மாற்கு 15:16-41

மாற்கு 15:16-41 TCV

போர்வீரர்கள் இயேசுவை அரண்மனை முற்றத்திலுள்ள ஆளுநர் தலைமையகத்திற்குக் கொண்டுசென்று, மற்ற எல்லா படைவீரர்களையும் ஒன்றுகூட்டினார்கள். அவர்கள் இயேசுவுக்கு கருஞ்சிவப்பு உடையை உடுத்தி, முட்களினால் ஒரு கிரீடத்தைப் பின்னி, அதை அவருடைய தலையின்மேல் வைத்தார்கள். பின்பு அவர்கள், “யூதருடைய அரசனே வாழ்க!” என்று சொல்லி இயேசுவை ஏளனம் செய்தார்கள். அவர்கள் ஒரு தடியினால் திரும்பத்திரும்ப அவரைத் தலையில் அடித்து, அவர்மேல் துப்பி, முழங்காற்படியிட்டு, அவரை வணங்கினார்கள். இவ்வாறு அவரை ஏளனம் செய்தபின்பு, அந்தக் கருஞ்சிவப்பு உடையைக் கழற்றிவிட்டு, அவரது உடையையே அவருக்கு உடுத்தினார்கள். அதற்குப் பின்பு அவர்கள் இயேசுவை சிலுவையில் அறையும்படி வெளியே கொண்டுபோனார்கள். போகும் வழியில், சிரேனே ஊரைச்சேர்ந்த சீமோன் என்னும் ஒரு மனிதன் நாட்டுப் புறத்திலிருந்து வந்து, அவனும் அவ்வழியாய்ப் போய்க்கொண்டிருந்தான். இந்த சீமோன் அலெக்சாந்தருக்கும், ரூபுவுக்கும் தகப்பன். அவனைச் சிலுவையைத் தூக்கிச்செல்லும்படி படைவீரர் வற்புறுத்தினார்கள். பின்பு அவர்கள் இயேசுவை கொல்கொதா எனப்பட்ட ஒரு இடத்திற்குக் கொண்டுவந்தார்கள். கொல்கொதா என்பதன் அர்த்தம், “மண்டையோட்டின் இடம்” என்பதாகும். அப்பொழுது அவர்கள், வெள்ளைப்போளம் கலந்த திராட்சை இரசத்தை, அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள். ஆனால் இயேசுவோ அதைக் குடிக்க மறுத்தார். பின்பு அவர்கள் அவரை சிலுவையில் அறைந்தார்கள். அவருடைய உடைகளைப் பங்கிட்டுக்கொண்டார்கள். உடையில் எதை யார் எடுத்துக்கொள்வது என்று தீர்மானிப்பதற்காகச் சீட்டுப்போட்டார்கள். அவர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபோது, காலை ஒன்பது மணியாய் இருந்தது. அவருக்கு எதிராக சிலுவையில் குற்றச்சாட்டு இப்படியாக எழுதப்பட்டிருந்தது. யூதரின் அரசன். அவர்கள் இயேசுவுடன் இரண்டு கள்வர்களை, ஒருவனை வலதுபக்கத்திலும், மற்றவனை இடது பக்கத்திலுமாக சிலுவைகளில் அறைந்தார்கள். அவர் குற்றவாளிகளில் ஒருவராக எண்ணப்பட்டார் என்ற வேதவசனம் இதன் மூலமாய் நிறைவேறிற்று. அவ்வழியாகக் கடந்து போனவர்கள் ஏளனமாய் தங்கள் தலைகளை அசைத்து, “ஆலயத்தை அழித்து, அதை மூன்று நாளில் கட்டுவேன் என்று சொன்னவனே, நீ சிலுவையிலிருந்து இறங்கிவந்து உன்னை நீயே விடுவித்துக்கொள்!” என்று பழித்துரைத்தார்கள். அவ்விதமாகவே தலைமை ஆசாரியர்களும் மோசேயின் சட்ட ஆசிரியர்களும், ஒருவரோடொருவர் அவரைக்குறித்து ஏளனமாய் பேசினார்கள். அவர்கள், “இவன் மற்றவர்களை இரட்சித்தான், ஆனால் தன்னையோ இரட்சித்துக்கொள்ள முடியாதிருக்கிறான்! இஸ்ரயேலின் அரசனான இந்த கிறிஸ்து, இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும். அப்பொழுது அதைக்கண்டு, நாங்கள் விசுவாசிப்போம்” என்றார்கள். இயேசுவுடனே சிலுவையில் அறையப்பட்டவர்களுங்கூட அவரை ஏளனம் செய்தார்கள். மத்தியான வேளையில், பூமியெங்கும் இருள் சூழ்ந்து பிற்பகல் மூன்று மணிவரை நீடித்திருந்தது. மாலை மூன்றுமணியானபோது, இயேசு உரத்த குரலில், “ஏலோயீ, ஏலோயீ, லாமா சபக்தானி?” என்று அதிக சத்தமிட்டுக் கூப்பிட்டார். அதன் அர்த்தம், “என் இறைவனே, என் இறைவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்பதாகும். அருகே நின்றவர்களில் சிலர், இதைக் கேட்டபோது, “கேளுங்கள், இவன் எலியாவைக் கூப்பிடுகிறான்” என்றார்கள். அப்பொழுது ஒருவன் ஓடிப்போய், கடற்காளானை எடுத்து, புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்து, ஒரு தடியில் கட்டி, அதை இயேசுவுக்குக் குடிக்கக் கொடுத்தான். அவன், “இப்பொழுது அவனை அப்படியே விடுங்கள். அவனைக் கீழே இறக்குவதற்கு எலியா வருகிறானோ என்று பார்ப்போம்” என்றான். அப்பொழுது இயேசு சத்தமிட்டுக் கதறி, தமது கடைசி மூச்சைவிட்டார். அவ்வேளையில் ஆலயத்தின் திரைச்சீலை மேலிருந்து கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது. இயேசுவுக்கு முன்பாக அங்கு நின்றுகொண்டிருந்த நூற்றுக்குத் தலைவன் அவர் எப்படி இறந்தார் என்பதை கண்டான். அப்பொழுது அவன், “நிச்சயமாகவே இந்த மனிதன் இறைவனுடைய மகனே தான்” என்றான். சில பெண்கள் தூரத்தில் நின்று, அதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களில் மகதலேனா மரியாளும், சின்ன யாக்கோபு, யோசே என்பவர்களின் தாயாகிய மரியாளும், சலோமியும் இருந்தார்கள். இந்தப் பெண்கள் இயேசுவின் தேவைகளை கவனிப்பதற்கு கலிலேயாவிலிருந்து அவரைப் பின்பற்றி வந்திருந்தார்கள். அவரோடு எருசலேமுக்கு வந்திருந்த வேறு அநேகம் பெண்களுங்கூட அங்கிருந்தார்கள்.

மாற்கு 15:16-41 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்