சாமுவேலின் முதலாம் புத்தகம் 18

18
தாவீதும் யோனத்தானும் நெருங்கிய நண்பர்களாகிறார்கள்
1சவுல் தாவீதோடு பேசி முடிந்ததும், யோனத்தானும் தாவீதும் நெருங்கிய நண்பர்களானார்கள். அவன் தன்னைப் போலவே தாவீதையும் நேசித்தான்.
2சவுல் அன்று முதல் தாவீதை தன்னோடு வைத்துக்கொண்டான். அவனைத் தன் தந்தையிடம் திரும்பிச் செல்ல அனுமதிக்கவில்லை. 3யோனத்தான் தாவீதை அதிகம் நேசித்து அவனோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டான். 4யோனத்தான் தான் அணிந்திருந்த மேலாடையை கழற்றி தாவீதுக்குக் கொடுத்தான். அவன் தன் சீருடையையும் கழற்றி தாவீதுக்குக் கொடுத்தான். மேலும் தனது வில், பட்டயம் மற்றும் கச்சையையும் கூட தாவீதுக்கே கொடுத்தான்.
தாவீதின் வெற்றிகளை சவுல் கவனிக்கிறான்
5பல யுத்தங்களுக்கு தாவீதை சவுல் அனுப்பினான். தாவீதும் மிகப் பெரிய வெற்றிகளை அடைந்தான். பின்பு அவனை படைவீரருக்கு தலைவன் ஆக்கினான். சவுலின் தளபதிகள் உட்பட அனைவரும் இதை ஏற்றுக்கொண்டனர்! 6தாவீது பெலிஸ்தியர்களோடு சண்டையிட வெளியேறினான். போரிலிருந்து வெற்றிபெற்று திரும்பியபோது, இஸ்ரவேலின் ஒவ்வொரு நகரப் பெண்மணிகளும் தாவீதைப் பாராட்ட வந்தனர். சிரித்து நடனமாடி மேளமும் யாழும் வாசித்தனர். சவுல் எதிரில் இதனைச் செய்தனர். 7பெண்கள்,
“சவுல் ஆயிரம் பகைவர்களை கொன்றிருக்கிறான்.
ஆனால் தாவீதோ பதினாயிரம் பகைவர்களை கொன்றான்!”
என்று பாடினார்கள்.
8இதனால் சவுல் கோபம் அடைந்தான். பெண்கள் சொன்னதை நினைத்து விசனப்பட்டான். 9அன்று முதல் தாவீதை நெருக்கமாகப் பின்தொடர ஆரம்பித்தான்.
தாவீதைக் கண்டு சவுல் பயப்படுகிறான்
10மறுநாள், தேவனிடமிருந்து ஒரு கெட்ட ஆவி சவுலை ஆட்கொண்டது. தாவீது வழக்கம்போல் சுரமண்டலத்தை எடுத்து மீட்டிக்கொண்டிருக்கும்போது, சவுல் தன் வீட்டில் தீர்க்கதரிசனம் சொல்லிக் கொண்டிருந்தான். 11சவுலிடம் ஈட்டி இருந்தது. சவுல், “சுவரோடு சேர்த்து தாவீதைக் குத்திக் கொன்றுவிடலாம்” என எண்ணினான். அதன்படியே இரண்டு முறை ஈட்டியை வீசினான். ஆனால் இரண்டு முறையும் தாவீது தப்பிவிட்டான்.
12தாவீதோடு கர்த்தர் இருந்தார். சவுலிடமிருந்து கர்த்தர் விலகிவிட்டார். எனவே சவுல் தாவீதைக் கண்டு பயந்தான். 13தன்னிடமிருந்து வெகுதொலைவான இடத்துக்குத் தாவீதை சவுல் அனுப்பினான். 1,000 வீரர்களுக்கு அதிகாரியாக தாவீதை ஆக்கினான். வீரர்களை போருக்கு வழி நடத்துகிறவனாயிருந்தான். 14கர்த்தர் தாவீதோடு இருந்ததால் எல்லா யுத்தங்களிலும் வென்றான். 15சவுல் தாவீதின் வெற்றிகளைக் கண்டபோது அவனுக்கு மேலும், மேலும் பயம் வந்தது. 16ஆனால் யூதாவிலும் இஸ்ரவேலிலும் உள்ளவர்கள் தாவீதை நேசித்தனர். போரில் தங்களுக்காகப் போராடுவதால் அனைவரும் தாவீதை நேசித்தனர்.
