யோவான் 16:5-15

யோவான் 16:5-15 TCV

இப்பொழுது நான் என்னை அனுப்பிய பிதாவினிடத்திற்குப் போகிறேன். ஆனால், ‘நீர் எங்கே போகிறீர்’ என்று உங்களில் ஒருவனும் என்னிடத்தில் கேட்கவில்லை. நான் இவைகளைச் சொன்னதினாலே நீங்கள் துக்கம் நிறைந்தவர்களாய் இருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன்: உங்கள் நன்மைக்காவே நான் உங்களைவிட்டுப் போகிறேன். ஏனெனில் நான் போனாலேயன்றி உதவியாளர் உங்களிடத்தில் வரமாட்டார்; நான் போனால் அவரை உங்களிடத்தில் அனுப்புவேன். உதவியாளர் வரும்பொழுது, பாவம், நீதி, நியாயத்தீர்ப்பு ஆகியவற்றைக் குறித்து உலகத்தினரை கண்டித்து உணத்துவார்: அவர்கள் என்னில் விசுவாசம் வைக்காதிருப்பதினால் பாவத்தைக் குறித்தும், இனிமேல் நீங்கள் என்னைக் காணாதபடிக்கு பிதாவின் இடத்திற்கு நான் போகிறபடியால் நீதியைக் குறித்தும், இந்த உலகத்தின் அதிபதி இப்பொழுது நியாயத் தீர்ப்புக்குள்ளாகி இருப்பதனால், நியாயத்தீர்ப்பைக் குறித்தும் கண்டித்து உணர்த்துவார். “நான் உங்களுக்குச் சொல்வதற்கோ இன்னும் அதிகமாய் இருக்கிறது. இதை எல்லாம் இப்பொழுது உங்களால் தாங்கிக் கொள்ளமுடியாது. ஆனால் சத்திய ஆவியானவர் வரும்போது, அவர் உங்களை எல்லா சத்தியத்திற்குள்ளும் வழிநடத்துவார். அவர் தம்முடைய சுயவிருப்பத்தின்படி எதையும் பேசமாட்டார்; தாம் கேட்கிறதை மாத்திரமே அவர் பேசுவார். வரப்போகும் காரியங்களை அவர் உங்களுக்குச் சொல்லிக் கொடுப்பார். அவர் எனக்குரியதிலிருந்து எடுத்து அதை உங்களுக்கு வெளிப்படுத்துவார். இதனால் அவர் எனக்கே மகிமையைக் கொண்டுவருவார். பிதாவுக்கு உரியவைகள் எல்லாம் என்னுடையவைகளாய் இருக்கின்றன. அதனாலேயே ஆவியானவர் எனக்குரியதிலிருந்து எடுத்து உங்களுக்கு அதை வெளிப்படுத்துவார் என்று சொன்னேன்.