YouVersion Logo
Search Icon

சங்கீதம் 49

49
சங்கீதம் 49
கோராகின் மகன்களிலுள்ள பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம்.
1மக்களே, நீங்கள் எல்லோரும் இதைக் கேளுங்கள்,
இந்த உலகத்தில் வாழ்கிறவர்களே,
2தாழ்ந்தோரே, உயர்ந்தோரே, செல்வந்தரே, ஏழைகளே,
எல்லோரும் ஒருமித்துச் செவிகொடுங்கள்:
3என் வாய் ஞானமுள்ள வார்த்தைகளைப் பேசும்;
என் இருதயத்திலிருந்து வரும் தியானம் விளங்கிக்கொள்ளும் ஆற்றலைக் கொடுக்கும்.
4நான் பழமொழிக்கு என் செவியைச் சாய்ப்பேன்;
விடுகதையை யாழ் இசைத்து விவரிப்பேன்:
5தீங்கு நாட்கள் வரும்போதும்,
கொடிய ஏமாற்றுக்காருடைய அக்கிரமம் என்னைச் சூழ்ந்துகொள்ளும்போதும்
நான் ஏன் பயப்படவேண்டும்?
6அவர்கள் தங்கள் செல்வத்தில் நம்பிக்கை வைத்து,
தங்கள் மிகுதியான உடைமைகளில் பெருமை பாராட்டுகிறார்கள்.
7ஒருவனாலும் இன்னொருவனுடைய உயிரை மீட்கமுடியாது;
அவனுக்கான மீட்பின் பதிலீட்டை இறைவனுக்குக் கொடுக்கவும் முடியாது.
8ஏனெனில் உயிருக்கான மீட்பின் பதிலீடு விலையுயர்ந்தது;
எந்த விலை கொடுத்தும் மீட்கமுடியாது.
9அவர்கள் அழிவைக் காணாமல்
என்றென்றும் வாழும்படி எப்படிப்பட்ட விலையும் கொடுக்க முடியாது.
10ஞானிகள் சாவதையும்,
மூடரும் புத்தியற்றவர்களும் அழிவதையும் எல்லோராலும் காணமுடியும்;
அவர்கள் தங்கள் செல்வத்தை மற்றவர்களுக்கு விட்டுச் செல்வதைக் காணலாம்.
11தங்கள் பெயர்களையே அவர்கள் நிலங்களுக்கு வைத்தாலும்,
அவர்களுடைய கல்லறைகளே என்றென்றைக்கும் அவர்கள் வீடாகவும்
முடிவற்ற தலைமுறைகளுக்கு அவர்களுடைய தங்குமிடமாகவும் நிலைத்திருக்கும்.
12ஆனாலும் மக்கள் நன்மதிப்பிலே நிலைத்திருக்கிறதில்லை;
அவர்கள் அழிந்துபோகும் மிருகங்களைப்போலவே இருக்கிறார்கள்.
13தங்களிலேயே நம்பிக்கை வைக்கிறவர்களின் முடிவு இதுவே;
இவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுப் பின்பற்றுகிறவர்களின் நிலையும் அதுவே.
14அவர்கள் செம்மறியாடுகளைப்போல சாவுக்கென்றே நியமிக்கப்பட்டுள்ளார்கள்;
மரணம் அவர்களின் மேய்ப்பனாயிருக்கும்.
நீதிமான்கள் காலையில் அவர்களை ஆளுகை செய்வார்கள்;
அவர்கள் அரண்மனையில் நிலைத்திராமல்,
கல்லறை அவர்களுடைய உருவத்தை அழித்துவிடும்.
15ஆனால், இறைவனோ என் உயிரைப் பாதாளத்திலிருந்து மீட்டுக்கொள்வார்;
அவர் நிச்சயமாக என்னைத் தம்மிடத்தில் ஏற்றுக்கொள்வார்.
16பிறர் செல்வந்தர்களாகி,
அவர்கள் வீட்டின் செழிப்பு அதிகரிக்கும்போது, திடுக்கிடாதே;
17ஏனெனில் அவர்கள் சாகும்போது, தம்முடன் ஒன்றையும் கொண்டுபோகமாட்டார்கள்;
அவர்களுடைய செழிப்பும் அவர்களைப் பின்தொடராது.
18அவர்கள் உயிரோடிருந்தபோது,
தங்களை ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று எண்ணினார்கள்.
அவர்கள் செழிப்படைந்து இருக்கும்போது மனிதர் அவர்களைப் புகழ்ந்தார்கள்.
19ஆனால் அவர்கள் தங்களுடைய முன்னோர்களைப் போலவே மரிப்பார்கள்;
வாழ்வின் ஒளியை இனி ஒருபோதும் காணமாட்டார்கள்.
20செல்வந்தராயிருந்தும் அறிவு இல்லாதிருந்தால்
அவர்கள் அழிந்துபோகும் மிருகத்தைப் போல் இருக்கிறார்கள்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in