யாத்திராகமம் 13:17-22

யாத்திராகமம் 13:17-22 TCV

பார்வோன் இஸ்ரயேலரைப் போகவிட்டபின்பு, பெலிஸ்தியரின் நாட்டின் வழி குறுகியதாக இருந்தபோதிலும், இறைவன் அவர்களை அதன் வழியாக நடத்திச் செல்லவில்லை. ஏனெனில், “அவர்கள் யுத்தத்தை எதிர்கொண்டால், தங்கள் மனதை மாற்றி எகிப்திற்குத் திரும்பிவிடுவார்கள்” என இறைவன் சொன்னார். அதனால் இறைவன் மக்களை பாலைவனப் பாதைவழியே சுற்றி, செங்கடலை நோக்கி வழிநடத்தினார். இஸ்ரயேலர் ஆயுதம் அணிந்தவர்களாய், எகிப்திலிருந்து புறப்பட்டு யுத்தத்திற்கு ஆயத்தமாய் சென்றார்கள். மோசே யோசேப்பின் எலும்புகளைத் தன்னுடன் எடுத்துச் சென்றான். ஏனெனில், யோசேப்பு இஸ்ரயேலின் மகன்களிடம் இவ்வாறு செய்யும்படி சத்தியம் வாங்கியிருந்தான். அவன் அவர்களிடம், “இறைவன் நிச்சயமாய் உங்களுக்கு உதவிக்கு வருவார்; அப்பொழுது நீங்கள் எனது எலும்புகளை இந்த இடத்திலிருந்து உங்களுடன் எடுத்துச்செல்ல வேண்டும்” என்று சொல்லியிருந்தான். அவர்கள் சுக்கோத்திலிருந்து வெளியேறிய பின்பு, பாலைவனத்தின் அருகிலுள்ள ஏத்தாமிலே முகாமிட்டிருந்தார்கள். பகலில் அவர்கள் போகும் வழியாய் அவர்களுக்கு வழிகாட்ட, ஒரு மேகத்தூணாய் அவர்களுக்குமுன் யெகோவா சென்றார். இரவில் அவர்களுக்கு வெளிச்சம் கொடுப்பதற்காக, நெருப்புத்தூணாய் அவர்களுக்குமுன் சென்றார். இப்படியாக அவர்களால் இரவும் பகலும் பயணம் செய்ய முடிந்தது. பகலில் மேகத்தூணும், இரவில் நெருப்புத்தூணும் மக்களுக்குமுன் தன் இடத்தைவிட்டு விலகவில்லை.