YouVersion Logo
Search Icon

சங்கீதம் 146

146
சங்கீதம் 146
1யெகோவாவைத் துதி#146:1 எபிரெயத்தில் அல்லேலூயா வச 10.
என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி.
2நான் என் வாழ்நாளெல்லாம் யெகோவாவைத் துதிப்பேன்;
நான் உயிரோடிருக்கும்வரை என் இறைவனுக்குத் துதி பாடுவேன்.
3உன் நம்பிக்கையை இளவரசர்களிலும்,
உன்னை மீட்கமுடியாத மனுமக்களிலும் வைக்காதே.
4அவர்களுடைய ஆவி பிரியும்போது அவர்கள் மண்ணுக்கே திரும்பிப் போவார்கள்;
அந்த நாளிலேயே அவர்களுடைய திட்டங்கள் ஒன்றுமில்லாமல் போகும்.
5யாக்கோபின் இறைவனைத் தங்கள் உதவியாகக் கொண்டிருப்போர்,
தங்களுடைய இறைவனாகிய யெகோவாவிடம்
நம்பிக்கையை வைத்திருப்போர் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
6அவரே வானத்தையும் பூமியையும்
கடலையும் அவற்றிலுள்ள எல்லாவற்றையும் படைத்தவர்;
யெகோவாவாகிய அவர் என்றைக்கும் உண்மையுள்ளவராய் இருக்கிறார்.
7அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்;
பசியுள்ளவர்களுக்கு உணவு கொடுக்கிறார்.
யெகோவா கைதிகளை விடுதலையாக்குகிறார்,
8யெகோவா குருடருக்குப் பார்வை கொடுக்கிறார்,
யெகோவா தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்துகிறார்,
யெகோவா நீதிமான்களில் அன்பாயிருக்கிறார்.
9யெகோவா அயல்நாட்டவர்களைப் பாதுகாக்கிறார்,
அநாதைகளையும் விதவைகளையும் ஆதரிக்கிறார்,
ஆனால் கொடியவர்களின் வழிகளை அவர் முறியடிக்கிறார்.
10யெகோவா என்றென்றும் ஆளுகை செய்கிறார்;
சீயோனே, உன் இறைவன் எல்லாத் தலைமுறைகளுக்கும் அரசாளுகிறார்.
யெகோவாவைத் துதி.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in