எண்ணாகமம் 20:14-29

எண்ணாகமம் 20:14-29 TCV

பின்பு மோசே காதேசிலிருந்து தூதுவர்களை ஏதோம் அரசனிடம் அனுப்பி: “உமது சகோதரனான இஸ்ரயேல் சொல்வதாவது, எங்களுக்கு நேரிட்ட கஷ்டங்களையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர். எங்கள் முற்பிதாக்கள் எகிப்திற்குப் போனார்கள். நாங்களும் பல ஆண்டுகள் அங்கே குடியிருந்தோம். எகிப்தியர் எங்களையும், எங்கள் முற்பிதாக்களையும் துன்புறுத்தினார்கள். ஆனாலும் நாங்கள் யெகோவாவிடம் அழுதபோது அவர் எங்கள் அழுகையைக் கேட்டு, ஒரு தூதனை அனுப்பி எங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தார். “இப்போது நாங்கள் உமது பிரதேசத்தின் எல்லையிலுள்ள காதேஸ் என்னும் பட்டணத்தில் இருக்கிறோம். தயவுசெய்து உமது நாட்டின் வழியாகக் கடந்துசெல்ல எங்களை அனுமதியும். நாங்கள் எந்தவொரு வயலின் வழியாகவோ, திராட்சைத் தோட்டத்தின் வழியாகவோ செல்லமாட்டோம். எந்தவொரு கிணற்றிலிருந்து தண்ணீர் குடிக்கவுமாட்டோம்; நாங்கள் அரசனின் பெருந்தெருவழியாகவே போவோம். உமது நாட்டைக் கடந்து முடிக்கும்வரை வலதுபக்கமோ, இடது பக்கமோ திரும்பமாட்டோம் என்று சொல்லுங்கள்” என்றான். அவ்வாறே அவர்கள் சொன்னபோது, ஏதோம் பதிலாக, “நீங்கள் நாட்டின் வழியாகக் கடந்துபோக முடியாது. அப்படிப்போக முயற்சித்தால், நாங்கள் அணிவகுத்து வந்து உங்களை வாளினால் தாக்குவோம்” என்றான். திரும்பவும் இஸ்ரயேலர் அவனிடம்: “நாங்கள் உமது பிரதான வீதியிலே மாத்திரம் போவோம். நாங்களோ, எங்கள் வளர்ப்பு மிருகங்களோ உங்கள் தண்ணீரைக் குடித்தால் அதற்குரிய பணத்தை நாங்கள் தருவோம். நாங்கள் எங்கள் கால்களால் நடந்து உமது நாட்டைக் கடந்துசெல்ல மட்டும் விரும்புகிறோமே தவிர வேறோன்றும் இல்லை” என்றார்கள். அதற்கு அவன்: “நீங்கள் என் நாட்டின் வழியாகக் கடந்துசெல்லவே முடியாது” என்று பதிலளித்தான். பின்பு ஏதோம் அவர்களுக்கு எதிராகப் பெரிதும் வலிமையுமான படையுடன் புறப்பட்டு வந்தான். ஏதோமியர் இஸ்ரயேலரைத் தங்கள் பிரதேசத்தின் வழியாகக் கடந்துபோகவிட மறுத்தபடியால், இஸ்ரயேலர் அங்கிருந்து திரும்பிப் போனார்கள். முழு இஸ்ரயேல் சமுதாயமும் காதேஸை விட்டுப் புறப்பட்டு ஓர் என்னும் மலைக்கு வந்து சேர்ந்தார்கள். ஏதோமின் எல்லைக்கு அருகிலுள்ள ஓர் என்னும் மலையிலே யெகோவா மோசேக்கும், ஆரோனுக்கும் சொன்னதாவது, “ஆரோன் தன் முன்னோர்களுடன் சேர்க்கப்படப்போகிறான். நான் இஸ்ரயேலருக்குக் கொடுக்கப்போகும் நாட்டிற்குள் அவன் போவதில்லை. ஏனெனில் நீங்கள் இருவரும் மேரிபாவின் தண்ணீரண்டையில் எனது கட்டளைக்கு எதிராகக் கலகம் பண்ணினீர்கள். ஆகையால் நீ ஆரோனையும், அவன் மகன் எலெயாசாரையும் கூட்டிக்கொண்டு ஓர் மலைக்கு வா. அங்கே ஆரோனின் உடைகளைக் கழற்றி அவன் மகன் எலெயாசாருக்கு உடுத்து. ஏனெனில் ஆரோன் அங்கே இறந்து தன் முன்னோர்களுடன் சேர்க்கப்படுவான்” என்றார். யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே செய்தான். மக்கள் கூட்டம் முழுவதும் பார்த்துக்கொண்டிருக்கையில் அவர்கள் ஓர் என்னும் மலைக்குப் போனார்கள். அங்கே மோசே ஆரோனின் உடைகளைக் கழற்றி, அவன் மகன் எலெயாசாருக்கு உடுத்தினான். அங்கே அந்த மலை உச்சியில் ஆரோன் இறந்தான். மோசேயும், எலெயாசாரும் கீழே இறங்கிவந்தார்கள். முழு இஸ்ரயேல் சமுதாயமும் ஆரோன் இறந்துவிட்டதை அறிந்தபோது, அவனுக்காக அழுது முப்பது நாட்கள் துக்கங்கொண்டாடினார்கள்.