YouVersion Logo
Search Icon

சங்கீதம் 66

66
சங்கீதம் 66
பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதமாகிய பாட்டு.
1பூமியிலுள்ளவர்களே, நீங்கள் எல்லோரும் சந்தோஷத்துடன்
இறைவனை ஆர்ப்பரித்துத் துதியுங்கள்!
2அவருடைய பெயரின் மகிமையைப் பாடுங்கள்;
அவருடைய துதியை மகிமையுள்ளதாக்குங்கள்.
3இறைவனிடம் சொல்லுங்கள், “உமது செயல்கள் எவ்வளவு பிரமிக்கத்தக்கவை!
உமது வல்லமை பெரிதானது;
அதினால் பகைவர்கள் உமக்கு வஞ்சகம் பேசி அடங்குவார்கள்.
4பூமியிலுள்ள அனைவரும் உம்மைப் பணிந்து வழிபடுகிறார்கள்;
அவர்கள் உமக்குத் துதி பாடுகிறார்கள்,
அவர்கள் உமது பெயருக்குத் துதி பாடுகிறார்கள்.”
5இறைவன் செய்துள்ளவற்றை வந்து பாருங்கள்;
மனிதரிடையே அவர் செய்யும் செயல்கள் எவ்வளவு பயப்படத்தக்கவை.
6அவர் கடலை வறண்ட நிலமாக மாற்றினார்;
மக்கள் கால்நடையாய் தண்ணீரைக் கடந்தார்கள்;
வாருங்கள், அவரில் களிகூருவோம்.
7அவர் தமது வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார்;
அவருடைய கண்கள் நாடுகளைக் கவனித்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றன;
கலகக்காரர் அவருக்கு எதிராக எழும்பாதிருக்கட்டும்.
8எல்லா மக்களும், நம்முடைய இறைவனைத் துதியுங்கள்;
அவரைத் துதிக்கும் சத்தம் கேட்கப்படுவதாக.
9அவர் நம்முடைய உயிர்களைப் பாதுகாத்திருக்கிறார்;
நம்முடைய பாதங்கள் சறுக்கிவிடாதபடி காத்துக்கொள்கிறார்.
10இறைவனே, நீர் எங்களைச் சோதித்துப் பார்த்தீர்;
வெள்ளியைப்போல் எங்களைப் புடமிட்டுச் சுத்திகரித்தீர்.
11எங்களைச் சிறைபிடித்து,
எங்கள் முதுகுகளில் பாரங்களை சுமத்தினீர்.
12மனிதரை எங்கள் தலையின்மேல் ஏறிப்போகச் செய்தீர்;
நாங்கள் நெருப்பையும் தண்ணீரையும் கடந்துசென்றோம்,
ஆனால் நீர் எங்களைச் செழிப்பான இடத்திற்கு கொண்டுவந்தீர்.
13நான் தகன காணிக்கைகளுடன் உமது ஆலயத்திற்கு வருவேன்;
எனது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவேன்.
14நான் துன்பத்திலிருந்தபோது
என் உதடுகளைத் திறந்து, என் வாயினால் சொன்ன நேர்த்திக் கடன்களைச் செய்வேன்.
15நான் கொழுத்த மிருகங்களையும்
செம்மறியாட்டுக் கடாக்களையும் உமக்குப் பலியிடுவேன்;
நான் எருதுகளையும் வெள்ளாடுகளையும் காணிக்கையாகச் செலுத்துவேன்.
16இறைவனுக்குப் பயப்படுகிறவர்களே, நீங்கள் எல்லோரும் வந்து, செவிகொடுங்கள்;
அவர் எனக்குச் செய்தவற்றை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.
17நான் என் வாயினால் அவரைச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்;
அவருடைய துதி என் நாவில் இருந்தது.
18என் இருதயத்தில் பாவத்திற்கு இடமளித்திருந்தால்,
யெகோவா எனக்குச் செவிகொடுக்கமாட்டார்;
19இறைவனோ நிச்சயமாய் எனக்குச் செவிகொடுத்து,
என் மன்றாட்டின் குரலைக் கேட்டார்.
20என் மன்றாட்டைத் தள்ளிவிடாமல்,
என்னிடமிருந்து தமது உடன்படிக்கையின் அன்பை விலக்காமலிருந்த
இறைவனுக்குத் துதி உண்டாகட்டும்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in