ஏசாயா 27
27
இஸ்ரயேலின் மீட்பு
1அந்த நாளிலே,
யெகோவா விரைந்தோடும் பாம்பை,
லிவியாதான் என்னும் அந்த நெளிந்து செல்லும் பாம்பை
கர்த்தர் தமது பயங்கரமான பெரிய வலிமையுள்ள
வாளினால் தண்டிப்பார்.
அவர் அந்த கடலில் இருக்கும் வலுசர்ப்பத்தை வெட்டி வீழ்த்துவார்.
2அந்த நாளிலே,
“பழம் நிறைந்த திராட்சைத் தோட்டத்தைப் பற்றிப் பாடுங்கள்:
3யெகோவாவாகிய நானே அதைக் காவல் செய்கிறேன்;
இடைவிடாமல் அதற்குத் தண்ணீர் பாய்ச்சுகிறேன்.
ஒருவரும் அதற்குத் தீங்கு செய்யாதபடி,
நான் இரவும் பகலும் அதைக் காவல் செய்கிறேன்.
4நான் இஸ்ரயேலருடன் கோபிக்கவில்லை.
அவர்கள் முள்ளுகளும், நெருஞ்சில்களுமாய் இருப்பார்களானால்,
நான் அவற்றிற்கு விரோதமாகப் போரிட அணிவகுப்பேன்;
அவை அனைத்திற்கும் நெருப்பு மூட்டுவேன்.
5அல்லது அவர்கள் என்னிடம் அடைக்கலம்புக வரட்டும்;
என்னுடன் சமாதானம் செய்யட்டும்,
ஆம், என்னுடன் சமாதானம் செய்யட்டும்.”
6வரப்போகும் நாட்களிலே யாக்கோபு வேர்பற்றி,
இஸ்ரயேல் துளிர்த்து, பூத்து,
முழு உலகத்தையும் பலனால் நிரப்பும்.
7இஸ்ரயேலர்களைத் தாக்கியவர்களை யெகோவா அடித்ததுபோல,
இஸ்ரயேலரையும் அவர் அடித்தாரோ?
இஸ்ரயேலர்களைக் கொன்றவர்கள் கொல்லப்பட்டதுபோல்,
இஸ்ரயேலரும் கொல்லப்பட்டார்களோ? இல்லையே!
8அவர் போரினாலும், நாடு கடத்துதலினாலும் இஸ்ரயேலருடன் வழக்காடுகிறீர்;
கிழக்குக் காற்று வீசும் அந்த நாளில் நடப்பதுபோல்,
அவர் தனது கோபத்தின் வேகத்தால் அவர்களைச் சிறிது காலத்திற்குத் துரத்துகிறார்.
9யாக்கோபின் குற்றம் இவ்விதமாகவே நிவிர்த்தியாக்கப்படும்.
அவனுடைய பாவம் நீக்கப்படுவதன் முழுவிலையும் இதுவே:
அவர் பலிபீடக் கற்களை எல்லாம்
சுண்ணாம்புக் கற்கள்போல் துண்டுகளாக நொறுக்கும்போது,
அசேரா தேவதைத் தூண்களோ,
தூபங்காட்டும் பீடங்களோ அங்கு விட்டுவைக்கப்படமாட்டாது.
10அரணாக்கப்பட்ட பட்டணம்,
குடியிருப்பாரின்றி பாலைவனம்போல் கைவிடப்பட்டு, பாழாகிக் கிடக்கிறது;
அங்கே கன்றுகள் மேயும்,
அங்கேயே அவை படுத்துக்கொள்ளும்;
அவை அதன் கொப்புகளை வெறுமையாக்கிவிடும்.
11அதன் மெல்லிய கொப்புகள் காயும்போது அவை முறிக்கப்படுகின்றன;
பெண்கள் வந்து அவைகளை எரிப்பதற்கு விறகாகப் பயன்படுத்துகிறார்கள்.
ஏனெனில், அவர்கள் உணர்வில்லாத மக்கள்;
எனவே அவர்களை உண்டாக்கியவர் அவர்கள்மேல் இரக்கம் கொள்ளவில்லை,
அவர்களைப் படைத்தவர் அவர்கள்மேல் தயவுகாட்டவில்லை.
12அந்நாளிலே யெகோவா, ஓடும் நதிதொடங்கி, எகிப்தின் சிற்றாறுவரை தன் கதிரடிப்பைத் தொடங்குவார். இஸ்ரயேலே, நீங்களோ ஒவ்வொருவராகச் சேர்த்தெடுக்கப்படுவீர்கள். 13அந்நாளிலே பெரிய எக்காளம் ஊதப்படும்; அசீரிய நாட்டில் அழிந்துபோகிறவர்களும், எகிப்தில் நாடுகடத்தப்பட்டவர்களும் வந்து, எருசலேமின் பரிசுத்த மலையில் யெகோவாவை வழிபடுவார்கள்.
Currently Selected:
ஏசாயா 27: TCV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.