நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 23

23
யோய்தா ஆசாரியனும் யோவாஸ் ராஜாவும்
1ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு யோய்தா தனது பலத்தைக் காட்டினான். அவன் எல்லா படைத்தலைவர்களுடனும் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டான். எரோகாமின் குமாரன் அசரியா, யோகனானின் குமாரன் இஸ்மவேல், ஓபேதின் குமாரன் அசரியா, ஆதாயாவின் குமாரன் மாசெயா, சிக்ரியின் குமாரன் எலிஷாபாத் ஆகியோர் அந்த படைத்தலைவர்கள். 2அவர்கள் யூதா முழுவதும் சுற்றி யூதாவின் நகரங்களில் இருந்த லேவியர்களைக் கூட்டினார்கள். இஸ்ரவேல் கோத்திரங்களின் தலைவர்களையும் கூட்டினார்கள். பிறகு அவர்கள் எருசலேமிற்குச் சென்றனர். 3அனைத்து ஜனங்களும் கூடி, தேவனுடைய ஆலயத்தில் ராஜாவோடு ஒரு ஒப்பந்தம் செய்துக்கொண்டனர்.
யோய்தா அவர்களிடம், “ராஜாவின் குமாரன் ஆட்சி செய்வான். இதுதான் தாவீதின் சந்ததியினரைக் குறித்துக் கர்த்தர் வாக்களித்தது. 4இப்போது, நீங்களும் செய்ய வேண்டியது இதுதான். ஆசாரியர்களிலும் லேவியர்களிலும் மூன்றில் ஒரு பகுதியினர் ஓய்வு நாளில் கடமையாற்றச் செல்லும்பொழுது கதவுகளைக் காவல் காக்க வேண்டும். 5அடுத்த மூன்றில் ஒரு பங்கினர் ராஜாவின் இருப்பிடத்தைக் காவல் காக்கவேண்டும். மேலும் மூன்றில் ஒரு பங்கினர் அஸ்திபார வாசலைக் காவல் காக்கவேண்டும். ஆனால் மற்றவர்கள் அனைவரும் கர்த்தருடைய ஆலயப் பிரகாரங்களில் இருக்கவேண்டும். 6ஒருவரையும் கர்த்தருடைய ஆலயத்திற்குள் அனுமதிக்க வேண்டாம். ஆசாரியர்கள் மற்றும் லேவியர்களை மட்டும் அனுமதிக்கவேண்டும். அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் சேவைச்செய்பவர்கள். அதோடு பரிசுத்தமானவர்கள். மற்றவர்கள் தங்கள் பணிகளைச் செய்வார்களாக. 7லேவியர்கள் ராஜாவுக்கு அருகில் தங்கயிருக்கவேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் வாளைத் தங்களோடு வைத்திருக்கவேண்டும். மற்றவர்கள் எவராவது ஆலயத்திற்குள் நுழைய முயன்றால் அவர்களைக் கொல்லவேண்டும். ராஜா எங்கே சென்றாலும் அவனோடு நீங்கள் செல்ல வேண்டும்” என்றான்.
8லேவியர்களும் யூதா ஜனங்களனைவரும் யோய்தா ஆசாரியன் சொன்னவற்றுக்கெல்லாம் கீழ்ப்படிந்தனர். யோய்தா ஆசாரியக் குழுவிலுள்ள எவரையும் விட்டுவைக்கவில்லை. எனவே ஒவ்வொரு தளபதிகளும் தங்கள் ஆட்களோடு முறைப்படி ஓய்வு நாளில் வந்து முறைப்படி ஓய்வு நாளில் போய்க்கொண்டு இருந்தனர். 9தாவீது ராஜாவுக்குரிய ஈட்டிகளையும், சிறியதும் பெரியதுமான கேடயங்களையும் யோய்தா ஆசாரியன் அதிகாரிகளுக்குக் கொடுத்தான். இந்த ஆயுதங்கள் எல்லாம் தேவனுடைய ஆலயத்திற்குள் வைக்கப்பட்டிருந்தன. 10பிறகு யோய்தா ஆட்களிடம் எங்கெங்கே நிற்க வேண்டும் என்று கட்டளையிட்டான். ஒவ்வொருவரும் தங்கள் ஆயுதங்களைக் கையில் வைத்திருந்தனர். ஆலயத்தின் வலது பக்கத்தில் இருந்து ஆலயத்தின் இடது பக்கம் வரை வரிசையாக ஆட்கள் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் பலிபீடத்தின் அருகிலும் ஆலயத்திலும், ராஜா அருகிலும் நின்றனர். 11அவர்கள் ராஜாவின் குமாரனை வெளியே அழைத்து வந்து அவனுக்கு முடிச்சூட்டினார்கள். அவனுக்குச் சட்டப் புத்தகத்தின் ஒரு பிரதியைக் கொடுத்தனர். பிறகு அவர்கள் யோவாசை ராஜாவாக்கினார்கள். யோய்தாவும் அவனது குமாரர்களும் அவனுக்கு அபிஷேகம் செய்தனர். அவர்கள், “ராஜா பல்லாண்டு வாழ்க!” என்று வாழ்த்தினார்கள்.
