யாத்திராகமம் 15

15
மோசே மற்றும் மிரியாமின் பாடல்
1அப்பொழுது மோசேயும் இஸ்ரயேலரும் யெகோவாவுக்குப் பாடிய பாடலாவது:
“நான் யெகோவாவைப் பாடுவேன்,
அவர் மிகவும் புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார்.
குதிரையையும், அதை ஓட்டியவனையும்
அவர் கடலுக்குள் வீசியெறிந்தார்.
2“யெகோவா என் பெலனும், என் பாடலுமாயிருக்கிறார்,
அவரே என் இரட்சிப்புமானார்.
அவர் என் இறைவன், அவரைத் துதிப்பேன்.
அவர் என் தந்தையின் இறைவன், அவரை நான் உயர்த்துவேன்.
3யெகோவா யுத்தத்தில் வீரர்;
யெகோவா என்பதே அவரது பெயர்.
4அவர் பார்வோனின் தேர்களையும், அவனுடைய இராணுவத்தையும்
கடலுக்குள் தள்ளிவிட்டார்.
பார்வோனின் அதிகாரிகளில் சிறந்தவர்கள்
செங்கடலில் அழிந்தார்கள்.
5ஆழமான தண்ணீர் அவர்களை மூடியது;
ஒரு கல்லைப்போல் ஆழத்திலே அவர்கள் அமிழ்ந்தார்கள்.
6யெகோவாவே, உமது வலதுகரம்
வல்லமையில் மாட்சிமையாய் இருந்தது.
யெகோவாவே, உமது வலதுகரமே
எதிரியை நொறுக்கியது.
7“உமது மாட்சிமையின் மகத்துவத்தினால்
உம்மை எதிர்த்தவர்களை கீழே விழத்தள்ளினீர்.
உமது எரியும் கோபத்தைக் கட்டவிழ்த்தீர்;
அது அவர்களை வைக்கோலைப்போல் எரித்தது.
8உமது நாசியின் சுவாசத்தினால்
தண்ணீர் குவிந்தது.
பொங்கியெழும் வெள்ளங்கள் மதிலைப்போல உறுதியாய் நின்றன;
ஆழத்தின் தண்ணீர் கடலின் அடியில் உறைந்துபோயிற்று.
9பகைவன் பெருமையாக,
‘நான் பின்தொடர்வேன், அவர்களைப் பிடிப்பேன்.
நான் கொள்ளையைப் பங்கிடுவேன்;
அவர்களில் என் ஆசையைத் தீர்த்துக்கொள்வேன்.
என் வாளை உருவுவேன்,
என் கை அவர்களை அழிக்கும்’ என பேசினான்.
10ஆனால், நீரோ உமது சுவாசத்தை ஊதினீர்,
கடல் அவர்களை மூடியது.
அவர்கள் ஈயத்தைப் போல்
பெரும் தண்ணீர்களுக்குள் அமிழ்ந்தார்கள்.
11யெகோவாவே, தெய்வங்களுக்குள்
உம்மைப்போல் யார் உண்டு?
பரிசுத்தத்தில் மாட்சிமையும்,
மகிமையில் வியக்கத்தக்கவரும்,
அதிசயங்களையும் செய்கிற
உம்மைப்போல் யார் உண்டு?
12“உமது வலது கரத்தை நீட்டினீர்,
பூமி அவர்களை விழுங்கிற்று.
13நீர் மீட்டுக்கொண்ட மக்களை
உமது நேர்மையான அன்பினால் வழிநடத்துவீர்.
நீர் வசிக்கும் பரிசுத்த இடத்திற்கு,
உமது வல்லமையினால் அவர்களுக்கு வழிகாட்டுவீர்.
14மக்கள் அதைக்கேட்டு நடுங்குவார்கள்;
பெலிஸ்திய மக்களை வேதனை பற்றிக்கொள்ளும்.
15ஏதோமின் தலைவர்கள் திகிலடைவார்கள்,
மோவாபின் தலைவர்களை நடுக்கம் பிடிக்கும்,
கானானின் மக்களும் கரைந்து போவார்கள்;
16பயமும் திகிலும் அவர்கள்மேல் வரும்.
