கள். அவர்கள் அவருக்குக் கீழ்ப்படிய மறுத்தார்கள். அந்த ஜனங்கள் பிடிவாதமாக இருந்தார்கள். அவர்கள் தேவ ஆவியானவருக்கு உண்மையாக இருக்கவில்லை. எப்பிராயீமின் மனிதர்கள் ஆயுதங்களைத் தாங்கியிருந்தார்கள், ஆனால் அவர்கள் யுத்தத்திலிருந்து ஓடிப்போனார்கள். அவர்கள் தேவனோடு செய்த உடன்படிக்கையைப் பின்பற்றவில்லை. அவரது போதனைகளுக்குக் கீழ்ப்படிய அவர்கள் மறுத்தார்கள். தேவன் செய்த பெரிய காரியங்களை எப்பிராயீமின் மனிதர்கள் மறந்துவிட்டார்கள். அவர் காட்டிய அற்புதமான காரியங்களை அவர்கள் மறந்துப்போனார்கள். எகிப்தின் சோவானில் தேவன் அவர்களின் தந்தையருக்குத் தனது மிகுந்த வல்லமையை வெளிப்படுத்தினார். தேவன் செங்கடலைப் பிளந்து ஜனங்களை அதனூடே நடத்திச்சென்றார். இருபுறங்களிலும் தண்ணீரானது உறுதியான சுவராய் எழுந்து நின்றது. ஒரு உயர்ந்த மேகத்தினால் தேவன் அவர்களை ஒவ்வொரு பகலிலும் வழிநடத்தினர். ஒவ்வோர் இரவும் ஒரு நெருப்புத் தூணின் ஒளியினால் தேவன் அவர்களை வழிநடத்தினர். பாலைவனத்தின் பாறையை தேவன் பிளந்தார். நிலத்தின் ஆழத்திலிருந்து அவர் அந்த ஜனங்களுக்கு தண்ணீரைக் கொடுத்தார். கன்மலையிலிருந்து ஆறாகப் பெருக்கெடுக்கும் தண்ணீரை தேவன் வரவழைத்தார்! ஆனால் ஜனங்கள் தேவனுக்கெதிராகத் தொடர்ந்து பாவம் செய்தனர். பாலைவனத்திலும் அவர்கள் மிக உன்னதமான தேவனுக்கெதிராகத் திரும்பினார்கள். பின் அந்த ஜனங்கள் தேவனை சோதிக்க விரும்பினார்கள். தங்கள் இச்சையை நிறைவேற்றிக் கொள்வதற்காக அவர்கள் தேவனிடம் உணவைக் கேட்டார்கள். அவர்கள் தேவனைக்குறித்து முறையிட்டு, “பாலைவனத்தில் தேவன் நமக்கு உணவைக் கொடுக்கக்கூடுமா? தேவன் பாறையை அடித்தார், பெருவெள்ளம் வெளிப்பட்டது. நிச்சயமாக, அவர் நமக்கு ரொட்டியும் (அப்பமும்) இறைச்சியும் கொடுக்க முடியும்” என்றார்கள். அந்த ஜனங்கள் கூறியவற்றை கர்த்தர் கேட்டார். யாக்கோபிடம் தேவன் கோபமடைந்தார். தேவன் இஸ்ரவேலிடம் கோபமடைந்தார். ஏனெனில் ஜனங்கள் அவரை நம்பவில்லை. தேவன் அவர்களைக் காக்கக்கூடுமென அவர்கள் நம்பவில்லை. ஆனால் தேவன் மேலேயுள்ள மேகங்களைத் திறந்தார். உணவுக்கான மன்னா அவர்கள் மீது பொழிந்தது. வானில் கதவுகள் திறக்கப்பட்டு வானிலுள்ள கிடங்கிலிருந்து தானியங்கள் கீழே கொட்டினாற்போல காட்சி தந்தது. தேவதூதர்களின் உணவை ஜனங்கள் உண்டார்கள். அவர்கள் திருப்தியடையும்வரை தேவன் மிகுதியான உணவை அனுப்பினார். தேவன் கிழக்கிலிருந்து ஒரு பெருங்காற்று வீசுமாறு செய்தார். காடைகள் மழையைப்போன்று அவர்கள் மீது வீழ்ந்தன. தேமானிலிருந்து தேவன் காற்றை வீசச்செய்தார். பறவைகள் மிகுதியாக இருந்தமையால் நீல வானம் இருண்டது. பாளையத்தின் நடுவே கூடாரங்களைச் சுற்றிலும் அப்பறவைகள் வீழ்ந்தன. அவர்களுக்கு உண்பதற்கு மிகுதியான உணவு இருந்தது. ஆனால் தங்களின் பசியால் தாங்களே பாவம் செய்யும்படி தங்களை அவர்கள் ஆட்படுத்திக்கொண்டார்கள். அவர்கள் தங்கள் பசியை அடக்கிக்கொள்ளவில்லை. எனவே அவர்கள் பறவைகளின் இரத்தம் வடிந்து போகும்வரை காத்திராது அக்காடைகளை உண்டார்கள். தேவன் அந்த ஜனங்களிடம் மிகவும் கோபங்கொண்டார். அவர்களில் பலரைக் கொன்றுபோட்டார். பல ஆரோக்கியமான இளைஞர்கள் இறக்கும்படி செய்தார். ஆனால் ஜனங்களோ இன்னும் பாவம் செய்தார்கள்! தேவன் செய்ய வல்ல அற்புதமான காரியங்களை அவர்கள் சார்ந்திருக்கவில்லை. எனவே தேவன் அவர்கள் பயனற்ற வாழ்க்கையைச் சில அழிவுகளினால் முடிவுறச் செய்தார். தேவன் சிலரைக் கொன்றபோது மற்றோர் அவரைப் பின்பற்றினார்கள். அவர்கள் தேவனுக்குப் பின்னே விரைந்தோடி வந்தார்கள். தேவனே அவர்கள் கன்மலையென்று அந்த ஜனங்கள் நினைவுக்கூர்ந்தார்கள். மிக உன்னதமான தேவன் அவர்களைக் காப்பாற்றினார் என்பதை நினைத்து பார்த்தார்கள். அவர்கள் அவரை நேசித்ததாக கூறினார்கள், ஆனால் பொய் கூறினார்கள். அவர்கள் உறுதியாக இருக்கவில்லை. அவர்கள் இருதயங்கள் உண்மையாகவே தேவனோடு இருக்கவில்லை. ஆண்டவர் அவர்களோடு செய்த உடன்படிக்கைக்கு நம்பிக்கைக்குரியவர்களாக நடந்துக்கொள்ளவில்லை. ஆனால் தேவன் இரக்கமுள்ளவராயிருந்தார். அவர்கள் பாவங்களுக்காக அவர் அவர்களை மன்னித்தார். அவர் அவர்களை அழிக்கவில்லை. பலமுறை தேவன் அவரது கோபத்தை அடக்கிக் கொண்டார். தேவன் தாம் மிகுந்த கோபமடையாதபடி பார்த்துக்கொண்டார். அவர்கள் ஜனங்களே என்பதை தேவன் நினைவுக்கூர்ந்தார். ஜனங்கள் வீசும் காற்றைப் போன்றவர்கள், பின்பு அது மறைந்துப்போகும்.