அந்த நாட்களிலே தெபொராளும் அபினோகாமின் மகன் பாராக்கும் பாடினது:
“யுத்தத்தை இஸ்ரவேலின் அதிபதிகள் நடத்தினதற்காகவும்,
மக்கள் மனப்பூர்வமாகத் தங்களை ஒப்புக்கொடுத்ததற்காகவும் அவரை ஸ்தோத்திரியுங்கள்.
ராஜாக்களே, கேளுங்கள்;
அதிபதிகளே, செவிகொடுங்கள்;
நான் யெகோவாவைப் பாடி, இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவைக் கீர்த்தனம்செய்வேன்.
யெகோவாவே, நீர் சேயீரிலிருந்து புறப்பட்டு,
ஏதோமின் வெளியிலிருந்து நடந்து வரும்போது,
பூமி அதிர்ந்தது, வானம் பொழிந்தது,
மேகங்களும் தண்ணீராகப் பொழிந்தது.
யெகோவாவுக்கு முன்பாக மலைகள் அதிர்ந்தது;
இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக சீனாய் மலையும் அதிர்ந்தது.
ஆனாத்தின் மகனான சம்காரின் நாட்களிலும்,
யாகேலின் நாட்களிலும், பெரும்பாதைகள்
பாழாய்ப் போனது; வழியில் நடக்கிறவர்கள் பக்கவழியாக நடந்தார்கள்.
தெபொராளாகிய நான் எழும்பும்வரைக்கும்,
இஸ்ரவேலிலே நான் தாயாக எழும்பும்வரைக்கும்,
கிராமங்கள் பாழாய்ப்போயின, இஸ்ரவேலின் கிராமங்கள் பாழாய்ப்போனது.
புதிய தெய்வங்களைத் தெரிந்துகொண்டார்கள்; அப்பொழுது யுத்தம் வாசல்வரையும் வந்தது; இஸ்ரவேலிலே 40,000 பேருக்குள்ளே கேடகமும் ஈட்டியும் காணப்பட்டதுண்டோ? மக்களுக்குள்ளே தங்களை மனப்பூர்வமாக ஒப்புக்கொடுத்த
இஸ்ரவேலின் அதிபதிகளை என்னுடைய இருதயம் நாடுகிறது;
யெகோவாவை ஸ்தோத்திரியுங்கள்.
வெள்ளைக் கழுதைகளின் சேணத்தின் விரிப்புகளில் வீற்றிருக்கிறவர்களே,
வழியில் நடக்கிறவர்களே,
இதைப் பற்றி யோசியுங்கள்.
தண்ணீர் மொண்டுகொள்ளும் இடங்களில் வில்வீரர்களின் இரைச்சலுக்கு நீங்கினவர்கள்
அங்கே யெகோவாவின் நீதிநியாயங்களையும்,
அவர் இஸ்ரவேலிலுள்ள தமது கிராமங்களுக்குச் செய்த
நீதிநியாயங்களையும் அறிவிப்பார்கள்;
அதுமுதல் யெகோவாவின் மக்கள்
நகரத்தின் வாசல்களில் போய் இறங்குவார்கள்.
விழி, விழி, தெபொராளே, விழி, விழி, பாட்டுப்பாடு;
பாராக்கே, எழும்பு; அபினோகாமின் குமாரனே,
உன்னைச் சிறையாக்கினவர்களைச் சிறையாக்கிக்கொண்டுபோ.
மீதியாக இருந்தவர்கள் மக்களின் தலைவர்களை ஆளும்படி செய்தார்;
யெகோவா எனக்குப் பெலசாலிகளின்மேல் ஆளுகை தந்தார்.
அமலேக்குக்கு விரோதமாக இவர்களுடைய வேர் எப்பிராயீமிலிருந்து துளிர்த்தது;
உன்னுடைய மக்களுக்குள்ளே பென்யமீன் மனிதர்கள் உனக்குப் பின்சென்றார்கள்;
மாகீரிலிருந்து அதிபதிகளும்,
செபுலோனிலிருந்து எழுதுகோலைப் பிடிக்கிறவர்களும் இறங்கிவந்தார்கள்.
இசக்காரின் பிரபுக்களும் தெபொராளோடு இருந்தார்கள்;
பாராக்கைப்போல இசக்கார் மனிதர்களும்
பள்ளத்தாக்கில் கால்நடையாக அனுப்பப்பட்டார்கள்;
ரூபனின் பிரிவினைகளால் உண்டான இருதயத்தின் நினைவுகள் மிகுதி.
மந்தைகளின் சத்தத்தைக் கேட்க,
நீ தொழுவங்களின் நடுவே இருந்துவிட்டது என்ன?
ரூபனின் பிரிவினைகளால் மனதின் வேதனைகள் மிகுதி.
கீலேயாத் மனிதர்கள் யோர்தானுக்கு அக்கரையிலே இருந்துவிட்டார்கள்;
தாண் மனிதர்கள் கப்பல்களில் தங்கியிருந்தது என்ன?
ஆசேர் மனிதர்கள் கடற்கரையிலே தங்கி,
மூன்று பக்கமும் தரைசூழ்ந்தகடல் பகுதிகளில் வாழ்ந்தார்கள்.
செபுலோனும் நப்தலியும் போர்க்களத்து முனையிலே தங்கள் உயிரை எண்ணாமல்
மரணத்திற்குத் துணிந்து நின்றார்கள்.
ராஜாக்கள் வந்து யுத்தம்செய்தார்கள்;
அப்பொழுது கானானியர்களின் ராஜாக்கள் மெகிதோவின் தண்ணீர் அருகான தானாக்கிலே யுத்தம்செய்தார்கள்;
அவர்களுக்கு வெள்ளி கொள்ளைப் பொருளாக கிடைக்கவில்லை.
வானத்திலிருந்து யுத்தம் உண்டாயிற்று;
நட்சத்திரங்கள் தங்கள் வானமண்டலங்களிலிருந்து சிசெராவோடு யுத்தம் செய்தன.
கீசோன் நதி, பூர்வ நதியாகிய கீசோன் நதியே,
அவர்களை அடித்துக்கொண்டு போனது; என்னுடைய ஆத்துமாவே,
நீ பெலவான்களை மிதித்தாய்.
அப்பொழுது குதிரைகளின் குளம்புகள் பாய்ச்சலினாலே,
பெலவான்களின் பாய்ச்சலினாலேயே, பிளந்துபோயின.
மேரோசைச் சபியுங்கள்;
அதின் குடிகளை நிச்சயமாகவே சபியுங்கள் என்று
யெகோவாவுடைய தூதனானவர் சொல்லுகிறார்;
அவர்கள் யெகோவாவோடு துணை நிற்க வரவில்லை;
பலசாலிகளுக்கு எதிராக அவர்கள் யெகோவாவோடு துணைநிற்க வரவில்லையே.