ஏசாயா 21
21
பாபிலோனுக்கு எதிரான இறைவாக்கு
1கடல் அருகேயுள்ள பாலைவனத்தைக் குறித்த ஒரு இறைவாக்கு:
புயல்காற்று நெகேவ் பிரதேசமான தென்திசையிலிருந்து வீசுவதுபோல,
பயங்கர நாடான பாலைவனத்திலிருந்து
ஒருவன் படையெடுத்து வருகிறான்.
2கொடிய தரிசனம் ஒன்று எனக்குக் காண்பிக்கப்பட்டது:
துரோகி காட்டிக்கொடுக்கிறான், கொள்ளைக்காரன் கொள்ளையிடுகிறான்.
ஏலாமே, தாக்கு! மேதியாவே, முற்றுகையிடு!
அவள் உண்டுபண்ணிய புலம்பலுக்கு ஒரு முடிவைக் கொண்டுவருவேன்.
3இதனால் என் உடல் நோவினால் வாதிக்கப்படுகிறது;
பெண்ணின் பிரசவ வேதனையைப்போல் கடும் வேதனை என்னைப் பிடித்துக்கொண்டது.
நான் கேட்பது என்னைத் தள்ளாடப் பண்ணுகிறது;
நான் காண்பது என்னைக் குழப்பமடையச் செய்கிறது.
4எனது இருதயம் தயங்குகிறது,
பயம் என்னை நடுங்கப் பண்ணுகிறது;
நான் எதிர்பார்த்திருந்த மாலைப்பொழுது
எனக்கு பயங்கரமாயிற்று.
5அவர்கள் பந்தியை ஆயத்தப்படுத்துகிறார்கள்,
அவர்கள் கம்பளம் விரிக்கிறார்கள்,
அவர்கள் உண்டு குடிக்கிறார்கள்.
அதிகாரிகளே, எழும்புங்கள்,
கேடயங்களுக்கு எண்ணெய் பூசுங்கள்!
6யெகோவா எனக்குக் கூறுவது இதுவே:
“நீ போய் காவலாளியை அவனுக்குரிய இடத்தில் அமர்த்து;
அவன் காண்பதை உனக்குத் தெரிவிக்கும்படி சொல்.
7குதிரைக் கூட்டங்களுடன்
வரும் தேர்களையோ,
கழுதைகளின் மேலோ
ஒட்டகங்களின் மேலோ ஏறிச்செல்பவர்களையோ காணும்போது,
அவன் முழு எச்சரிக்கையுடன்
விழிப்பாயிருக்கட்டும்.”
8காவலாளி சிங்கத்தைப்போல் சத்தமிட்டு,
“ஆண்டவனே, நான் பகல்தோறும், காவல் கோபுரத்தில் நிற்கிறேன்;
ஒவ்வொரு இரவும் எனக்குரிய இடத்திலேயே இருக்கிறேன்.
9இதோ குதிரைகள் பூட்டப்பட்ட ஒரு தேரில் ஒருவன் வருகிறான்.
‘பாபிலோன் வீழ்ந்தது, பாபிலோன் வீழ்ந்தது!
அதன் தெய்வங்களின் உருவச்சிலைகள் எல்லாம்
நிலத்தில் சிதறிக் கிடக்கின்றன!’
என அவன் பதிலளிக்கிறான்”
என்று சொன்னான்.
10என் மக்களே, சூடடிக்கும் களத்தில் நசுக்கப்பட்டிருப்பவர்களே,
இஸ்ரயேலின் இறைவனாகிய
சேனைகளின் யெகோவாவிடமிருந்து
நான் கேட்டதை உங்களுக்குச் சொல்கிறேன்.
ஏதோமுக்கு எதிரான இறைவாக்கு
11தூமாவைப்#21:11 தூமாவை மற்றொரு பெயர் ஏதோம் அதற்கு அமைதி என்று அர்த்தம். பற்றிய ஒரு இறைவாக்கு:
சேயீரிலிருந்து ஒருவன் என்னைக் கூப்பிட்டு,
“காவலாளியே, இரவு முடிய எவ்வளவு நேரமாகும்?
காவலாளியே, இரவு முடிய எவ்வளவு நேரமாகும்?” என்று கேட்டான்.
12காவலாளி பதிலளித்து,
“காலை வருகிறது, ஆனால் இரவும் வருகிறது.
நீ கேட்க விரும்பினால் திரும்பவும் வந்து கேள்”
என்று கூறினான்.
அரேபியாவுக்கு எதிரான இறைவாக்கு
13அரேபியாவைப் பற்றிய இறைவாக்கு:
தெதானியரின் வணிகப் பயணிகள் கூட்டமே,
அரேபியாவின் காடுகளில் முகாமிடுகிறவர்களே,
14தாகமுள்ளோருக்கு தண்ணீர் கொண்டுவாருங்கள்;
தேமாவில் வசிப்பவர்களே,
நீங்கள் அகதிகளுக்கு உணவு கொண்டுவாருங்கள்.
15அவர்கள் பட்டயங்களுக்கும்,
உருவிய பட்டயத்துக்கும்,
நாணேற்றிய வில்லுக்கும்,
போரின் உக்கிரத்துக்கும் பயந்தோடி வருகிறார்கள்.
16யெகோவா எனக்கு கூறுவது இதுவே: “ஒப்பந்தத்தில் கூலி வேலைக்கு அமர்த்தப்பட்டவன் தனது வேலை நாட்களைக் கணக்கெடுக்கிறானே; அதுபோல ஒரு வருடத்திற்குள் கேதாரின் எல்லா மகிமையும் முடிவடையும். 17வில்வீரரில் தப்பிப் பிழைப்போரும், கேதாரின்#21:17 கேதாரின் என்பது அரேபியாவின் வனப்பகுதி. போர்வீரரும், மிகச் சிலராய் இருப்பார்கள்” என்பதாக இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா பேசியிருக்கிறார்.
Currently Selected:
ஏசாயா 21: TCV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.