லேவியராகமம் 9
9
ஆசாரியர்கள் ஊழியம் ஆரம்பித்தல்
1மோசே எட்டாம் நாளில்#9:1 7 நாள் ஒழுங்குமுறை விழாவுக்குப் பிறகு எட்டாவது நாளில். ஆரோனையும் அவன் மகன்களையும், இஸ்ரயேலின் சபைத்தலைவர்களையும் அழைத்தான். 2அவன் ஆரோனிடம், “நீ உன்னுடைய பாவநிவாரண காணிக்கைக்காக ஒரு குறைபாடற்ற இளங்காளையையும், உன்னுடைய தகன காணிக்கைக்காக குறைபாடற்ற ஒரு ஆட்டுக் கடாவையும் எடுத்து, அவற்றை யெகோவாவுக்கு முன்பாக கொண்டுவா. 3பின்பு இஸ்ரயேலரிடம் நீ சொல்லவேண்டியதாவது, ‘பாவநிவாரண காணிக்கைக்காக வெள்ளாட்டுக்கடாவையும், தகன காணிக்கைக்காக கன்றுக்குட்டியையும், ஒரு செம்மறியாட்டுக் குட்டியையும் எடுத்துக்கொள்ளுங்கள்; அவை இரண்டும் குறைபாடற்றதாயும், ஒரு வயதுடையதாயும் இருக்கவேண்டும். 4சமாதான காணிக்கைக்காக ஒரு மாட்டையும், ஒரு செம்மறியாட்டுக் கடாவையும், எண்ணெய் கலந்து பிசைந்த தானியக் காணிக்கையுடன் யெகோவாவுக்கு முன்பாகச் செலுத்தும்படி கொண்டுவாருங்கள். ஏனெனில் இன்று யெகோவா உங்களுக்குக் காட்சியளிப்பார்’ என்று சொல்” என்றான்.
5அவர்கள் மோசே கட்டளையிட்ட பொருட்களை சபைக் கூடாரத்திற்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள். சபையார் அனைவரும் நெருங்கிவந்து, யெகோவா முன்னிலையில் நின்றார்கள். 6அப்பொழுது மோசே, “யெகோவாவின் மகிமை உங்களுக்குத் தோன்றும்படி, நீங்கள் செய்யவேண்டுமென யெகோவா கட்டளையிட்டது இதுவே” என்றான்.
7மோசே ஆரோனிடம், “நீ பலிபீடத்தின் அருகில் வந்து பாவநிவாரண காணிக்கையையும், தகன காணிக்கையையும் பலியிட்டு, உனக்காகவும், மக்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். மக்களுக்கான காணிக்கையைப் பலியிட்டு, அவர்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். யெகோவா கட்டளையிட்டபடியே இவற்றைச் செய்” என்றான்.
8அப்படியே ஆரோன் பலிபீடத்திற்கு வந்து, தனது பாவநிவாரண காணிக்கையாக கன்றுக்குட்டியை வெட்டிக்கொன்றான். 9ஆரோனுடைய மகன்கள் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள். ஆரோன் தன் விரலை இரத்தத்தில் தோய்த்து, பலிபீடத்தின் கொம்புகளில் பூசினான். மீதமுள்ள இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் ஊற்றினான். 10பாவநிவாரண காணிக்கை மிருகத்தின் கொழுப்பையும், சிறுநீரகங்களையும், ஈரலை மூடியுள்ள கொழுப்பையும் பலிபீடத்தில் அவன் எரித்தான். யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே இது செய்யப்பட்டது. 11இறைச்சியையும், தோலையும் முகாமுக்கு வெளியே எரித்தான்.
12அதன்பின் தகன காணிக்கை மிருகத்தை அவன் வெட்டிக்கொன்றான். ஆரோனின் மகன்கள் இரத்தத்தை அவனிடம் கொடுத்தார்கள். அவன் அதை பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளித்தான். 13அவர்கள் தகன காணிக்கையை, தலை உட்பட துண்டம் துண்டமாக அவனிடம் கொடுத்தார்கள். அவன் அவைகளைப் பலிபீடத்தின்மேல் எரித்தான். 14அவன் உள்ளுறுப்புகளையும், கால்களையும் கழுவி அவற்றைப் பலிபீடத்தில் இருந்த தகன காணிக்கையின்மேல் வைத்து எரித்தான்.
15பின்பு ஆரோன், மக்களுக்கான காணிக்கையைக் கொண்டுவந்தான். அவன் மக்களுக்கான பாவநிவாரண காணிக்கையான வெள்ளாட்டை எடுத்து, அதை வெட்டிக்கொன்று, முன்பு பலியிட்ட மிருகத்தைப்போலவே பாவநிவாரண காணிக்கையாக அதைச் செலுத்தினான்.
16அவன் தகனகாணிக்கையைக் கொண்டுவந்து, விதிக்கப்பட்டிருந்த முறைப்படியே அதைச் செலுத்தினான். 17அத்துடன் அவன் தானியக் காணிக்கையையும் கொண்டுவந்து, அதில் ஒரு கைநிறைய எடுத்து, காலையில் செலுத்திய தகன காணிக்கையுடன் அதையும் பலிபீடத்தின்மேல் எரித்தான்.
18பின்பு அவன் மக்களுக்கான சமாதான காணிக்கையாக, மாட்டையும், செம்மறியாட்டுக் கடாவையும் வெட்டிக்கொன்றான். ஆரோனின் மகன்கள் இரத்தத்தை அவனிடம் கொடுத்தார்கள். அவன் அதைப் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளித்தான். 19ஆரோனின் மகன்கள் மாட்டினுடைய, செம்மறியாட்டுக் கடாவினுடைய கொழுப்பான பாகங்களை, அதாவது கொழுத்த வால், கொழுப்புப்படை, சிறுநீரகங்கள், ஈரலை மூடியுள்ள கொழுப்பு ஆகியவற்றை எடுத்து, 20மிருகங்களின் நெஞ்சுப்பகுதியில் வைத்தார்கள். பின்பு ஆரோன் அந்தக் கொழுப்பை பலிபீடத்தின்மேல் எரித்தான். 21நெஞ்சுப்பகுதிகளையும், வலது தொடையையும் ஆரோன், மோசே கட்டளையிட்டபடி யெகோவாவுக்கு முன்பாக அசைவாட்டும் காணிக்கையாக அசைவாட்டினான்.
22அதன்பின் ஆரோன் மக்களை நோக்கி தன் கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தான். பாவநிவாரண காணிக்கையையும், தகன காணிக்கையையும், சமாதான காணிக்கையையும் பலியிட்டு முடித்துக் கீழே இறங்கினான்.
23அதன்பின் மோசேயும் ஆரோனும் சபைக் கூடாரத்திற்குள்ளே போனார்கள். அவர்கள் வெளியே வந்து, மக்களை ஆசீர்வதித்தபொழுது, யெகோவாவினுடைய மகிமை மக்கள் அனைவருக்கும் முன் தோன்றியது. 24யெகோவாவிடமிருந்து நெருப்பு புறப்பட்டு, பலிபீடத்தின்மேல் இருந்த தகன காணிக்கையையும், கொழுப்பான பாகங்களையும் பட்சித்தது. மக்கள் அனைவரும் அதைக் கண்டபோது, மகிழ்ச்சியினால் ஆர்ப்பரித்து, முகங்குப்புற விழுந்தார்கள்.
Currently Selected:
லேவியராகமம் 9: TCV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.