சங்கீதம் 109

109
சங்கீதம் 109
பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.
1இறைவனே, நான் துதிக்கும் இறைவனே,
நீர் மவுனமாய் இருக்கவேண்டாம்.
2கொடுமையும், வஞ்சனையும் உள்ளவர்கள்,
தங்கள் வாய்களை எனக்கு விரோதமாகத் திறந்திருக்கிறார்கள்;
பொய் நாவுகளால் எனக்கு விரோதமாகப் பேசுகிறார்கள்.
3அவர்கள் பகைமை நிறைந்த சொற்களுடன் என்னைச் சூழ்ந்துகொள்கிறார்கள்;
காரணமின்றி என்னைத் தாக்குகிறார்கள்.
4அவர்கள் என் நட்புக்குப் பதிலாக என்னைக் குற்றம் சாட்டுகிறார்கள்,
நானோ மன்றாடும் மனிதனாகவே இருக்கிறேன்.
5அவர்கள் நன்மைக்குப் பதிலாக, எனக்குத் தீமை செய்கிறார்கள்;
என் நட்புக்குப் பதிலாக என்னை வெறுக்கிறார்கள்.
6என் பகைவனை எதிர்ப்பதற்கு ஒரு தீயவனை ஏற்படுத்தும்;
அவன் வலதுபக்கத்தில் நின்று அவனைக் குற்றஞ்சாட்டுவானாக.
7அவன் நியாயம் விசாரிக்கப்படும்போது குற்றவாளியாய் காணப்படட்டும்;
அவன் மன்றாட்டுகளும் அவனையே குற்றவாளியாய்த் தீர்ப்பதாக.
8அவன் வாழ்நாட்கள் கொஞ்சமாவதாக;
அவனுடைய பதவியை மற்றவர்கள் எடுத்துக்கொள்வார்களாக.
9அவன் பிள்ளைகள் தந்தையற்றவர் ஆகட்டும்,
அவன் மனைவி விதவையாகட்டும்.
10அவன் பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சையெடுக்கட்டும்;
அவர்கள் தங்கள் பாழடைந்த வீடுகளிலிருந்தும் துரத்தப்படுவார்களாக.
11கடன் கொடுத்தவன் அவனுக்குரிய எல்லாவற்றையும் பறித்துக் கொள்வானாக;
அவனுடைய பிரயாசத்தின் பலனை பிறர் கொள்ளையிடுவார்களாக.
12ஒருவருமே அவனுக்கு தயவுகாட்டாமலும்,
அவனுடைய திக்கற்ற பிள்ளைகளுக்கு அனுதாபப்படாமலும் இருப்பார்களாக.
13அவன் சந்ததிகள் மறைந்துபோவார்களாக;
அவன்#109:13 அவன் அல்லது அவர்களுடைய பெயர் அடுத்த தலைமுறையிலிருந்து இல்லாமல் போவதாக.
14அவன் முற்பிதாக்களின் அநியாயம் யெகோவாவுக்கு முன்பாக நினைக்கப்படுவதாக;
அவர்களுடைய தாயின் பாவம் ஒருபொழுதும் நீங்காதிருப்பதாக.
15ஏனெனில் அவர்களுடைய பாவங்கள் எப்பொழுதுமே
யெகோவாவுக்கு முன்பாக நிலைத்திருக்கட்டும்;
அவர் அவர்களுடைய நினைவையும் பூமியிலிருந்து அகற்றட்டும்.
16ஏனெனில் அவன் ஒருபோதும் நன்மை செய்வதைப்பற்றி நினைத்ததில்லை;
மாறாக ஏழைகளையும், எளியவர்களையும்,
உள்ளம் உடைந்தவர்களையும் கொலைசெய்யத் தேடினான்.
17சாபம் இடுவதையே அவன் விரும்பினான்;
அவன் இட்ட சாபம் அவன் மேலேயே வருவதாக;
ஆசீர்வதிப்பதை அவன் விரும்பவில்லை,
ஆசீர்வாதம் அவனுக்குத் தூரமாவதாக.
18அவன் சாபத்தையே தன் உடையாக அணிந்துகொண்டான்;
அது அவன் உடலுக்குள் தண்ணீரைப்போலவும்,
அவன் எலும்புகளுக்குள் எண்ணெயைப்போலவும் புகுந்தது.
19சாபம் அவனைப் போர்த்தும் மேலங்கியைப்போல் இருப்பதாக;
அது அவனைச்சுற்றி கட்டப்பட்ட இடைக்கச்சையைப் போலவும் எப்போதும் இருப்பதாக.
20என்னைக் குற்றம் சாட்டுகிறவர்களுக்கும்,
என்னைக்குறித்துத் தீமையாய்ப் பேசுகிறவர்களுக்கும்
இதுவே யெகோவாவினால் கொடுக்கப்படும் தண்டனையாய் இருப்பதாக.
21ஆனால், ஆண்டவராகிய யெகோவாவே,
நீர் உமது பெயரினிமித்தம் என்னை நன்றாய் நடத்தும்;
உமது அன்பின் நன்மையினிமித்தம் என்னை விடுவியும்.
22ஏனெனில் நான் ஏழையும் எளியவனுமாய் இருக்கிறேன்,
என் இருதயம் எனக்குள் காயப்பட்டிருக்கிறது.
23நான் ஒரு மாலை நிழல்போல் மங்கிப்போகிறேன்;
ஒரு வெட்டுக்கிளியைப்போல் உதறிப் போடப்படுகிறேன்.
24உபவாசத்தினால் என் முழங்கால்கள் சோர்ந்துபோகின்றன;
என் உடல் மெலிந்து போயிருக்கிறது.
25என்னைக் குற்றம் சாட்டுகிறவர்களுக்கு நான் ஓர் இகழ்ச்சிப் பொருளானேன்;
அவர்கள் என்னைப் பார்க்கும்போது, ஏளனமாய் தங்கள் தலைகளை அசைக்கிறார்கள்.
26யெகோவாவே, என் இறைவனே, எனக்கு உதவிசெய்யும்;
உமது அன்பின்படியே என்னைக் காப்பாற்றும்.
27யெகோவாவே, உமது கரமே அதைச் செய்தது என்றும்,
நீரே அதைச் செய்தீர் என்றும் அவர்கள் அறியட்டும்.
28அவர்கள் என்னைச் சபித்தாலும், நீர் என்னை ஆசீர்வதிப்பீர்;
அவர்கள் என்னைத் தாக்கும் வேளையில் அவர்கள் வெட்கத்திற்குட்படுவார்கள்;
ஆனால் உமது அடியானாகிய நான் களிகூருவேன்.
29என்னைக் குற்றம் சாட்டுகிறவர்கள் அவமானத்தால் மூடப்படுவார்கள்;
ஓர் அங்கியினால் போர்த்தப்படுவதுபோல் அவர்கள் வெட்கத்தால் போர்த்தப்படுவார்கள்.
30நான் யெகோவாவை என் வாயினால் பெரிதும் புகழ்ந்து உயர்த்துவேன்;
பெருங்கூட்டத்தில் நான் அவரைத் துதிப்பேன்.
31ஏனெனில் அவர் வறுமைப்பட்டவனுடைய வலதுபக்கத்தில் நிற்கிறார்;
அவனைக் குற்றவாளியாய்த் தீர்ப்பிடுகிறவர்களிடமிருந்து
அவனுடைய உயிரைக் காப்பாற்ற நிற்கிறார்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

சங்கீதம் 109: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்