எண் 16:41-50

எண் 16:41-50 IRVTAM

மறுநாளில் இஸ்ரவேல் மக்களின் சபையார் எல்லோரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து: “நீங்கள் யெகோவாவின் மக்களைக் கொன்று போட்டீர்கள்” என்றார்கள். சபையார் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூடி ஆசரிப்புக் கூடாரத்திற்கு நேரே பார்க்கிறபோது, மேகம் அதை மூடினது, யெகோவாவின் மகிமை காணப்பட்டது. மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக் கூடாரத்திற்கு முன்பாக வந்தார்கள்; அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “இந்தச் சபையாரை விட்டு விலகிப்போங்கள்; ஒரு நிமிடத்தில் அவர்களை அழிப்பேன் என்றார். அவர்கள் முகங்குப்புற விழுந்தார்கள். மோசே ஆரோனை நோக்கி: “நீ தூபகலசத்தை எடுத்து, பலிபீடத்திலிருக்கிற அக்கினியை அதில் போட்டு, அதின்மேல் தூபவர்க்கம் இட்டு, சீக்கிரமாகச் சபையினிடத்தில் போய், அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்”; யெகோவாவுடைய சந்நிதியிலிருந்து கடுங்கோபம் புறப்பட்டது. வாதை துவங்கியது என்றான். மோசே சொன்னபடி ஆரோன் அதை எடுத்துக்கொண்டு சபையின் நடுவில் ஓடினான்; மக்களுக்குள்ளே வாதை துவங்கியிருந்தது; அவன் தூபவர்க்கம் போட்டு, மக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்து, செத்தவர்களுக்கும் உயிரோடிருக்கிறவர்களுக்கும் நடுவே நின்றான்; அப்பொழுது வாதை நிறுத்தப்பட்டது. கோராகின் காரியத்தினால் செத்தவர்கள் தவிர, அந்த வாதையினால் செத்துப்போனவர்கள் 14,700 பேர். வாதை நிறுத்தப்பட்டது; அப்பொழுது ஆரோன் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலுக்கு மோசேயினிடம் திரும்பிவந்தான்.