12ஜனங்கள் ஆலயத்தை நோக்கி ஓடுவதையும் அங்கே அவர்கள் ராஜாவை வாழ்த்துவதையும் அத்தாலியாள் கேட்டாள். அவளும் கர்த்தருடைய ஆலயத்திற்கு ஜனங்களிடையே வந்தாள். 13அவள் ராஜாவைக் கண்டாள், முன்வாயிலுக்கு முன்னால் உள்ள தூணுக்கருகில் ராஜா நின்றுகொண்டிருந்தான். அதிகாரிகளும் எக்காளம் ஊதுகிறவர்களும் அரசனுக்கருகில் நின்றுகொண்டிருந்தனர். அந்த நாட்டு ஜனங்கள் மகிழ்ச்சியோடு எக்காளம் ஊதினார்கள். பாடகர்களும் இசைக்கருவிகளை இயக்கினார்கள். அவர்கள் ஜனங்களையும் துதித்துப் பாடும்படிச் செய்தனர். அத்தாலியாள் இதனைப் பார்த்து தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, “துரோகம், துரோகம்” என்று கத்தினாள்.
14யோய்தா ஆசாரியன் படைத்தளபதிகளை அழைத்தான். அவன் அவர்களிடம், “அத்தாலியாளை பிடித்து வெளியே கொண்டுபோங்கள். அவளை யாராவது பின்பற்றினால், அவர்களைக் கொல்ல உங்கள் வாள்களைப் பயன்படுத்துங்கள்” என்றான். அதோடு ஆசாரியர் வீரர்களிடம், “அத்தாலியாளைக் கர்த்தருடைய ஆலயத்தில் கொன்றுவிடாதீர்கள்” என்று எச்சரித்தான். 15அத்தாலியாள் ராஜாவின் வீட்டுக் குதிரை வாயிலுக்குள் நுழைய முயன்றபோது வீரர்கள் அவளைப் பிடித்தார்கள். பிறகு அவளை அங்கேயே கொன்றனர்.
16பிறகு யோய்தா ராஜாவோடும், அனைத்து ஜனங்களோடும் ஒரு ஒப்பந்தம் செய்துக்கொண்டான். அவர்கள் அனைவரும் கர்த்தருடைய ஜனங்கள் என்பதை ஒப்புக்கொண்டனர். 17ஜனங்கள் அனைவரும் பாகால் ஆலயத்திற்குப்போய் அதை இடித்தனர். அவர்கள் பலிபீடங்களையும், விக்கிரகங்களையும் நொறுக்கினார்கள். பாகாலின் பூசாரியான மாத்தானைப் பலிபீடத்துக்கு முன்பாகவே கொன்றுபோட்டனர்.
18பிறகு கர்த்தருடைய ஆலயப் பொறுப்புக்கான ஆசாரியர்களை யோய்தா தேர்ந்தெடுத்தான். அவர்கள் லேவியர்களாக இருந்தனர். தாவீதே அவர்களுக்கு கர்த்தருடைய ஆலயப் பொறுப்பினைக் கொடுத்துள்ளார். மோசேயின் சட்டத்தின்படியே அவர்கள் கர்த்தருக்குத் தகனபலிகளைத் தந்தனர். தாவீதின் கட்டளைபடியே அவர்கள் மகிழ்ச்சியோடு பாடியவண்ணம் காணிக்கைகளைத் தந்தனர். 19யோய்தா கர்த்தருடைய ஆலயத்திலுள்ள அனைத்து வாசல்களிலும் காவலர்களை நியமித்தான். அதனால் சுத்தமில்லாதவர்களும் ஆலயத்திற்குள் நுழையாதபடி செய்தான்.
20யோய்தா படைத்தளபதிகளையும், பெரியவர்களையும், ஆட்சியாளர்களையும், அந்த நாட்டில் வசித்த அனைவரையும் ஒன்றாய்த் திரட்டினான். பிறகு கர்த்தருடைய ஆலயத்திலிருந்து ராஜாவை வெளியே அழைத்து வந்து உயர்ந்த வாசல்வழியாக அரண்மனைக்கு அழைத்துச்சென்றான். அங்கே அவனைச் சிங்காசனத்தின் மேல் அமரவைத்தனர். 21யூதாவிலுள்ள ஜனங்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு இருந்தனர். எருசலேம் நகரம் சமாதானமடைந்தது. ஏனென்றால் அத்தாலியாள் வாளால் கொல்லப்பட்டாள்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 23: TAERV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்