YouVersion Logo
Search Icon

ஆதியாகமம் 21

21
ஈசாக்கின் பிறப்பு
1யெகோவா தாம் சொல்லியிருந்தபடியே, சாராளுக்குக் கருணை காட்டினார்; தாம் கொடுத்திருந்த வாக்கை நிறைவேற்றினார். 2ஆபிரகாமின் முதிர்வயதில் சாராள் கர்ப்பவதியாகி, இறைவன் வாக்குப்பண்ணியிருந்த அந்த குறித்த காலத்திலேயே, அவனுக்கு ஒரு மகனைப் பெற்றாள். 3சாராள் தனக்குப் பெற்ற மகனுக்கு ஈசாக்கு#21:3 ஈசாக்கு என்றால் சிரிப்பு என்று அர்த்தம். என்று ஆபிரகாம் பெயரிட்டான். 4தன் மகன் ஈசாக்குப் பிறந்த எட்டாம் நாளில், இறைவன் தனக்குக் கட்டளையிட்டபடியே, ஆபிரகாம் அவனுக்கு விருத்தசேதனம் செய்தான். 5ஆபிரகாமின் மகன் ஈசாக்கு பிறந்தபோது, அவன் நூறு வயதுடையவனாய் இருந்தான்.
6அப்பொழுது சாராள், “இறைவன் என்னைச் சிரிக்க வைத்தார், இதைக் கேட்கும் யாவரும் என்னுடன் சேர்ந்து சிரிப்பார்கள்; 7சாராள் பிள்ளைகளைப் பாலூட்டி வளர்ப்பாள் என்று ஆபிரகாமுக்கு யார் சொல்லியிருப்பார்? அப்படியிருந்தும் அவரது முதிர்வயதில் நான் அவருக்கு ஒரு மகனைப் பெற்றேனே” என்றாள்.
ஆகாரும் இஸ்மயேலும்
8அந்தக் குழந்தை வளர்ந்து பால்குடி மறந்தது. ஈசாக்கு பால் மறந்த நாளன்று ஆபிரகாம் ஒரு பெரிய விருந்து கொடுத்தான். 9ஆனாலும், எகிப்தியப் பெண்ணான ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற மகன், தன் மகனைக் கேலி பண்ணுகிறதை சாராள் கண்டாள். 10அப்பொழுது அவள் ஆபிரகாமிடம், “இந்த அடிமைப் பெண்ணையும் அவள் மகனையும் வெளியே அனுப்பிவிடும்; உரிமைச்சொத்தில் இந்த அடிமைப்பெண்ணின் மகன் என் மகன் ஈசாக்குடன் சொத்துரிமையை ஒருபோதும் பகிர்ந்துகொள்ளக் கூடாது” என்றாள்.
11தன் மகனைக் குறித்த இந்தக் காரியம் ஆபிரகாமை வெகுவாய்த் துயரப்படுத்தியது. 12அப்பொழுது இறைவன் ஆபிரகாமிடம், “அந்தச் சிறுவனையும், உன் பணிப்பெண்ணையும் குறித்து அதிகம் கவலைப்படாதே. சாராள் சொல்வதை எல்லாம் கேள், ஏனெனில் ஈசாக்கின் மூலமே உனக்கு சந்ததிகள் உண்டாகும். 13பணிப்பெண்ணின் மகனும் உன் சந்ததியானபடியால், அவனையும் ஒரு நாடாக்குவேன்” என்றார்.
14மறுநாள் அதிகாலையில் ஆபிரகாம் கொஞ்சம் உணவையும், ஒரு தோல் குடுவையில் தண்ணீரையும் எடுத்து ஆகாரிடம் கொடுத்தான். அவன் அவற்றை அவளுடைய தோளில் வைத்து, மகனுடன் அவளை அனுப்பிவிட்டான். அவள் தன் வழியே போய் பெயெர்செபாவின் வனாந்திரத்தில் அலைந்து திரிந்தாள்.
15தோல் குடுவையின் தண்ணீர் முடிந்ததும், அவள் புதர்ச்செடிகள் ஒன்றின்கீழ் தன் மகனை விட்டு, 16“பிள்ளை சாகிறதை என்னால் பார்க்க முடியாது” என்று சொல்லி அவன் இருக்கும் இடத்திலிருந்து ஒரு அம்பு பாயும் தூரத்தில் போய் உட்கார்ந்து, அவள்#21:16 எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதியில் பிள்ளை என்றுள்ளது. சத்தமாய் அழத்தொடங்கினாள்.