யெகோவாவே, உமது மக்கள் கடந்துபோகும்வரை,
நீர் கொண்டுவந்த மக்கள் கடந்துபோகும்வரை,
உமது கரத்தின் வல்லமையால்
அவர்கள் கல்லைப்போல் அசைவில்லாமல் கிடப்பார்கள்.
17யெகோவாவே, உமது உரிமைச்சொத்தான மலையில்
நீர் அவர்களைக் கொண்டுவந்து நிலைநாட்டுவீர்;
அந்த இடத்தையே நீர் உமது தங்குமிடமாக்கினீர்,
யெகோவாவே, உமது கைகளே அதைப் பரிசுத்த இடமாக ஏற்படுத்தியது.
18“யெகோவா என்றென்றைக்கும் அரசாளுவார்.”
19பார்வோனின் குதிரைகள் தேர்களோடும், குதிரைவீரர்களோடும் கடலுக்குள் சென்றன. அப்பொழுது யெகோவா கடல் தண்ணீரைத் திருப்பி அவர்கள்மேல் கொண்டுவந்தார்; ஆனால் இஸ்ரயேலரோ கடல் வழியாகக் காய்ந்த தரையில் நடந்துபோனார்கள். 20அப்பொழுது இறைவாக்கினளான ஆரோனின் சகோதரி மிரியாம், தன் கையில் ஒரு தம்புராவை எடுத்துக்கொண்டாள்; மற்ற எல்லா பெண்களும் தம்புராவோடும் நடனத்தோடும் அவளைப் பின்தொடர்ந்தார்கள். 21அப்பொழுது மிரியாம் அவர்களுக்குப் பதிலளித்துப் பாடியது:
“யெகோவாவைப் பாடுங்கள்,
ஏனெனில் அவர் உன்னதத்தில் புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார்.
குதிரையையும் அதை ஓட்டியவனையும்
கடலிலே வீசியெறிந்தார்.”
ஏலீம் மற்றும் மாராவின் கசப்பான தண்ணீர்
22அதன்பின் மோசே இஸ்ரயேலரைச் செங்கடலிலிருந்து சூர் பாலைவனத்திற்கு நடத்திச் சென்றான். அவர்கள் மூன்று நாட்களாக பாலைவனத்தில் பயணம் செய்தார்கள், அவர்களுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. 23அவர்கள் மாரா என்னும் இடத்திற்கு வந்தபோது, அவ்விடத்திலுள்ள தண்ணீர் கசப்பாயிருந்தபடியால், அவர்களால் அதைக் குடிக்க முடியவில்லை. அதனால்தான் அந்த இடம் மாரா#15:23 மாரா என்றால் கசப்பு என்று அர்த்தம். என அழைக்கப்பட்டது. 24எனவே இஸ்ரயேல் மக்கள், “நாங்கள் எதைக் குடிப்போம்?” என்று கேட்டு மோசேக்கு எதிராக முறுமுறுத்தார்கள்.
25மோசே யெகோவாவிடம் அழுது விண்ணப்பித்தான், அப்பொழுது யெகோவா மோசேக்கு ஒரு மரத்தைக் காட்டினார். அவன் அதைத் தண்ணீருக்குள் எறிந்தபோது, தண்ணீர் இனிமையாக மாறியது.
பின்பு யெகோவா ஒரு விதிமுறையையும், ஒரு சட்டத்தையும் ஏற்படுத்தி, அங்கே அவர்களைச் சோதித்தார். 26அவர், “நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவின் குரலுக்குக் கவனமாய்ச் செவிகொடுத்து, அவருடைய பார்வையில் சரியானதைச் செய்து, அவருடைய கட்டளைகளைக் கவனித்து, அவருடைய எல்லா விதிமுறைகளையும் கைக்கொண்டு நடப்பீர்களானால், நான் எகிப்தியர்மேல் கொண்டுவந்த வியாதிகளில் எதையும் உங்கள்மேல் கொண்டுவரமாட்டேன்; ஏனெனில் நானே உங்களைச் சுகமாக்குகிற யெகோவா” என்றார்.
27அதன்பின் அவர்கள் ஏலிமுக்கு வந்தார்கள், அங்கே பன்னிரண்டு நீரூற்றுக்களும் எழுபது பேரீச்சமரங்களும் இருந்தன; அவர்கள் அங்கே தண்ணீர் அருகே முகாமிட்டார்கள்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

யாத்திராகமம் 15: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்