அதற்குப்பின்பு, உம்முடைய தகப்பனார் வியாதியாயிருக்கிறார்” என்று யோசேப்புக்குச் சொல்லப்பட்டது. அப்பொழுது அவன் தன் இரண்டு மகன்களாகிய மனாசேயையும் எப்பிராயீமையும் தன்னோடு அழைத்துப்போனான். “இதோ, உம்முடைய மகனாகிய யோசேப்பு உம்மிடத்தில் வந்திருக்கிறார்” என்று யாக்கோபுக்கு தெரிவிக்கப்பட்டது; அப்பொழுது இஸ்ரவேல் தன்னை திடப்படுத்திக்கொண்டு, கட்டிலின்மேல் உட்கார்ந்தான். யாக்கோபு யோசேப்பை நோக்கி: “சர்வவல்லமையுள்ள தேவன் கானான் தேசத்திலுள்ள லூஸ் என்னும் இடத்தில் எனக்குக் காட்சியளித்து, என்னை ஆசீர்வதித்து: நான் உன்னைப் பலுகவும் பெருகவும் செய்து, உன்னைப் பல ஜனக்கூட்டமாக்கி, உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கு இந்த தேசத்தை என்றென்றைக்கும் சொந்தமாகக் கொடுப்பேன் என்று என்னோடு சொன்னார். நான் உன்னிடத்தில் எகிப்திற்கு வருவதற்குமுன்னே உனக்கு எகிப்துதேசத்தில் பிறந்த உன் இரண்டு மகன்களும் என்னுடைய மகன்கள்; ரூபன் சிமியோன் என்பவர்களைப்போல, எப்பிராயீமும் மனாசேயும் என்னுடையவர்கள். இவர்களுக்குப்பின், நீ பெறும் பிள்ளைகள் உன்னுடையவர்கள்; அவர்கள் தங்கள் தங்கள் சகோதரர்களுடைய பெயரால் அழைக்கப்பட்டு அவர்களுக்குரிய சொத்தில் பங்குபெறுவார்கள். நான் பதானை விட்டு வருகையில், கானான்தேசத்தில் எப்பிராத்தாவுக்குக் கொஞ்சம் தூரம் இருக்கும்போது, வழியிலே ராகேல் என்னருகில் மரணமடைந்தாள்; அவளை அங்கே பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப் போகிற வழியிலே அடக்கம்செய்தேன்” என்றான். இஸ்ரவேல் யோசேப்பின் மகன்களைப் பார்த்து: “இவர்கள் யார்” என்று கேட்டான். யோசேப்பு தன் தகப்பனை நோக்கி: “இவர்கள் இந்த இடத்தில் தேவன் எனக்கு அருளின மகன்கள்” என்றான். அப்பொழுது அவன்: “நான் அவர்களை ஆசீர்வதிக்க அவர்களை என் அருகில் கொண்டுவா” என்றான். முதிர்வயதினால் இஸ்ரவேலின் கண்கள் மங்கலாயிருந்தால், அவன் நன்றாகப் பார்க்கமுடியாமலிருந்தது. அவர்களை அவனருகில் சேரச்செய்தான்; அப்பொழுது அவன் அவர்களை முத்தம்செய்து அணைத்துக்கொண்டான். இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: “உன் முகத்தைக் காண்பேன் என்று நான் நினைக்கவில்லை; ஆனாலும், இதோ, உன் சந்ததியையும் காணும்படி தேவன் எனக்கு அருள்செய்தார்” என்றான். அப்பொழுது அவனுடைய முழங்கால்கள் நடுவே இருந்த பிள்ளைகளை யோசேப்பு பின்னிடச்செய்து, அவனுடைய முகத்திற்கு முன்பாகத் தரைமட்டும் குனிந்து வணங்கினான். பின்பு, யோசேப்பு அவ்விருவரையும் கொண்டுவந்து, எப்பிராயீமைத் தன் வலது கையினாலே இஸ்ரவேலின் இடது கைக்கு நேராகவும், மனாசேயைத் தன் இடது கையினாலே இஸ்ரவேலின் வலது கைக்கு நேராகவும் விட்டான்.
வாசிக்கவும் ஆதி 48
கேளுங்கள் ஆதி 48
பகிர்
அனைத்து மொழியாக்கங்களையும் ஒப்பிடவும்: ஆதி 48:1-13
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்