அப்பொழுது யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: “நான் வானத்திலிருந்து உங்களுக்கு அப்பத்தைப் பொழிவேன். இந்த மக்கள் ஒவ்வொரு நாளும் வெளியே போய் அந்நாளுக்குப் போதுமானதைச் சேர்க்கவேண்டும். அதன்மூலம் அவர்கள் என் அறிவுறுத்தலின்படி நடப்பார்களோ இல்லையோ என்று அவர்களைப் சோதித்துப் பார்ப்பேன். ஆறாம்நாளிலோ, மற்றநாட்களில் சேர்ப்பதுபோல் இருமடங்கு சேர்க்கவேண்டும். அந்த நாளிலே அவர்கள் எடுத்துவந்ததைத் தயாரித்து வைக்கவேண்டும்” என்றார். ஆகவே, மோசேயும் ஆரோனும் இஸ்ரயேலரிடம், “யெகோவாவே உங்களை எகிப்திலிருந்து கொண்டுவந்தார் என்பதை இன்று மாலையில் நீங்கள் அறிந்துகொள்வீர்கள், காலையிலோ யெகோவாவின் மகிமையைக் காண்பீர்கள்; ஏனெனில் அவருக்கு விரோதமான உங்கள் முறுமுறுப்பை அவர் கேட்டார். நீங்கள் எங்களுக்கு விரோதமாய் முறுமுறுப்பதற்கு நாங்கள் யார்?” என்றார்கள். மேலும் மோசே அவர்களிடம், “மாலையில் நீங்கள் சாப்பிடுவதற்கு இறைச்சியையும், காலையில் வேண்டிய அளவு அப்பத்தையும் தருவார்; ஏனெனில் அவருக்கு எதிரான உங்கள் முறுமுறுப்பை யெகோவா கேட்டிருக்கிறார். அப்பொழுது நீங்கள் யெகோவாவே இதைத் தருகிறார் என்பதை அறிந்துகொள்வீர்கள். நீங்கள் எங்களுக்கு எதிராக அல்ல, யெகோவாவுக்கு எதிராகவே முறுமுறுக்கிறீர்கள். எங்களுக்கு எதிராய் முறுமுறுக்க நாங்கள் யார்?” என்றார்கள். அதன்பின் மோசே ஆரோனிடம் சொன்னதாவது: “நீ முழு இஸ்ரயேல் சமுதாயத்தினரிடமும், ‘எல்லோரும் யெகோவாவுக்கு முன்பாக வாருங்கள். ஏனெனில் அவர் உங்கள் முறுமுறுப்புகளைக் கேட்டிருக்கிறார்’ என்று சொல்” என்றான். ஆரோன் முழு இஸ்ரயேல் சமுதாயத்தோடும் பேசிக்கொண்டிருக்கும் வேளையில், அவர்கள் பாலைவனத்தை நோக்கிப் பார்த்தபோது, யெகோவாவின் மகிமை மேகத்திலே தோன்றியது. அப்பொழுது யெகோவா மோசேயிடம், “நான் இஸ்ரயேலருடைய முறுமுறுப்புகளைக் கேட்டேன். நீ அவர்களிடம், ‘நீங்கள் மாலையில் இறைச்சியைச் சாப்பிட்டு, காலையில் அப்பத்தினால் திருப்தியாவீர்கள். அப்பொழுது நானே உங்கள் இறைவனாகிய யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள்’ என்று சொல்” என்றார். அந்த மாலை வேளையிலேயே காடைகள் வந்து அவர்கள் முகாமை மூடிக்கொண்டன. காலையில் முகாமைச் சுற்றி ஒரு பனிப்படலம் படிந்தது. பனி விலகிய பின்பு, தரையின்மீது உறைபனி போன்ற மெல்லிய துகள்கள் பாலைவனத்தில் காணப்பட்டன. அதை இஸ்ரயேலர் கண்டபோது, ஒருவரையொருவர் பார்த்து, “இது என்ன?” என்றார்கள். ஏனெனில், அது என்ன என்பது அவர்களுக்குத் தெரியாதிருந்தது. அப்பொழுது மோசே அவர்களிடம், “இதுதான் நீங்கள் உண்பதற்காக யெகோவா கொடுத்திருக்கும் அப்பம். யெகோவா கட்டளையிட்டிருப்பது இதுவே: ‘ஒவ்வொருவரும் தான் சாப்பிடக்கூடியதைச் சேர்த்துக்கொள்ளவேண்டும். உங்கள் கூடாரத்தில் உள்ளவர்களில் ஒருவருக்கு ஒரு ஓமர் அளவுப்படி, ஒவ்வொருவரும் எடுத்துக்கொள்ளுங்கள்’ ” என்றான். இஸ்ரயேலர் தங்களுக்குச் சொல்லப்பட்டபடியே செய்தார்கள். சிலர் அதிகமாகவும், சிலர் குறைவாகவும் சேர்த்தார்கள். அவர்கள் சேர்த்தவற்றை ஓமரால் அளந்த போது அதிகமாகச் சேர்த்தவனிடம் தேவைக்கதிகமாக இருந்ததில்லை, குறைவாகச் சேர்த்தவனிடம் போதாமல் இருக்கவுமில்லை. ஒவ்வொருவரும் தனக்குவேண்டிய அளவையே சேர்த்தார்கள்.
வாசிக்கவும் யாத்திராகமம் 16
கேளுங்கள் யாத்திராகமம் 16
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: யாத்திராகமம் 16:4-18
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்