லேவி 22:17-33

லேவி 22:17-33 IRVTAM

பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: “நீ ஆரோனோடும் அவனுடைய மகன்களோடும் இஸ்ரவேல் மக்கள் அனைவரோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் இஸ்ரவேலில் தங்குகிற அந்நியர்களிலும் தங்களுடைய பொருத்தனைகளின்படியாகிலும் உற்சாகத்தின்படியாகிலும் சர்வாங்க தகனபலிகளாகக் யெகோவாவுக்குத் தங்கள் காணிக்கையை எவர்கள் செலுத்தப்போகிறார்களோ, அவர்கள் தங்கள் மனதின்படியே மாடுகளிலாகிலும் ஆடுகளிலாகிலும் வெள்ளாடுகளிலாகிலும் பழுதற்ற ஒரு ஆணைப் பிடித்துவந்து செலுத்துவார்களாக. ஊனமுள்ள ஒன்றையும் செலுத்தவேண்டாம்; அது உங்கள்நிமித்தம் அங்கீகரிக்கப்படுவதில்லை. ஒருவன் விசேஷித்த பொருத்தனையாயாவது, உற்சாகமாயாவது, யெகோவாவுக்கு மாடுகளிலாகிலும் ஆடுகளிலாகிலும் சமாதானபலிகளைச் செலுத்தப்போனால், அது அங்கீகரிக்கப்படும்படி, ஒரு ஊனமில்லாமல் உத்தமமாக இருக்கவேண்டும். குருடு, எலும்பு முறிந்தவை, முடம், கட்டிகள் உள்ளவை, சொறி, புண் முதலிய குறைபாடு உள்ளவைகளை நீங்கள் யெகோவாவுக்குச் செலுத்தாமலும், அவைகளாலே யெகோவாவுக்குப் பலிபீடத்தின்மேல் தகனபலியிடாமலும் இருப்பீர்களாக. நீண்ட அல்லது குறுகின உறுப்புள்ள மாட்டையும் ஆட்டையும் நீ உற்சாகபலியாக செலுத்தலாம்; பொருத்தனைக்காக அது அங்கீகரிக்கப்படமாட்டாது. விதை நசுங்கினதையும், நொறுங்கினதையும், காயப்பட்டதையும், விதை அறுக்கப்பட்டதையும் நீங்கள் யெகோவாவுக்குச் செலுத்தாமலும், அவைகளை உங்கள் தேசத்தில் பலியிடாமலும் இருப்பீர்களாக. அந்நியர்களின் கையிலும் இப்படிப்பட்டதை வாங்கி, தேவனுக்கு அப்பமாகச் செலுத்தவேண்டாம்; அவைகளின் குறைபாடும், ஊனமும் அவைகளில் இருக்கிறது; அவைகள் உங்களுக்காக அங்கீகரிக்கப்படுவதில்லை என்று சொல்” என்றார். பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: “ஒரு கன்றாவது செம்மறியாட்டுக்குட்டியாவது, வெள்ளாட்டுக்குட்டியாவது பிறந்தால், அது ஏழுநாட்கள் தன் தாயினிடத்தில் இருப்பதாக; எட்டாம் நாள் முதல் அது யெகோவாவுக்குத் தகனபலியாக அங்கீகரிக்கப்படும். பசுவையும் அதின் கன்றையும், ஆட்டையும் அதின் குட்டியையும் ஒரே நாளில் கொல்லவேண்டாம். யெகோவாவுக்கு நன்றிபலியைச் செலுத்துவீர்களானால் மனப்பூர்வமாக அதைச் செலுத்துவீர்களாக. அந்நாளிலேயே அதைச் சாப்பிட்டுவிடவேண்டும்; விடியற்காலம்வரை நீங்கள் அதில் ஒன்றையும் மீதியாக வைக்கவேண்டாம்; நான் யெகோவா. “நீங்கள் என் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்யக்கடவீர்கள்; நான் யெகோவா. என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்காமல் இருப்பீர்களாக; நான் இஸ்ரவேல் மக்கள் நடுவே பரிசுத்தர் என்று மதிக்கப்படுவேன்; நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற யெகோவா. நான் உங்களுக்கு தேவனாக இருப்பதற்காக, உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்தேன்; நான் யெகோவா என்று சொல்” என்றார்.