யோவேல் 2:2-14

யோவேல் 2:2-14 IRVTAM

அது இருளும் காரிருளுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்; விடியற்கால வெளுப்பு மலைகளின்மேல் பரவுகிறதுபோல ஏராளமான பலத்த ஒரு மக்கள்கூட்டம் தீவிரமாக வந்து பரவும்; அப்படிப்பட்டது முன்பு ஒரு காலத்திலும் உண்டாகவுமில்லை, இனித் தலைமுறை தலைமுறையாக இனிவரும் வருடங்களிலும் உண்டாவதுமில்லை. அவைகளுக்கு முன்னாக நெருப்பு எரிக்கும், அவைகளுக்குப் பின்னாக தழல் எரிக்கும்; அவைகளுக்கு முன்னாக தேசம் ஏதேன் தோட்டத்தைப்போலவும், அவைகளுக்குப் பின்னாகப் பாழான வனாந்திரத்தைப்போலவும் இருக்கும்; அவைகளுக்கு ஒன்றும் தப்பிப்போவதில்லை. அவைகளின் சாயல் குதிரைகளின் சாயலைப்போல இருக்கும்; அவைகள் குதிரை வீரர்களைப்போல ஓடும். அவைகள் ஓடுகிற இரதங்களின் இரைச்சலைப்போலவும், வைக்கோலை எரிக்கிற நெருப்பு ஜூவாலையின் சத்தத்தைப்போலவும், போருக்கு ஆயத்தப்பட்ட பெரும் மக்கள்கூட்டத்தின் இரைச்சலைப்போலவும், மலைகளுடைய உச்சியின்மேல் குதிக்கும். அவைகளுக்கு முன்பாக மக்கள் நடுங்குவார்கள்; எல்லா முகங்களும் கருகிப்போகும். அவைகள் பராக்கிரமசாலிகளைப்போல ஓடும்; போர்வீரர்களைப்போல மதில் ஏறும்; வரிசைகள் கலையாமல், ஒவ்வொன்றும் தன் தன் அணியிலே செல்லும். ஒன்றை ஒன்று நெருக்காது; ஒவ்வொன்றும் தன் தன் பாதையிலே செல்லும்; அவைகள் ஆயுதங்களுக்குள் விழுந்தாலும் காயம் ஏற்படாமற்போகும். அவைகள் பட்டணம் எங்கும் செல்லும்; மதிலின்மேல் ஓடும்; வீடுகளின்மேல் ஏறும்; ஜன்னல் வழியாகத் திருடனைப்போல உள்ளே நுழையும். அவைகளுக்கு முன்பாக பூமி அதிரும்; வானங்கள் அசையும்; சூரியனும் சந்திரனும் இருண்டுபோகும்; நட்சத்திரங்கள் ஒளி மங்கும். யெகோவா தமது படைக்குமுன் சத்தமிடுவார்; அவருடைய முகாம் மகா பெரியது, அவருடைய வார்த்தையின்படி செய்கிறதற்கு வல்லமையுள்ளது; யெகோவாவுடைய நாள் பெரிதும் மகா பயங்கரமுமாக இருக்கும்; அதைச் சகிக்கிறவன் யார்? ஆதலால் நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்திற்குத் திரும்புங்கள் என்று யெகோவா சொல்லுகிறார். நீங்கள் உங்கள் உடைகளையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையும் உள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாக இருக்கிறார். ஒருவேளை அவர் திரும்பி மனஸ்தாபப்பட்டு, உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு உணவுபலிகளையும் பானபலிகளையும் செலுத்துவதற்கான ஆசீர்வாதத்தைத் தந்தருளுவார்.