YouVersion Logo
Search Icon

எண் 28

28
அத்தியாயம் 28
அனுதின காணிக்கை
1யெகோவா மோசேயை நோக்கி: 2“எனக்கு நறுமண வாசனையாக, தகனபலிகளுக்குரிய காணிக்கையையும், அப்பத்தையும், குறித்தகாலத்தில் எனக்குச் செலுத்தும்படி கவனமாக இருக்கவேண்டும் என்று நீ இஸ்ரவேல் மக்களுக்குக் கட்டளையிடு. 3மேலும் நீ அவர்களை நோக்கி: நீங்கள் யெகோவாவுக்குச் செலுத்தவேண்டிய தகனபலி என்னவென்றால்: நிரந்தர சர்வாங்கதகனபலியாக நாள்தோறும் ஒருவயதுடைய பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளைப் பலியிடவேண்டும். 4காலையில் ஒரு ஆட்டுக்குட்டியையும், மாலையில் ஒரு ஆட்டுக்குட்டியையும் பலியிட்டு, 5உணவுபலியாக ஒரு மரக்காலிலே பத்தில் ஒரு பங்கானதும் இடித்துப் பிழிந்த காற்படி#28:5 1. கிலோ, எண்ணெயிலே பிசைந்ததுமாகிய மெல்லிய மாவையும் செலுத்தவேண்டும். 6இது சீனாய் மலையிலே கட்டளையிடப்பட்ட நிரந்தர சர்வாங்கதகனபலி; இது யெகோவாவுக்கு நறுமண வாசனைக்கான தகனபலி. 7காற்படி திராட்சைரசம் ஒரு ஆட்டுக்குட்டிக்கு அடுத்த பானபலி; பரிசுத்த ஸ்தலத்திலே யெகோவாவுக்கு அந்த இரசம் பானபலியாக வார்க்கப்படவேண்டும். 8காலையின் போஜனபலிக்கும் அதின் பானபலிக்கும் மாலையில் மற்ற ஆட்டுக்குட்டியையும் யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலியாகச் செலுத்தவேண்டும்.
ஓய்வு நாள் காணிக்கை
9“ஓய்வுநாளிலோ உணவுபலிக்காக ஒருவயதுடைய பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளையும், பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவையும், அதின் பானபலியையும் செலுத்தவேண்டும். 10எப்பொழுதும் செலுத்தும் சர்வாங்கதகனபலியும் அதின் பானபலியும் அன்றி ஒவ்வொரு ஓய்வுநாளிலும் இந்தச் சர்வாங்க தகனபலியும் செலுத்தப்படவேண்டும். 11“உங்கள் மாதப்பிறப்புகளில் நீங்கள் யெகோவாவுக்குச் சர்வாங்க தகனபலியாக இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒருவயதுடைய பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும் செலுத்தவேண்டும். 12உணவுபலியாக ஒவ்வொரு காளைக்குப் பத்தில் மூன்றுபங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவையும், உணவுபலியாக ஒரு ஆட்டுக்கடாவுக்குப் பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மாவையும், 13உணவுபலியாக ஒவ்வொரு ஆட்டுக்குட்டிக்குப் பத்தில் ஒரு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மாவையும் யெகோவாவுக்கு நறுமண வாசனையான சர்வாங்கதகனபலியாகச் செலுத்தவேண்டும். 14அவைகளுக்கேற்ற பானபலிகள் திராட்சைரசத்தில் காளைக்கு அரைப்படியும், ஆட்டுக்கடாவுக்குப் படியில் மூன்றில் ஒரு பங்கும், ஆட்டுக்குட்டிக்குக் காற்படி ரசமுமாக இருக்கவேண்டும்; இது வருடமுழுவதும் மாதம்தோறும் செலுத்தப்படவேண்டிய சர்வாங்கதகனபலி. 15எப்பொழுதும் செலுத்தப்படும் சர்வாங்கதகனபலியும் அதின் பானபலியும் அன்றி, பாவநிவாரணபலியாகக் யெகோவாவுக்கு ஒரு வெள்ளாட்டுக்கடாவும் செலுத்தப்படவேண்டும்.
பஸ்கா
16“முதலாம் மாதம் பதினான்காம் தேதி யெகோவாவுக்கு உரிய பஸ்கா. 17அந்த மாதம் பதினைந்தாம் தேதி பண்டிகை நாள்; ஏழு நாட்களளவும் புளிப்பில்லாத அப்பம் சாப்பிடவேண்டும். 18முதலாம் நாளிலே பரிசுத்த சபைகூடுதல் இருக்கவேண்டும்; அன்றையதினம் சாதாரணமான எந்த ஒரு வேலையும் செய்யக்கூடாது. 19அப்பொழுது நீங்கள் யெகோவாவுக்குச் சர்வாங்கதகனபலியாக இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒருவயதுடைய பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும், 20அவைகளுக்கேற்ற உணவுபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், ஆட்டுக்கடாவுக்காகப் பத்தில் இரண்டு பங்கையும், 21ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் ஒரு பங்கையும், 22உங்கள் பாவநிவிர்த்திக்கென்று பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும். 23காலையிலே எப்பொழுதும் செலுத்தும் சர்வாங்கதகனபலியையும் தவிர இவைகளையும் செலுத்தவேண்டும். 24இப்படியாக ஏழுநாட்களளவும் நாள்தோறும் யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலி செலுத்தவேண்டும்; எப்பொழுதும் செலுத்தப்படும் சர்வாங்கதகனபலியையும் அதின் பானபலியையும் தவிர, இதையும் செலுத்தவேண்டும். 25ஏழாம் நாளிலே பரிசுத்த சபைகூடுதல் இருக்கவேண்டும்; அதில் சாதாரணமான எந்த ஒரு வேலையும் செய்யக்கூடாது.
பண்டிகைகளின் வாரம்
26“அந்த வாரங்களுக்குப்பின்பு நீங்கள் யெகோவாவுக்குப் புதிய உணவுபலியாக முதற்கனிகளைச் செலுத்தும் பண்டிகை நாளிலும் பரிசுத்த சபைகூடுதல் இருக்கவேண்டும்; அதில் சாதாரணமான எந்த ஒரு வேலையும் செய்யக்கூடாது. 27அப்பொழுது நீங்கள் யெகோவாவுக்கு நறுமண வாசனையான சர்வாங்கதகனபலியாக இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒருவயதுடைய ஏழு ஆட்டுக்குட்டிகளையும், 28அவைகளின் உணவுபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவில் ஒரு காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், அந்த ஒரு ஆட்டுக்கடாவுக்காகப் பத்தில் இரண்டு பங்கையும், 29ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் ஒரு பங்கையும், 30உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படி ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும். 31நிரந்தர சர்வாங்கதகனபலியையும் அதின் உணவுபலியையும் அதின் பானபலியையும் தவிர, இவைகளையும் செலுத்தவேண்டும்; இவைகள் பழுதற்றவைகளாக இருக்கவேண்டும்.

Currently Selected:

எண் 28: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in