யாத் 20:1-15

யாத் 20:1-15 IRVTAM

தேவன் பேசிச் சொல்லிய எல்லா வார்த்தைகளாவன. “உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்த உன்னுடைய தேவனாகிய யெகோவா நானே. என்னைத்தவிர உனக்கு வேறே தெய்வங்கள் உண்டாயிருக்கவேண்டாம். மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சிலையையாவது, விக்கிரகத்தையாவது நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்; நீ அவைகளை வணங்கி வழிபடவேண்டாம்; உன்னுடைய தேவனாகிய யெகோவாவாக இருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாக இருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக்குறித்து தகப்பன்மார்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடம் மூன்றாம் நான்காம் தலைமுறைவரை தண்டிக்கிறவராக இருக்கிறேன். என்னிடம் அன்புகூர்ந்து, என்னுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைவரை இரக்கம் செய்கிறவராக இருக்கிறேன். உன்னுடைய தேவனாகிய யெகோவாடைய நாமத்தை வீணிலே வழங்காமல் இருப்பாயாக; யெகோவா தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டிக்காமல் விடமாட்டார். ஓய்வுநாளைப் பரிசுத்தமாக அனுசரிக்க நினை; ஆறுநாட்களும் நீ வேலைசெய்து, உன்னுடைய செயல்களையெல்லாம் நடத்து; ஏழாம்நாளோ உன்னுடைய தேவனாகிய யெகோவாவுடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன்னுடைய மகனானாலும், உன்னுடைய மகளானாலும், உன்னுடைய வேலைக்காரனானாலும், உன்னுடைய வேலைக்காரியானாலும், உன்னுடைய மிருகஜீவனானாலும், உன்னுடைய வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், எந்த வேலையும் செய்யவேண்டாம். யெகோவா ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், யெகோவா ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார். உன்னுடைய தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன்னுடைய நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன்னுடைய தகப்பனையும் உன்னுடைய தாயையும் மதிப்பாயாக. கொலை செய்யாதே. விபசாரம் செய்யாதே. களவு செய்யாதே.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்