யோசுவாவின் புத்தகம் 19

19
சிமியோனின் நிலம்
1பின்பு யோசுவா, சிமியோன் கோத்திரத்தை சார்ந்த எல்லா குடும்பங்களுக்கும் அவர்களுக்குரிய பாகத்தைக் கொடுத்தான். யூதாவிற்குரிய இடத்திற்குள் சிமியோனின் நிலம் இருந்தது. 2இதுவே அவர்கள் பெற்ற பகுதியாகும்: பெயர் செபா (சேபா எனவும் அழைக்கப்பட்டது.) மொலாதா, 3ஆசார் சூகால், பாலா, ஆத்சேம். 4எல்தோலாத், பெத்தூல், ஒர்மா, 5சிக்லாக், பெத்மார் காபோத், ஆத்சார்சூசா, 6பெத்லெபாவோத், சருகேன் ஆகியவை ஆகும். மொத்தம் 13 ஊர்களும் அவற்றைச் சுற்றிலுமுள்ள வயல்களும் அமைந்தன.
7அவர்கள் ஆயின், ரிம்மோன், எத்தேர், ஆசான் ஆகிய ஊர்களையும் பெற்றனர். நான்கு ஊர்களும் அவற்றைச் சுற்றிலுமுள்ள வயல்களும் கிடைத்தன. 8பாலாத் பெயேர் (நெகேவின் ராமா) வரைக்குமுள்ள நகரங்களைச் சுற்றிலுமிருந்த வயல்கள் கிடைத்தன. அதுவே சிமியோன் கோத்திரத்தினருக்குக் கிடைத்த நிலமாகும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேசத்தில் பாகம் கிடைத்தது. 9யூதாவிற்குக் கிடைத்த இடத்திற்குள் சிமியோனின் நிலம் இருந்தது. யூதா ஜனங்களுக்கு அவர்களின் தேவைக்கதிகமான நிலம் இருந்தது. எனவே அவர்கள் நிலத்தில் ஒரு பகுதி சிமியோன் ஜனங்களுக்குக் கிடைத்தது.
செபுலோனின் நிலம்
10தங்கள் நிலத்தைப் பெற்ற அடுத்த கோத்திரம், செபுலோன் ஆகும். அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நிலங்களைச் செபுலோனின் குடும்பங்கள் பெற்றன. செபுலோனின் எல்லை சாரீத்வரை நீண்டது. 11அது மாராலாவின் மேற்கே சென்று தாபசேத்தைத் தொட்டது. யெக்கினேயாமின் கரையோரமாக எல்லை நீண்டது. 12பின் எல்லை கிழக்கே திரும்பியது. சாரீதிலிருந்து கிஸ்லோத்தாபோர் வரை சென்றது. பிறகு எல்லை தாபாராத்திற்கும் யப்பியாவிற்கும் சென்றது. 13கித்தாஏபேர், இத்தா காத்சீன் ஆகியவற்றின் கிழக்கு வரைக்கும் எல்லை நீண்டு பின் ரிம்மோனில் முடிவுற்றது. பிறகு எல்லை திரும்பி நியாவிற்குச் சென்றது. 14நியாவில் எல்லை திரும்பி அன்னத்தோனின் வடக்கே சென்று இப்தா ஏல் பள்ளத்தாக்கு வரை தொடர்ந்தது. 15இவ்வெல்லையின் உள்ளே கத்தாத், நகலால், சிம்ரோன், இதாலா, பெத்லகேம் நகரங்கள் இவ்வெல்லைக்குள் இருந்தன. மொத்தம் 12 ஊர்களும், அவற்றைச் சூழ்ந்த வயல்களுமிருந்தன.
16செபுலோனுக்குக் கொடுக்கப்பட்ட ஊர்களும் வயல்களும் இவையே. செபுலோனின் குடும்பங்கள் நிலத்தில் பங்கைப் பெற்றன.
இசக்காரின் நிலம்
17இசக்காரின் கோத்திரத்திற்கு நிலத்தின் நான்காவது பாகம் கொடுக்கப்பட்டது. அந்தக் கோத்திரத்தின் ஒவ்வொரு குடும்பமும் பங்கைப் பெற்றன. 18அந்தக் கோத்திரத்தினருக்குக் கொடுக்கப்பட்ட நிலம் இதுவே: யெஸ்ரயேல், கெசுல்லோத், சூனேம், 19அப்பிராயீம், சீகோன், அனாகராத், 20ராப்பித், கிஷியோன், அபெத்ஸ், 21ரெமேத், என்கன்னீம், என்காதா, பெத்பாத்செஸ் ஆகியவை அடங்கிய பகுதி ஆகும்.
