YouVersion Logo
Search Icon

ரோமர் 7

7
அத்தியாயம் 7
நியாயப்பிரமாணத்தின் முடிவு
1நியாயப்பிரமாணத்தை தெரிந்திருக்கிறவர்களோடு பேசுகிறேன். சகோதரர்களே, ஒரு மனிதன் உயிரோடிருக்கும்வரைக்கும் நியாயப்பிரமாணம் அவனை ஆளுகிறது என்று தெரியாமல் இருக்கிறீர்களா? 2அது எப்படியென்றால், கணவனையுடைய ஒரு பெண் தன் கணவன் உயிரோடிருக்கும்வரை நியாயப்பிரமாணத்தின்படி அவனுடைய நிபந்தனைக்கு உட்பட்டிருக்கிறாள்; கணவன் மரித்தபின்பு கணவனைப்பற்றிய பிரமாணத்திலிருந்து விடுதலையாகி இருக்கிறாள். 3ஆகவே, கணவன் உயிரோடிருக்கும்போது அவள் வேறொரு மனிதனை திருமணம்செய்தால் அவள் விபசாரி என்று சொல்லப்படுவாள்; ஆனால், கணவன் மரித்தபின்பு அவள் அந்தப் பிரமாணத்திலிருந்து விடுதலையானபடியால், வேறொரு மனிதனை திருமணம் செய்தாலும் அவள் விபசாரி இல்லை. 4அதுபோல, என் சகோதரர்களே, நீங்கள் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி, தேவனுக்கென்று பலன் கொடுப்பதற்காக கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்திற்கு மரித்தவர்களானீர்கள். 5நாம் சரீரத்திற்கு உட்பட்டிருந்த காலத்தில் நியாயப்பிரமாணத்தினாலே தோன்றிய பாவ இச்சைகள் மரணத்திற்குரிய பலன்களைக் கொடுக்கக்கூடியதாக நம்முடைய சரீர உறுப்புகளிலே பெலன்செய்தது. 6இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படி இல்லை, புதுமையான ஆவியின்படி ஊழியம் செய்வதற்காக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்திற்கு நாம் மரித்தவர்களாகி, அதில் இருந்து விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம்.
பாவத்தோடு போராட்டம்
7எனவே, என்னசொல்லுவோம்? நியாயப்பிரமாணம் பாவமோ? இல்லையே, பாவம் என்னவென்று நியாயப்பிரமாணத்தினால்தான் நான் தெரிந்துகொண்டேனேதவிர மற்றப்படி இல்லை; “இச்சிக்காமல் இருப்பாயாக” என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் தெரியாமல் இருப்பேனே. 8பாவமானது கட்டளையினாலே வாய்ப்பைப்பெற்று எல்லாவிதமான இச்சைகளையும் எனக்குள் நடப்பித்தது. நியாயப்பிரமாணம் இல்லாவிட்டால் பாவம் செத்ததாக இருக்குமே. 9முன்பே நியாயப்பிரமாணம் இல்லாதவனாக இருந்தபோது நான் ஜீவனுள்ளவனாக இருந்தேன்; கட்டளை வந்தபோது பாவம் உயிர்கொண்டது, நான் மரித்தவனானேன். 10இப்படியிருக்க, ஜீவனுக்குரிய கட்டளை எனக்கு மரணத்திற்குரியதாக இருப்பதைப் பார்த்தேன். 11பாவமானது கட்டளையினாலே வாய்ப்பைப்பெற்று, என்னை ஏமாற்றியது, அதினாலே என்னைக் கொன்றது. 12எனவே, நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளது, கட்டளையும் பரிசுத்தமாகவும் நீதியாகவும் நன்மையாகவும் இருக்கிறது. 13இப்படியிருக்க, நன்மையானது எனக்கு மரணமானதோ? அப்படி இல்லை; பாவமே எனக்கு மரணமானது; பாவம் கட்டளையினாலே அதிக பாவமுள்ளதாவதற்கும், அது நன்மையானதைக்கொண்டு எனக்கு மரணத்தை உண்டாக்கினதினாலே, பாவமாகவே இருக்கும்படிக்கும் அப்படியானது. 14மேலும், நமக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் ஆவிக்குரியதாக இருக்கிறது, நானோ பாவத்திற்குக் கீழாக விற்கப்பட்டு, சரீரத்திற்குரியவனாக இருக்கிறேன். 15எப்படியென்றால், நான் செய்கிறது எனக்கே புரியவில்லை; நான் விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன். 16இப்படி நான் விரும்பாததைச் செய்கிறவனாக இருக்க, நியாயப்பிரமாணம் நல்லது என்று ஏற்றுக்கொள்ளுகிறேனே. 17எனவே, நான் இல்லை, எனக்குள் வாழ்கிற பாவமே அப்படிச் செய்கிறது. 18அது எப்படியென்றால், என்னிடம், அதாவது, என் சரீரத்தில், நன்மை வாழ்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மை செய்யவேண்டும் என்கிற விருப்பம் என்னிடம் இருக்கிறது, நன்மை செய்வதோ என்னிடம் இல்லை. 19எனவே, நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன். 20அதன்படி, நான் விரும்பாததை நான் செய்தால், நான் இல்லை, எனக்குள் வாழ்கிற பாவமே அப்படிச் செய்கிறது. 21ஆனபடியால் நன்மைசெய்ய விரும்புகிற என்னிடம் தீமை உண்டு என்கிற ஒரு பிரமாணத்தைப் பார்க்கிறேன். 22உள்ளான மனிதனுக்குத் தகுந்தபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாக இருக்கிறேன். 23ஆனாலும் என் மனதின் பிரமாணத்திற்கு எதிராகப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் உறுப்புகளில் இருக்கிறதைப் பார்க்கிறேன்; அது என் உறுப்புகளில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்திற்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது. 24நிர்பந்தமான மனிதன் நான்! இந்த மரணசரீரத்திலிருந்து யார் என்னை விடுதலையாக்குவார்? 25நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். எனவே, நானே என் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்திற்கும், சரீரத்தினாலே பாவப்பிரமாணத்திற்கும் சேவை செய்கிறேன்.

Currently Selected:

ரோமர் 7: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in