தாவீதுக்கு தன் குமாரத்தியை திருமணம் செய்துவைக்க சவுல் விரும்புகிறான்
17ஆனால், சவுல் தாவீதைக் கொல்ல விரும்பி தந்திரமான ஒரு வழியை யோசித்தான். அவன், “என் மூத்த குமாரத்தி மேராப்பை உனக்கு மணமுடித்துத் தருவேன், பின் நீ வலிமை மிக்க வீரனாகலாம். என் குமாரன் போல இருக்கலாம்! பிறகு நீ போய் கர்த்தருடைய யுத்தங்களை நடத்தலாம்!” என்றான். மேலும் சவுல், “இவனை நான் கொல்லாமல், எனக்காக பெலிஸ்தியர்களால் கொல்லச்செய்வேன்” என்று எண்ணினான்.
18தாவீதோ, “நான் பெரிய குடும்பத்தவனும் அல்ல! முக்கியமானவனும் அல்ல! என்னால் ராஜாவின் குமாரத்தியை மணந்துகொள்ள முடியாது!” என்றான்.
19எனவே மேராப் தாவீதை மணக்கவேண்டிய காலம் வந்தபோது, அவளை மேகோலத்தியனாகிய ஆதரியேலுக்கு மணமுடித்துக் கொடுத்தான்.
20சவுலின் அடுத்த குமாரத்தி மீகாள் தாவீதை நேசித்தாள். இவ்விஷயத்தைப் பற்றி சவுலிடம் ஜனங்கள் சொன்னார்கள். இது சவுலுக்கு மகிழ்ச்சி தந்தது. 21எனவே, “மீகாளைப் பயன்படுத்தி தாவீதை சூழ்ச்சிக்குட்படுத்த வேண்டும். அவள் அவனை மணக்கட்டும். பிறகு அவன் பெலிஸ்தியர்களால் கொல்லப்படுவான்” என்று நினைத்த சவுல் இரண்டாம் தடவையாக, “இன்று என் குமாரத்தியை மணமுடிக்கலாம்” என்றான்.
22சவுல் தன் அதிகாரிகளுக்கு கட்டளையிட்டு, “தனியாக தாவீதிடம் கூறுங்கள், பார், ராஜாவும் உன்னை விரும்புகிறான். அவரது அதிகாரிகளும் உன்னை விரும்புகின்றனர். நீ அவனுடைய குமாரத்தியை மணக்க வேண்டும் என்று சொல்லுங்கள்” என்றான்.
23அதிகாரிகள் இதை அவனிடம் கூற, அவனோ, “ராஜாவுக்கு மருமகனாவது அவ்வளவு எளிதா? ராஜாவின் குமாரத்திக்குத் தருகிற அளவிற்கு என்னிடம் செல்வமில்லை! நான் சாதாரண ஏழை” என்றான்.
24தாவீது சொன்னதை சவுலிடம் அதிகாரிகள் சொன்னார்கள். 25சவுல் அவர்களிடம், “ராஜா உன்னிடம் பணத்தை எதிர்பார்க்கவில்லை. பணத்திற்கு பதிலாக 100 பெலிஸ்தியர்களின் நுனித்தோல் போதும் என தாவீதிடம் கூறுங்கள்” என்றான். இதுதான் சவுலின் சூழ்ச்சி. பெலிஸ்தியர்கள் தாவீதை நிச்சம் கொல்வார்கள் என சவுல் நம்பியிருந்தான்.
26அதிகாரிகள் தாவீதிடம் இதனைக் கூறினார்கள். ராஜாவின் மருமகனாக வாய்ப்புக் கிடைத்ததற்காய் மகிழ்ச்சியடைந்தான். 27எனவே, தாவீதும் அவனது வீரர்களும் உடனே பெலிஸ்தரியர்களோடு சண்டைக்குப் போய் 200 பெலிஸ்தியரைக் கொன்று, அவர்களின் நுனித்தோலை வெட்டி கொண்டு வந்து சமர்ப்பித்தான். ராஜாவின் மருமகனாக விரும்பினபடியால் தாவீது இதைச் செய்தான்.
தன் குமாரத்தி மீகாளை தாவீது மணந்துக்கொள்ள சவுல் அனுமதித்தான். 28தாவீதோடு கர்த்தர் இருப்பதைச் சவுல் அறிந்துக் கொண்டான். அதோடு அவனது குமாரத்தி மீகாள் தாவீதை நேசித்தாள் என்பதையும் அறிந்துக்கொண்டான். 29எனவே, சவுலுக்கு தாவீது மீது மேலும் பயம் வந்தது. அவனைத் தனது எதிரியாக எப்போதும் எண்ணி வந்தான்.
30பெலிஸ்திய தளபதிகள் தொடர்ந்து இஸ்ரவேலருக்கு எதிராக சண்டையிட்டனர். ஆனால், ஒவ்வொரு முறையும் தாவீது அவர்களைத் தோற்கடித்தான். தாவீது மிகச் சிறந்த அதிகாரி என்று புகழ் பெற்றான்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

சாமுவேலின் முதலாம் புத்தகம் 18: TAERV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்