22அவர்கள் நிலத்தின் எல்லை தாபோர், சகசீமா, பெத்ஷிமேசு ஆகியவற்றைத் தொட்டது. யோர்தான் நதியில் எல்லை நின்றது. மொத்தம் 16 ஊர்களும் அவற்றைச் சுற்றியிருந்த வயல்களும் இருந்தன. 23இந்த நகரங்களும் ஊர்களும் இசக்கார் கோத்திரம் பெற்ற நிலத்தில் இருந்தன. ஒவ்வொரு குடும்பத்திற்கும் பங்கு கிடைத்தது.
ஆசேரின் நிலம்
24ஆசேர் கோத்திரத்தினருக்கு நிலத்தின் ஐந்தாவது பாகம் கொடுக்கப்பட்டது. அந்தக் கோத்திரத்தின் ஒவ்வொரு குடும்பமும் நிலத்தின் ஒரு பங்கைப் பெற்றது. 25அந்தக் கோத்திரத்தினருக்கு கொடுக்கப்பட்ட நிலம் இதுவே: எல்காத், ஆலி, பேதேன், அக்சாப், 26அலம்மேலெக், ஆமாத், மீஷயால் ஆகியவை.
கர்மேல் மலை, சிகோர்லிப்னாத் வரைக்கும் மேற்கெல்லை தொடர்ந்தது. 27பிறகு எல்லை கிழக்கே திரும்பியது. பெத்தாகோனுக்கு எல்லை சென்றது. செபுலோனையும், இப்தாவேல் பள்ளத்தாக்கையும் அவ்வெல்லை தொட்டது. பின்னர் மேற்கே பெத்தேமோக்கிற்கும், நேகியேலுக்கும் அவ்வெல்லை சென்றது. கபூலின் வடக்குப் பகுதியை எல்லை தாண்டியது. 28பின் எல்லை எபிரோன் என்ற அப்தோன் ரேகோப், அம்மோன், கானா வரைக்கும் சென்றது பெரிய சீதோன் பகுதி வரைக்கும் எல்லை நீண்டது. 29அந்த எல்லை ராமாவிற்குத் தெற்கே போய், தீரு என்னும் வலிய நகருக்கு நேராக சென்றது. பின் அது திரும்பி ஓசாவை அடைந்து, 30உம்மா, ஆஃபெக், ரேகோப், அத்சீப் அருகில் கடலில் முடிவுற்றது.
மொத்தத்தில் 22 நகரங்களும் அவற்றைச் சூழ்ந்த வயல்நிலங்களும் இருந்தன. 31இந்நகரங்களும் வயல்களும் ஆசேரின் கோத்திரத்தாருக்குக் கொடுக்கப்பட்டன. அந்த கோத்திரத்தின் குடும்பங்களில் உள்ள எல்லாருக்கும் அந்த நிலத்தில் பங்கு கிடைத்தது.
நப்தலியின் நிலம்
32ஆறாவது பகுதியின் நிலம் நப்தலி கோத்திரத்திற்கு கொடுக்கப்பட்டது. அந்த கோத்திரத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அதில் பங்கு கிடைத்தது. 33சானானீமிற்கு அருகிலுள்ள பெரிய மரத்தினருகே அவர்கள் நிலத்தின் எல்லை ஆரம்பித்தது. இது ஏலேபிற்கு அருகே இருந்தது. ஆதமி நெகேபிற்கும், யாப்னீயேலுக்கும் ஊடாக எல்லை தொடர்ந்து லக்கூம் வழியாக யோர்தான் நதியில் முடிவுற்றது. 34அஸ்னோத் தாபோர் வழியாக எல்லை மேற்கே சென்றது. உக்கோக்கில் எல்லை நின்றது. தெற்கெல்லை செபுலோனையும், மேற்கெல்லை ஆசேரையும் தொட்டது. எல்லை யோர்தான், நதிக்கு கிழக்கே யூதாவிற்குச் சென்றது. 35இவ்வெல்லைகளின் உள்ளே பலமுள்ள நகரங்கள் சில இருந்தன. அந்நகரங்கள் சீத்திம், சேர், அம்மாத், ரக்காத், கின்னரேத், 36ஆதமா, ராமா, ஆத்சோர், 37கேதேஸ், எத்ரேயி, என்ஆத்சோர், 38ஈரோன், மிக்தாலேல், ஓரேம், பெதானாத், பெத்ஷிமேஸ் ஆகியவை ஆகும். மொத்தம் 19 ஊர்களும், அவற்றைச் சூழ்ந்த வயல்களும் இருந்தன.
