ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 40:18-26

ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 40:18-26 TAERV

எவற்றோடும் தேவனை ஒப்பிட முடியுமா? முடியாது! தேவனுடைய படத்தை உருவாக்க முடியுமா? முடியாது! ஆனால், சில ஜனங்கள் பாறை அல்லது மரத்தால் சிலைகள் செய்து அவர்கள் அதனைத் தெய்வங்கள் என்று அழைக்கின்றனர். ஒரு வேலைக்காரன் ஒரு சிலையைச் செய்கிறான். பிறகு, இன்னொரு வேலைக்காரன் அதனைத் தங்கத்தால் மூடுகிறான். வெள்ளிச் சங்கிலிகளையும் அதற்காகச் செய்கிறான். அடிப்பகுதிக்காக அவன் ஒரு சிறப்பான மரத்தைத் தேர்ந்தெடுக்கிறான். அது உளுத்துப்போகாத மரவகையைச் சேர்ந்தது. பிறகு, அவன் ஒரு சிறந்த மரத்தச்சனைக் கண்டுபிடிக்கிறான். அந்த வேலைக்காரன் விழாமல் இருக்கிற ஒரு தெய்வம் செய்கிறான். நீங்கள் உண்மையை நிச்சயமாக அறிவீர்கள், இல்லையா? நீங்கள் நிச்சயமாகக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்! உங்களுக்கு நிச்சயமாக ஒருவன் நீண்ட காலத்துக்குமுன் சொன்னான்! இந்த உலகத்தைப் படைத்தவர் யார் என்று நிச்சயமாக நீ புரிந்திருக்கிறாய்! கர்த்தரே உண்மையான தேவனாய் இருக்கிறார்! அவர் பூமி வளையத்தின்மேல் அமர்ந்திருக்கிறார். அவரோடு ஒப்பிடும்போது, ஜனங்கள் வெட்டுக்கிளிகளைப்போலிருக்கிறார்கள். அவர் வானங்களை ஒரு துண்டு துணியைப்போல் பரப்புகிறார். அவர் வானங்களைக் குடியிருப்பதற்கான கூடாராமாக்குகிறார். ஆளுவோரை அவர் முக்கியமற்றவர்களாகச் செய்கிறார். அவர் இந்த உலகத்தில் உள்ள நீதிபதிகளை முழுமையாகப் பயனற்றவர்களாகச் செய்கிறார். ஆளுவோர் தாவரங்களைப்போன்றவர்கள் அவர்கள் தரையில் நடப்படுகிறார்கள். ஆனால், அவை தரைக்குள் தன் வேர்களைச் செலுத்துவதற்குமுன், தேவன் அத்தாவரங்களின் மேல் ஊதுகிறார். அவை செத்து காய்ந்து போகின்றன. பெருங்காற்று அவற்றை புல்லைப்போல அடித்துப்போகும். பரிசுத்தமானவர் (தேவன்) சொல்கிறார் என்னை எதனோடும் உன்னால் ஒப்பிட முடியுமா? முடியாது. எனக்கு இணையாக ஒருவரும் இல்லை. மேலே வானங்களைப் பாருங்கள். இந்த நட்சத்திரங்களை எல்லாம் படைத்தது யார்? வானத்தில் இந்தப் “படைகளை” எல்லாம் படைத்தது யார்? ஒவ்வொரு நட்சத்திரங்களின் பெயரும் யாருக்கு தெரியும்? உண்மையான தேவன் மிக்க பலமும் வல்லமையும் கொண்டவர். எனவே, நட்சத்திரங்களில் எதுவும் குறையாது.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்