லூக்கா 15:1-10

லூக்கா 15:1-10 TCV

இயேசு சொல்வதைக் கேட்பதற்காக அநேக வரி வசூலிப்போரும், பாவிகளும் அவரைச் சுற்றிக் கூடியிருந்தார்கள். அப்பொழுது பரிசேயரும், மோசேயின் சட்ட ஆசிரியரும், “இவன் பாவிகளை வரவேற்று, அவர்களுடன் சாப்பிடுகிறான்” என்று முறுமுறுத்தார்கள். அப்பொழுது இயேசு அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: “உங்களில் ஒருவனிடம் நூறு ஆடுகள் இருந்து, அவற்றில் ஒன்று காணாமல் போனால், அவன் தனது தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பத்திரமான இடத்தில் விட்டுவிட்டு, காணாமல் போன ஆட்டைக் கண்டுபிடிக்கும்வரைக்கும், அதைத் தேடிப்போவான் அல்லவா? அவன் அதைக் கண்டுபிடிக்கும்போது, மகிழ்ச்சியுடன் தனது தோளில் போட்டுக்கொண்டு, தன் வீட்டுக்கு வருவான். பின்பு அவன் தன்னுடைய நண்பர்களையும், அயலவர்களையும் கூப்பிட்டு, ‘என்னுடனே மகிழ்ச்சியடையுங்கள்; காணாமல் போன எனது ஆட்டை நான் கண்டுபிடித்து விட்டேன்’ என்று சொல்வான். அவ்விதமாகவே மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைப் பார்க்கிலும், மனந்திரும்புகிற ஒரு பாவியைக் குறித்து பரலோகத்திலே அதிக மகிழ்ச்சி உண்டாகும் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். “ஒரு பெண்ணிடம், பத்து வெள்ளி நாணயங்கள் இருந்து, அதில் ஒன்று காணாமல் போனால், அவள் அதைக்கண்டுபிடிக்கும் வரைக்கும், ஒரு விளக்கைக் கொளுத்தி, வீட்டைக் கூட்டி, கவனமாய் தேடாமல் இருப்பாளோ? அவள் அதைக் கண்டெடுக்கும்போது, தனது சிநேகிதிகளையும், அயலவர்களையும் கூடிவரும்படி கூப்பிட்டு, ‘என்னுடனே மகிழ்ச்சியாயிருங்கள்; காணாமல் போன எனது நாணயத்தை நான் கண்டுபிடித்தேன்’ என்று சொல்வாள் அல்லவா? அவ்விதமாகவே மனந்திரும்புகிற ஒரு பாவியைக் குறித்து, இறைவனுடைய தூதரின் முன்னிலையில் பெருமகிழ்ச்சி உண்டாகும்” என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்