YouVersion Logo
Search Icon

எசேக்கியேல் 21

21
பாபிலோன் என்னும் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் வாள்
1யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது: 2“மனுபுத்திரனே, நீ உன் முகத்தை எருசலேமிற்கு எதிராகத் திருப்பி, பரிசுத்த இடத்திற்கு விரோதமாய்ப் பிரசங்கி. இஸ்ரயேல் நாட்டிற்கு விரோதமாய் இறைவாக்கு சொல்லுங்கள். 3நீ அவளுக்குச் சொல்லவேண்டியதாவது: ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே, நான் உனக்கு விரோதமாய் இருக்கிறேன். நான் என் வாளை உறையிலிருந்து உருவி நேர்மையானவன் கொடியவன் ஆகிய இருவரையுமே உன்னிலிருந்து அகற்றுவேன். 4நீதியானவனையும் கொடியவனையும் நான் அகற்றப்போவதால், தெற்கிலிருந்து வடக்கு வரையுள்ள ஒவ்வொருவனுக்கும் விரோதமாய் என் வாள் அதன் உறையிலிருந்து வெளியே உருவப்படும். 5அப்பொழுது எனது வாளை அதன் உறையிலிருந்து உருவியவர் யெகோவாவாகிய நானே என்பதையும், அது மீண்டும் உறைக்குத் திரும்பமாட்டாது என்பதையும் மக்களெல்லோரும் அறிந்துகொள்வார்கள்.’
6“ஆகையால் மனுபுத்திரனே, துக்கித்து அழு. உடைந்த உள்ளத்தோடும் கசப்பான துயரத்தோடும் அவர்களுக்கு முன்பாக அழு. 7‘ஏன் அழுகிறாய்?’ என அவர்கள் உன்னைக் கேட்கும்போது, ‘வரப்போகும் செய்திக்காகவே அழுகிறேன். ஒவ்வொரு இருதயமும் உருகும். ஒவ்வொரு கையும் சோர்ந்துபோகும். ஒவ்வொரு ஆவியும் மயங்கும். ஒவ்வொரு முழங்காலும் தண்ணீரைப்போல் ஆகும்.’ அது வருகிறது, நிச்சயமாகவே அது நடக்கும் என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார் என்று சொல்.”
8யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது: 9“மனுபுத்திரனே, நீ இறைவாக்கு உரைத்துச் சொல்லவேண்டியதாவது, ‘யெகோவா கூறுவது இதுவே:
“ ‘ஒரு வாள், அது கூர்மையானதும்,
துலக்கப்பட்டதுமான ஒரு வாள்.
10அது படுகொலைக்காக கூர்மையாக்கப்பட்டது.
மின்னல் ஒளிவீச துலக்கப்பட்டது.
“ ‘என் மகன் யூதாவின் செங்கோலைக் குறித்து, நாம் மகிழ்வோமோ? அத்தகைய கோல் ஒவ்வொன்றையும் அவ்வாள் அலட்சியம்செய்கிறதே.
11“ ‘துலக்கப்படுவதற்கும் கையால் பிடிப்பதற்கும்
அந்த வாள் நியமிக்கப்பட்டிருக்கிறது.
அது கூர்மையாக்கப்பட்டும், துலக்கப்பட்டும்
படுகொலைசெய்பவனின் கைக்குத் தயாராக இருக்கிறது.
12மனுபுத்திரனே, அந்த வாள் என் மக்களுக்கு
விரோதமாக இருப்பதனால் அழுது புலம்பு;
அது இஸ்ரயேலின் தலைவர்கள் எல்லோருக்கும் விரோதமாக இருக்கின்றது.
அவர்கள் என் மக்களோடுகூட,
வாளுக்கு இரையாக்கப்படுவார்கள்.
ஆதலால், உன் மார்பில் அடித்து அழு.
13“ ‘நிச்சயமாகவே சோதனை வரும். வாளால் இகழப்பட்ட யூதாவின் செங்கோல் தொடராவிட்டால், என்ன நடக்கும் என்று ஆண்டவராகிய யெகோவா கேட்கிறார்.’
14“ஆகையால், மனுபுத்திரனே நீ, இறைவாக்குரைத்து,
கைகளைத் தட்டு.
இரண்டுதரமோ மூன்றுதரமோ வாள் வீசப்படட்டும்.
அது எல்லாப் பக்கமும்
அவர்கள்மேல் வரும்
படுகொலையின் வாள்,
அது பெரும் படுகொலைக்கான வாள்,
15இருதயங்கள் உருகி
அநேகர் விழும்படியாக,
அவர்கள் வாசல்களிலெல்லாம் படுகொலைக்காக
நான் வாளை நிலைப்படுத்தியுள்ளேன்.
அது துலக்கப்பட்டு மின்னல் கீற்றுப்போல் பாய்வதற்காகத் தீட்டப்பட்டு,
படுகொலைக்கு ஆயத்தமாகக் கையில் பிடிக்கப்பட்டுள்ளது.
16வாளே! உன் வெட்டும் பகுதி எங்கு திரும்புகிறதோ,
அங்கு வலப்புறமாகவும்,
பின் இடப்புறமாகவும் வீசி வெட்டு.
17நானும் என் கரத்தைத் தட்டுவேன்.
என் கடுங்கோபம் தணியும்.
யெகோவாவாகிய நானே இதைப் பேசினேன்.”
18யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது. அவர் என்னிடம் 19“மனுபுத்திரனே, வரைபடம் ஒன்றை வரைந்து அதில் பாபிலோன் அரசனுடைய வாள் செல்ல இரண்டு வழிகளைக் குறித்துக்கொள். இரண்டும் ஒரே தேசத்திலிருந்து வரட்டும். பட்டணத்தை நோக்கிப் பாதைகள் பிரியும் இடத்தில் கைகாட்டிக் கம்பம் ஒன்றை நிறுத்து. 20அம்மோனியரின் பட்டணமான ரப்பாவுக்கு எதிராக வாள் வரும்படி வழியொன்றைக் குறி. அரண்செய்யப்பட்ட எருசலேமுக்கும், யூதாவுக்கும் விரோதமாக வாள் வரும்படி வேறொரு வழியையும் குறி. 21வழி பிரியும் இடத்திலே, இருவழிச்சந்தியில் சகுனம் பார்ப்பதற்காக பாபிலோன் அரசன் நிற்பான். அவன் அம்புகளினால் சீட்டுப்போட்டு, தன் விக்கிரகங்களிடம், விசாரிப்பான். அவன் ஈரலிலே சகுனம் பார்ப்பான். 22எருசலேமுக்குரிய சீட்டு அவனுடைய வலதுகையில் வரும். அப்பொழுது அவன் இடிக்கும் இயந்திரங்களை நிலைப்படுத்தி, கொலை செய்யும்படி கட்டளை கொடுத்து, போர் முழக்கம் எழுப்பி, கருவிகளை வாசலுக்கெதிரே வைத்து, கொத்தளங்களைக் கட்டி முற்றுகைக்குரிய வேலைகளைச் செய்வான். 23உடன்படிக்கையில் உண்மையாய் இருப்போம் என அவனுக்கு ஆணையிட்டவர்களுக்கு அது போலியான சகுனமாய்க் காணப்படும். ஆனால் அவர்களுடைய குற்றத்தை அவன் அவர்களுக்கு நினைவுப்படுத்தி, அவர்களைக் கைதிகளாக்கிக் கொண்டுபோவான்.
24“ஆகையால், ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. ‘நீங்கள் செய்த அனைத்திலும், உங்கள் பாவங்களை வெளிப்படுத்தினீர்கள். வெளிப்படையாய் கலகம்செய்து, உங்கள் குற்றங்களை நினைவுபடுத்தினீர்கள். இதைச் செய்தபடியினால், நீங்கள் கைதிகளாகக் கொண்டுபோகப்படுவீர்கள்.
25“ ‘இஸ்ரயேலின் சீர்கெட்ட கொடிய இளவரசனே, உன் நாள் வந்துவிட்டது. உன் தண்டனையின் வேளை உச்சக்கட்டத்தை அடைந்துவிட்டது. 26ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே, உன் தலைப்பாகையை எடுத்துவிடு. உன் மகுடத்தை அகற்றிவிடு. அது முன்னர் இருந்ததுபோல் இனி இருக்கமாட்டாது. தாழ்ந்தவன் உயர்த்தப்படுவான், உயர்ந்தவன் தாழ்த்தப்படுவான். 27அழிவோ அழிவு! அதைப் பாழாக்குவேன். அதற்கு உரிமையானவர் வருமட்டும் அது திரும்பவும் நிலைநாட்டப்படுவதில்லை. அவருக்கே நான் அதைக் கொடுப்பேன்.’
28“மனுபுத்திரனே, இறைவாக்கு உரைத்துச் சொல்லவேண்டியதாவது, ‘அம்மோனியரையும் அவர்களுடைய நிந்தைகளையும் குறித்து ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே:
“ ‘ஒரு வாள், ஒரு வாள்,
வெட்டுவதற்காக உருவப்பட்டிருக்கிறது.
அழிப்பதற்காக மின்னல் கீற்றுப்போல்
பாயும்படி அது துலக்கப்பட்டது.
29உன்னைக்குறித்துப் பொய்யான தரிசனங்களும்,
பொய்யான குறிகளும் கூறப்பட்டபோதிலும்,
கொலைசெய்யப்பட வேண்டிய கொடியவர்களின்
கழுத்திலே அந்த வாள் வைக்கப்படும்.
அவர்களின் நாள் வந்துவிட்டது!
அவர்கள் தண்டனையின் வேளை உச்சக்கட்டத்தை அடைந்துவிட்டது.
30“ ‘வாளைத் திரும்பவும் அதன் உறையில் போடு.
நீ உருவாக்கப்பட்ட இடத்தில்,
உன் மூதாதையரின் நாட்டில்
நான் உன்னை நியாயம் விசாரிப்பேன்.
31நான் எனது கோபத்தை உன்மேல் ஊற்றுவேன்.
உனக்கு விரோதமாய் என் சுட்டெரிக்கும் கோபத்தை ஊதுவேன்.
முரட்டு மனிதரிடமும் அழிப்பதில் வல்லவரான
மனிதரிடமும் நான் உன்னைக் கையளிப்பேன்.
32நீ நெருப்புக்கு விறகாவாய்.
உனது நாட்டிலே உன் இரத்தம் சிந்தப்படும்.
இனிமேல் நீ நினைக்கப்படமாட்டாய்.
ஏனெனில் யெகோவாவாகிய நானே இதைச் சொன்னேன் என்றார்.’ ”

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in