17இறைவன் பிள்ளை அழும் சத்தத்தைக் கேட்டார், இறைவனின் தூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு, “ஆகாரே, நடந்தது என்ன? பயப்படாதே; அங்கே உன் மகன் அழும் சத்தத்தை இறைவன் கேட்டார். 18அவனைத் தூக்கி, அவனைக் கையில் பிடித்துக்கொண்டு போ. அவனை ஒரு பெரிய நாடாக்குவேன்” என்றார்.
19பின்பு இறைவன் அவளுடைய கண்களைத் திறந்தார், அப்போது அவள் தண்ணீருள்ள ஒரு கிணற்றைக் கண்டாள். அவள் தன் குடுவையில் நீரை நிரப்பி தன் மகனுக்குக் குடிக்கக் கொடுத்தாள்.
20அவன் வளரும்போது இறைவன் அவனுடன் இருந்தார். அவன் பாலைவனத்தில் வசித்து, வில் வீரனானான். 21இஸ்மயேல் பாரான் பாலைவனத்தில் குடியிருக்கையில், அவனுடைய தாய் எகிப்தியப் பெண் ஒருத்தியை அவனுக்குத் திருமணம் செய்து கொடுத்தாள்.
ஆபிரகாம் அபிமெலேக்குடன் ஒப்பந்தம்
22அக்காலத்தில் அபிமெலேக்கும் அவனுடைய படைத்தளபதி பிகோலும் ஆபிரகாமிடம், “நீர் செய்யும் எல்லாவற்றிலும் இறைவன் உம்முடனேகூட இருக்கிறார். 23ஆகையால் நீர் எனக்கோ, என் பிள்ளைகளுக்கோ, எனது சந்ததிகளுக்கோ எவ்விதத் தீங்கும் செய்யமாட்டேன் என்று, இறைவனுக்குமுன் எனக்கு ஆணையிட்டுக்கொடும். நான் உமக்குத் தயவுகாட்டியதுபோல், எனக்கும் நீர் அந்நியனாய் வாழும் இந்நாட்டிற்கும் எப்பொழுதும் தயவுகாட்டும்” என்றான்.
24அதற்கு ஆபிரகாம், “அப்படியே ஆணையிட்டுக் கொடுக்கிறேன்” என்றான்.
25பின்பு அபிமெலேக்கின் வேலைக்காரர் கைப்பற்றிய கிணற்றைப்பற்றி, ஆபிரகாம் அபிமெலேக்கிடம் முறையிட்டான். 26அதற்கு அபிமெலேக்கு, “இதைச் செய்தவன் யாரென்று எனக்குத் தெரியாது. நீரும் எனக்கு இதை அறிவிக்கவில்லை; நான் இன்றுதான் இதைப்பற்றிக் கேள்விப்பட்டேன்” என்றான்.
27அப்பொழுது ஆபிரகாம், செம்மறியாடுகளையும் மாடுகளையும் கொண்டுவந்து, அபிமெலேக்குக்குக் கொடுத்தான். அவர்கள் இருவரும் ஒரு உடன்படிக்கை செய்துகொண்டார்கள். 28ஆபிரகாம் ஏழு பெண் செம்மறியாட்டுக் குட்டிகளை மந்தையிலிருந்து பிரித்தெடுத்தான். 29அப்பொழுது அபிமெலேக்கு, “இந்த ஏழு செம்மறியாட்டுக் குட்டிகளையும் பிரித்து வைப்பதன் பொருள் என்ன?” என்று ஆபிரகாமைக் கேட்டான்.
30அதற்கு ஆபிரகாம், “நானே இந்தக் கிணற்றை வெட்டினேன் என்பதற்குச் சாட்சியாக, நீர் இந்த ஏழு பெண் செம்மறியாட்டுக் குட்டிகளையும் என்னிடமிருந்து ஏற்றுக்கொள்ளவேண்டும்” என்றான்.
31அவர்கள் இருவரும் அந்த இடத்தில் ஆணையிட்டு உறுதியளித்தபடியால், அந்த இடம் பெயெர்செபா#21:31 பெயெர்செபா என்றால் ஏழு கிணறுகள் அல்லது சபதத்தின் கிணறு என்று பொருள். என்று அழைக்கப்பட்டது.
32பெயெர்செபாவிலே உடன்படிக்கை செய்தபின், அபிமெலேக்கும் அவன் படைத்தளபதி பிகோலும், பெலிஸ்திய நாட்டிலுள்ள வீடுகளுக்குத் திரும்பிப் போனார்கள். 33ஆபிரகாம் பெயெர்செபாவிலே தமரிஸ்கு மரத்தை நட்டு, அங்கே நித்திய இறைவனான யெகோவாவினுடைய பெயரைக் கூப்பிட்டு வழிபட்டான். 34ஆபிரகாம் பெலிஸ்தியருடைய நாட்டில் அநேக நாட்கள் தங்கியிருந்தான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in