லூக் 17:11-37

லூக் 17:11-37 IRVTAM

பின்பு அவர் எருசலேமுக்குப் பயணமாகபோகும்போது, அவர் சமாரியா கலிலேயா என்னும் நாடுகளின்வழியாக நடந்துபோனார். அவர் ஒரு கிராமத்திற்குள் நுழைந்தபோது, குஷ்டரோகமுள்ள மனிதர்கள் பத்துபேர் அவருக்கு எதிராக வந்து, தூரத்திலே நின்று: இயேசு ஐயரே, எங்களுக்கு இரங்கும் என்று சத்தமிட்டார்கள். அவர்களை அவர் பார்த்து: நீங்கள் போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். அந்தப்படி அவர்கள் போகும்போது சுகமானார்கள். அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தமாக தேவனை மகிமைப்படுத்தி, அவருடைய பாதத்தருகே முகங்குப்புறவிழுந்து, அவருக்கு நன்றி செலுத்தினான்; அவன் சமாரியனாக இருந்தான். அப்பொழுது இயேசு: சுகமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே? தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனைத்தவிர மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்று சொல்லி, அவனை நோக்கி: நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வருமென்று, பரிசேயர்கள் அவரிடத்தில் கேட்டபொழுது, அவர்களுக்கு அவர் மறுமொழியாக: தேவனுடைய ராஜ்யம் கண்களுக்குத் தெரியும்படியாக வராது. இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவாக இருக்காது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார். பின்பு அவர் சீடர்களை நோக்கி: மனிதகுமாரனுடைய நாட்களிலொன்றைக் காணவேண்டுமென்று நீங்கள் ஆசைப்படுங்காலம் வரும்; ஆனாலும் அதைக் காணமாட்டீர்கள். இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும், சிலர் உங்களிடம் சொல்லுவார்கள்; நீங்களோ போகாமலும் பின்தொடராமலும் இருங்கள். மின்னல் வானத்தின் ஒரு திசையில் தோன்றி மறுதிசைவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல மனிதகுமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவார். அதற்கு முன்பு அவர் அநேகம் பாடுகள்பட்டு, இந்தச் சந்ததியினால் ஆகாதவனென்று தள்ளப்படவேண்டியதாக இருக்கிறது. நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனிதகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும். நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரை மக்கள் புசித்துக் குடித்தார்கள், பெண் எடுத்தும் பெண் கொடுத்தும் இருந்தார்கள்; பெருவெள்ளம் வந்து எல்லோரையும் அழித்துப்போட்டது. லோத்தினுடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும்; மக்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள். லோத்து சோதோமைவிட்டுப் புறப்பட்ட நாளிலே வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் பெய்து, எல்லோரையும் அழித்துப்போட்டது. மனிதகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும். அந்த நாளிலே வீட்டின்மேலிருப்பவன் வீட்டிலுள்ள தன் பொருட்களை எடுத்துக்கொண்டுபோக இறங்காமல் இருக்கவேண்டும்; அப்படியே வயலிலிருக்கிறவன் பின்னிட்டுத் திரும்பாமலும் இருக்கவேண்டும். லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள். தன் ஜீவனை இரட்சிக்க வகைதேடுகிறவன் அதை இழந்துபோவான்; இழந்துபோகிறவன் அதை உயிர்ப்பித்துக்கொள்ளுவான். அந்த இரவில் ஒரே படுக்கையில் படுத்திருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான். மாவரைக்கிற இரண்டு பெண்களில் ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், மற்றவள் கைவிடப்படுவாள். வயலிலிருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அவர்கள் அவருக்கு மறுமொழியாக: எங்கே, ஆண்டவரே, என்றார்கள். அதற்கு அவர்: பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும் என்றார்.