யோபுடைய சரித்திரம் 16
16
யோபு எலிப்பாசுக்குப் பதிலளிக்கிறான்
1அப்போது யோபு பதிலாக,
2“நான் இவற்றையெல்லாம் முன்பே கேட்டிருக்கிறேன்.
நீங்கள் மூவரும் எனக்குத் தொல்லையை அல்லாமல் ஆறுதலைத் தரவில்லை.
3உங்கள் நீண்ட பேச்சுகளுக்கு முடிவேயில்லை!
ஏன் தொடர்ந்து விவாதிக்கிறீர்கள்?
4எனக்கு வந்த தொல்லைகள் உங்களுக்கு ஏற்பட்டால்
நீங்கள் சொல்வதையே நானும் சொல்லக் கூடும்.
நானும் ஞானமுள்ள காரியங்களை உங்களுக்குச் சொல்லி,
என் தலையை உங்களுக்கு நேர் அசைக்கக்கூடும்.
5நான் கூறும் காரணங்களால் உங்களுக்கு உற்சாகமூட்டி
உங்களுக்கு நம்பிக்கையளிக்க முடியும்.
6“ஆனால் நான் கூறுபவை எதுவும் என் வேதனையை அகற்ற முடியாது!
ஆயினும் மௌனமாய் இருப்பதிலும் பயன் இல்லை.
7தேவனே, உண்மையாகவே என் பலத்தை எடுத்துப்போட்டீர்.
என் குடும்பம் முழுவதையும் அழித்தீர்.
8நீர் என்னை இணைத்து பலவீனமாக்கினீர்.
அதனால் நான் குற்றவாளியே என ஜனங்கள் நினைக்கிறார்கள்.
9“தேவன், என்னைத் தாக்குகிறார்,
அவர் என் மீது கோபங்கொண்டு, என் உடம்பைக் கிழித்தெறிகிறார்.
தேவன் எனக்கெதிராக அவரது பற்களைக் கடிக்கிறார்.
என் பகைவனின் கண்கள் என்னை வெறுப்போடு (பகையோடு) பார்க்கின்றன.
10ஜனங்கள் என்னைச் சூழ்ந்து ஒன்றுக் கூடி, என்னை பார்த்து நகைத்து,
என் முகத்தில் அறைகிறார்கள்.
11தேவன் என்னைத் தீய ஜனங்களிடம் ஒப்படைத்தார்.
அத்தீயர் என்னைக் காயப்படுத்தும்படிவிட்டார்.
12எனக்கு எல்லாம் நல்லபடியாக இருந்தன, ஆனால், பின்பு தேவன் என்னை நசுக்கினார்!
ஆம், அவர் என்னைக் கழுத்தில் பிடித்து, என்னைத் துண்டுகளாக நொறுக்கினார்!
தேவன் என்னை இலக்காகப் பயன்படுத்தினார்.
13தேவனுடைய வில்வீரர்கள் என்னைச் சூழ்ந்து நிற்கிறார்கள்.
அவர் என் சிறுநீரகங்கள்மேல் அம்புகளை எய்கிறார்.
அவர் இரக்கம் காட்டவில்லை.
என் ஈரலின் பித்த தண்ணீரைத் தரையில் சிந்தச் செய்கிறார்.
14மீண்டும், மீண்டும் தேவன் என்னைத் தாக்குகிறார்.
யுத்தம் செய்யும் வீரனைப் போல் அவர் என் மேல் பாய்கிறார்.
15“நான் மிகவும் துயரமுற்றிருக்கிறேன், எனவே துயரத்தைக் காட்டும் இந்த ஆடைகளை அணிந்திருக்கிறேன்.
நான் இங்குத் துகளிலும் சாம்பலிலும் உட்கார்ந்து, நான் தோற்கடிக்கப்பட்டதாய் உணருகிறேன்.
16அழுது என் முகம் சிவந்திருக்கிறது.
கருவளையங்கள் என் கண்ணைச் சுற்றிலும் காணப்படுகின்றன.
17நான் யாரிடமும் கொடுமையாக நடந்துக்கொண்டதில்லை, ஆனால் இத்தீய காரியங்கள் எனக்கு நேரிட்டுள்ளன.
என் ஜெபங்கள் தூய்மையும் நேர்மையுமானவை.
18“பூமியே, எனக்குச் செய்யப்பட்ட அநீதிகளை மறைக்காதே.
நியாயத்திற்கான என் வேண்டுதல் (நிறுத்த) தடுக்கப்படாமல் இருக்கட்டும்.
19இப்போதும் பரலோகத்தில் யாரேனும் இருந்தால், அவர்கள் எனக்காக பேசுவார்கள்,
மேலிருந்து யாராவது எனக்காக சாட்சி கூறுவார்கள்.
20என் கண்கள் தேவனுக்கு முன்னால் கண்ணீரைச் சொரிகையில்
என் நண்பர்கள் எனக்கு எதிராகப் பேசுகிறார்கள்.
21நண்பனுக்காக வாதாடுகின்ற ஒரு மனிதனைப் போன்று
எனக்காக தேவனை வேண்டுகிற ஒருவன் எனக்கு வேண்டும்!
22“இன்னும் சில ஆண்டுகளில்
திரும்பமுடியாத அந்த இடத்திற்கு, (மரணம்) நான் போவேன்.”
Currently Selected:
யோபுடைய சரித்திரம் 16: TAERV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International