யோசு 7:1-5

யோசு 7:1-5 IRVTAM

இஸ்ரவேல் மக்கள் சபிக்கப்பட்டவைகளினாலே துரோகம் செய்தார்கள்; எப்படியென்றால், யூதாகோத்திரத்தின் சேராகுடைய மகனாகிய சப்தியின் மகன் கர்மீக்குப் பிறந்த ஆகான் என்பவன், சபிக்கப்பட்டவைகளிலே சிலவற்றை எடுத்துக்கொண்டான்; ஆகையால் இஸ்ரவேல் மக்களின்மீது யெகோவாவுடைய கோபம் மூண்டது. யோசுவா எரிகோவிலிருந்து பெத்தேலுக்குக் கிழக்கில் உள்ள பெத்தாவேனுக்கு அருகில் இருக்கிற ஆயீ பட்டணத்திற்குப் போகும்படி ஆட்களை அனுப்பி: நீங்கள் போய், அந்த நாட்டை வேவுபாருங்கள் என்றான்; அந்த மனிதர்கள் போய், ஆயீயை வேவுபார்த்து, யோசுவாவிடம் திரும்பிவந்து, அவனை நோக்கி: மக்கள் எல்லோரும் போகவேண்டியதில்லை; ஏறக்குறைய இரண்டாயிரம் மூவாயிரம்பேர் போய், ஆயீயை முறியடிக்கலாம்; எல்லா மக்களையும் அங்கே போகும்படி வருத்தப்படுத்தவேண்டியதில்லை; அவர்கள் கொஞ்சம்பேர்தான் என்றார்கள். அப்படியே மக்களில் ஏறக்குறைய 3,000 பேர் அந்த இடத்திற்குப் போனார்கள்; ஆனாலும் அவர்கள் ஆயீயின் மனிதர்களிடம் தோல்வியடைந்து ஓடிப்போனார்கள். ஆயீயின் மனிதர்கள் அவர்களில் ஏறக்குறைய முப்பத்தாறுபேரை வெட்டிப்போட்டார்கள்; பட்டணவாசலின் வெளியிலிருந்து செபாரீம்வரைக்கும் அவர்களைத் துரத்தி, மலையடிவாரத்தில் அவர்களை வெட்டினார்கள்; மக்களின் இருதயம் கரைந்து தண்ணீராகப்போனது.