YouVersion Logo
Search Icon

லேவியராகமம் 24

24
எண்ணெயும் அப்பமும்
1யெகோவா மோசேயிடம், 2“விளக்குகள் தொடர்ந்து எரிந்து ஒளி கொடுக்கும்படியாக, ஒலிவ விதைகளை இடித்துப் பிழிந்தெடுத்த தெளிந்த எண்ணெயைக் கொண்டுவரும்படி இஸ்ரயேலருக்குக் கட்டளையிடு. 3சபைக் கூடாரத்திலே, சாட்சிப்பெட்டியின் திரைக்கு வெளியே, இந்த விளக்குகளை ஆரோன் யெகோவா முன்னிலையில் மாலைவேளை தொடங்கி விடியும்வரை தொடர்ந்து எரியும்படிச் செய்யவேண்டும். இது தலைமுறைதோறும் ஒரு நிரந்தர நியமமாக இருக்கவேண்டும். 4சுத்தத் தங்கத்தினாலான குத்துவிளக்கின் மேலுள்ள விளக்குகள் யெகோவா முன்னிலையில் தொடர்ந்து எரியும்படி அவன் பார்த்துக்கொள்ளவேண்டும்.
5“சிறந்த மாவை எடுத்து, ஒவ்வொரு அப்பத்திற்கும் பத்தில் இரண்டு எப்பா அளவு மாவைப் பயன்படுத்தி, பன்னிரண்டு அப்பங்களைச் சுடவேண்டும். 6ஒவ்வொரு வரிசையிலும் ஆறு அப்பங்களாக, யெகோவா முன்னிலையில் காணப்படும் சுத்தத் தங்கத்தினாலான மேஜையின்மேல் இரண்டு வரிசைகளில் அவற்றை வைக்கவேண்டும். 7ஒவ்வொரு வரிசையிலும் அப்பத்திற்கான ஞாபகார்த்தப் பங்காகவும், நெருப்பினால் யெகோவாவுக்குச் செலுத்தப்படும் ஒரு காணிக்கையாகவும் இருக்கும்படி, கொஞ்சம் சுத்தமான நறுமணத்தூளையும் போடவேண்டும். 8ஒவ்வொரு ஓய்வுநாளிலும் இஸ்ரயேலர் சார்பான, நிரந்தர உடன்படிக்கையாக இந்த அப்பம் யெகோவாவுக்கு முன்பாக நித்தமும் வைக்கப்பட வேண்டும். 9இது ஆரோனுக்கும் அவன் மகன்களுக்கும் உரியது. அவர்கள் இதை ஒரு பரிசுத்த இடத்தில் சாப்பிடவேண்டும். ஏனெனில், இது யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கைகளில் அவர்களுடைய நிரந்தரமான உரிமையில் மகா பரிசுத்தமான பங்கு.”
நிந்தனைக்குத் தண்டனை
10ஒரு எகிப்திய மனிதனுக்கும், இஸ்ரயேல் பெண்ணுக்கும் மகனான ஒரு மனிதன் இஸ்ரயேல் மக்களுக்குள் போனான். அவனுக்கும் ஒரு இஸ்ரயேலனுக்கும் இடையில் முகாமுக்குள் சண்டை மூண்டது. 11அந்த நேரத்தில் இஸ்ரயேல் பெண்ணின் மகனான அவன், யெகோவாவின் பெயரை தூஷண வார்த்தைகளால் நிந்தித்தான். எனவே அவர்கள் அவனை மோசேயிடம் கொண்டுவந்தார்கள். அவனுடைய தாய் தாண் கோத்திரத்து திப்ரியின் மகளான செலோமித். 12அவனைப்பற்றி யெகோவாவின் விருப்பம் தெளிவாகும் வரை, அவனை அவர்கள் காவலில் வைத்தார்கள்.
13அப்பொழுது யெகோவா மோசேயுடன் பேசிச் சொன்னதாவது: 14“நீ நிந்தித்தவனை முகாமுக்கு வெளியே கொண்டுபோக வேண்டும். அவன் நிந்தித்ததைக் கேட்டவர்கள் எல்லோரும் தங்கள் கைகளை அவன் தலையில் வைக்கவேண்டும். பின்பு சபையார் அனைவரும் அவனைக் கல்லெறிந்து கொல்லவேண்டும். 15நீ இஸ்ரயேலரிடம் சொல்லவேண்டியதாவது: யாராவது தன் இறைவனை நிந்தித்தால், அக்குற்றத்திற்கு அவன் பொறுப்பாளியாவான். 16யெகோவாவின் பெயரை நிந்திக்கிற எவனும் கொல்லப்படவேண்டும். சபையார் அனைவரும் அவனைக் கல்லெறிந்து கொல்லவேண்டும். அவன் பிறநாட்டினனோ, தன் நாட்டினனோ யெகோவாவின் பெயரை நிந்தித்தால் அவன் கொல்லப்படவேண்டும்” என்றார்.
17“ ‘யாராவது ஒருவன் ஒரு மனித உயிரைக் கொலை செய்தால், அவன் கொல்லப்படவேண்டும். 18யாராவது ஒருவன் இன்னொருவனுடைய மிருகத்தைக் கொன்றால், அவன் உயிருக்குப்பதில், உயிராகப் பதிலீடு செய்யவேண்டும். 19யாராவது ஒருவன் தன் அயலானை காயப்படுத்தினால், அவன் செய்தபடியே, அவனுக்கும் திருப்பிச் செய்யப்படவேண்டும். 20முறிவுக்கு முறிவு, கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் பதிலீடு செய்யப்படவேண்டும். மற்றவனைக் காயப்படுத்தியது போலவே இவனும் அவ்விதமாய் காயப்படுத்தப்பட வேண்டும். 21மிருகத்தைக் கொல்லுகிற எவனும் அதற்காகப் பதிலீடு செய்யவேண்டும். ஆனால் மனிதனைக் கொல்லுகிறவனோ கொல்லப்படவேண்டும். 22உங்களிடம் தன் நாட்டினனுக்கும், பிறநாட்டினனுக்கும் ஒரேவிதமான சட்டம் இருக்கவேண்டும். உங்கள் இறைவனாகிய யெகோவா நானே’ ” என்றார்.
23மோசே இஸ்ரயேலருடன் பேசினான். அவர்கள் இறைவனை நிந்தனை செய்தவனை முகாமுக்கு வெளியே கொண்டுபோய் கல்லெறிந்து கொன்றார்கள். இவ்விதமாய் மோசேக்கு யெகோவா கட்டளையிட்டபடியே இஸ்ரயேலர் செய்தார்கள்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in