YouVersion Logo
Search Icon

சங்கீதம் 95

95
சங்கீதம் 95
1வாருங்கள், யெகோவாவை மகிழ்ச்சியோடு பாடுவோம்;
நம்முடைய இரட்சிப்பின் கன்மலையை சத்தமிட்டுத் துதிப்போம்.
2நன்றியுடன் அவர்முன் வருவோம்;
இசையினாலும் பாட்டினாலும் அவரைப் புகழ்ந்து உயர்த்துவோம்.
3யெகோவாவே மகா இறைவனாய் இருக்கிறார்;
எல்லாத் தெய்வங்களுக்கும் மேலான மகா அரசருமாய் இருக்கிறார்.
4பூமியின் ஆழங்கள் அவருடைய கரத்தில் இருக்கின்றன;
மலை உச்சிகளும் அவருக்கே உரியவை.
5கடல் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்;
வறண்ட நிலத்தையும் அவருடைய கரங்களே உருவாக்கின.
6வாருங்கள், நம்மை உண்டாக்கின யெகோவாவுக்கு முன்பாக
நாம் குனிந்து, பணிந்து, வழிபடுவோம்;
நாம் முழங்காலிடுவோம்.
7அவரே நம் இறைவன்;
நாம் அவருடைய மேய்ச்சலின் மக்களும்
அவருடைய பராமரிப்புக்குள்ளான மந்தையுமாய் இருக்கிறோம்.
இன்று நீங்கள் அவருடைய குரலைக் கேட்பீர்களானால்,
8“அன்று மேரிபாவில் விவாதம் செய்தது போலவும்,
பாலைவனத்திலே மாசாவில் சோதனை செய்தது போலவும்,
உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்த வேண்டாம்.
9அங்கே உங்கள் முன்னோர்கள் என்னைச் சோதித்தார்கள்;
நான் செய்தவைகளைக் கண்டிருந்தும் என்னைப் பரீட்சை பார்த்தார்கள்.
10நான் நாற்பது வருடங்களாக அந்தச் சந்ததியோடு கோபமாயிருந்தேன்;
‘அவர்கள் என்னைவிட்டு விலகிப்போகும் இருதயமுள்ள மக்கள் என்றும்,
என்னுடைய வழிகளை அறியாதவர்கள்’ என்றும் நான் சொன்னேன்.
11எனவே கோபங்கொண்டு,
‘அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பதில்லை’ என்று,
ஆணையிட்டு அறிவித்தேன்.”

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in