39இந்த நகரங்களும் வயல்களும் நப்தலி கோத்திரத்தாருக்குக் கொடுக்கப்பட்டன. அந்தக் கோத்திரத்தில் ஒவ்வொரு குடும்பமும் நிலத்தில் பங்கைப் பெற்றன.
தாணின் நிலம்
40பின்பு தேசத்தின் ஏழாவது பகுதி தாண் கோத்திரத்திற்கு கொடுக்கப்பட்டது. அந்த கோத்திரத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பங்கு கிடைத்தது. 41கீழ்க்கண்ட பகுதிகளே அவர்களுக்கு அளிக்கப்பட்ட நிலமாகும் சோரா, எஸ்தாவோல், இர்சேமேஸ், 42சாலாபீன், ஆயலோன், யெத்லா, 43ஏலோன், திம்னாதா, எக்ரோன், 44எல்தெக்கே, கிபெத்தோன், பாலாத், 45யேகூத், பெனபெராக், காத்ரிம்மோன், 46மேயார்கோன், ராக்கோன், யாப்போவிற்கு அருகிலுள்ள பகுதிகள் ஆகியவை ஆகும்.
47தாணின் ஜனங்கள் அவர்களுக்குரிய தேசத்தைப் பெறுவதில் தொல்லை நேர்ந்தது. பலமான பகைவர்கள் அங்கே இருந்தனர். தாண் ஜனங்களால் அவர்களை எளிதில் வெல்ல முடியவில்லை. லேசேமின் ஜனங்களுக்கு எதிராக தாண் ஜனங்கள் போர் செய்தனர். லேசேமைத் தோற்கடித்து அங்கு வாழ்ந்த ஜனங்களைக் கொன்றனர். லேசேம் என்னும் ஊரில் தாண் ஜனங்கள் வாழ்ந்தனர். அவர்கள் கோத்திரத்தின் தந்தையாகிய தாண் என்ற பெயரை அதற்குக் கொடுத்தனர். 48அந்த எல்லா நகரங்களும் அவற்றைச் சூழ்ந்த வயல்களும் தாண் கோத்திரத்தினருக்கு உரியனவாயின. ஒவ்வொரு குடும்பத்திற்கும் அதற்குரிய பங்கு கிடைத்தது.
யோசுவாவின் நிலம்
49தலைவர்கள் தேசத்தைப் பங்கிட்டு வெவ்வேறு கோத்திரங்களுக்கு கொடுத்து முடித்தனர். அதன் பிறகு, நூனின் குமாரனாகிய யோசுவாவிற்கும் கொஞ்சம் நிலத்தை பங்காகக் கொடுப்பதென இஸ்ரவேல் ஜனங்கள் முடிவெடுத்தனர். அது அவனுக்கு வாக்களிக்கப்பட்ட நிலம் ஆகும்.
50கர்த்தர் கட்டளையிட்டபடி எப்பிராயீம் மலை நாட்டிலுள்ள திம்னாத் சேரா நகரத்தை அவர்கள் யோசுவாவிற்குக் கொடுத்தனர். அவ்வூரையே தனக்கு வேண்டுமென யோசுவா கேட்டான். யோசுவா அவ்வூரைப் பலமாகக் கட்டி அங்கு வாழ்ந்தான்.
51இஸ்ரவேலின் வெவ்வேறு கோத்திரங்களுக்கும் இந்த தேசப் பகுதிகள் முழுவதும் பிரித்து கொடுக்கப்பட்டன. நிலத்தைப் பங்கிட ஆசாரியனாகிய எலெயாசார், நூனின் குமாரனாகிய யோசுவா, ஒவ்வொரு கோத்திரத்தின் தலைவர்கள் ஆகியோர் சீலோவில் ஒருமித்துக் கூடினார்கள். ஆசரிப்புக் கூடாரத்தின் நுழைவாயிலில் கர்த்தருக்கு முன்னர் அவர்கள் சந்தித்து, தேசத்தைப் பங்கிட்டு முடித்தனர்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

யோசுவாவின் புத்தகம் 19: TAERV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்