YouVersion Logo
Search Icon

எரே 34

34
அத்தியாயம் 34
சிதேக்கியாவிற்கு எச்சரிப்பு
1பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும் அவனுடைய சர்வசேனையும், அவன் ஆளுகைக்குட்பட்ட பூமியின் எல்லா ராஜ்ஜியங்களும், எல்லா மக்களும் எருசலேமுக்கும் அதைச் சேர்ந்த எல்லா பட்டணங்களுக்கும் விரோதமாகப் போர் செய்யும்போது எரேமியாவுக்குக் யெகோவாவால் உண்டான வார்த்தை: 2இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: நீ போய், யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவினிடத்தில் பேசி, அவனுக்குச் சொல்லவேண்டியது: இதோ, நான் இந்த நகரத்தைப் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கிறேன்; அவன் இதை நெருப்பினால் சுட்டெரிப்பான். 3நீ அவன் கைக்குத் தப்பிப்போகாமல், நிச்சயமாய்ப் பிடிபட்டு, அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவாய்; உன் கண்கள் பாபிலோன் ராஜாவின் கண்களைக் காணும்; அவன் வாய் உன் வாயுடன் பேசும்; நீ பாபிலோனுக்குப் போவாய் என்று யெகோவா சொல்லுகிறார். 4ஆனாலும் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவே, யெகோவாவுடைய வார்த்தையைக் கேள்; உன்னைக் குறித்துக் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: நீ பட்டயத்தால் இறப்பதில்லை. 5சமாதானத்துடன் இறப்பாய்; உனக்கு முன்னிருந்த ராஜாக்களாகிய உன் முற்பிதாக்களுக்காக கந்தவர்க்கங்களைக் கொளுத்தினதுபோல உனக்காகவும் கொளுத்தி, ஐயோ, ஆண்டவனே என்று சொல்லி, உனக்காகப் புலம்புவார்கள்; இது நான் சொன்ன வார்த்தையென்று யெகோவா சொன்னார் என்று சொல் என்றார். 6இந்த வார்த்தைகளையெல்லாம் தீர்க்கதரிசியாகிய எரேமியா எருசலேமிலே யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவினிடத்தில் சொன்னான். 7அப்பொழுது பாபிலோன் ராஜாவின் சேனைகள் எருசலேமுக்கு விரோதமாகவும், யூதாவின் எல்லாப் பட்டணங்களிலும் மீதியான பட்டணங்களாகிய லாகீசுக்கும், அசெக்காவுக்கும் விரோதமாகவும் போர் செய்துகொண்டிருந்தது; யூதாவின் பாதுகாப்பான பட்டணங்களில் இவைகளே தப்பியிருந்தவைகள்.
அடிமைகளுக்கு விடுதலை
8ஒருவனும் யூத மக்களாகிய தன் சகோதரனை அடிமைப்படுத்தாமல், அவனவன் எபிரெயனாகிய தன் வேலைக்காரனையும், எபிரெயப் பெண்ணாகிய தன் வேலைக்காரியையும் சுதந்திரமாக அனுப்பிவிடவேண்டுமென்று அவர்களுக்கு விடுதலையைச் சொல்ல, 9ராஜாவாகிய சிதேக்கியா எருசலேமில் இருக்கிற எல்லா மக்களுடன் உடன்படிக்கை செய்தபின்பு, எரேமியாவுக்குக் கர்த்தரால் வார்த்தை உண்டானது. 10ஒவ்வொருவனும் தன் வேலைக்காரனையும் தன் வேலைக்காரியையும் இனி அடிமைப்படுத்தாமல், சுதந்தரவாளியாக அனுப்பிவிடவேண்டுமென்று உடன்படிக்கைக்கு உட்பட்ட எல்லாப் பிரபுக்களும் எல்லா மக்களும் கேட்டபோது, அதன்படி அவர்களை அனுப்பிவிட்டார்கள். 11ஆனாலும் அதற்குப் பின்பு அவர்கள் மனம்மாறி, தாங்கள் சுதந்திரவாளியாக அனுப்பிவிட்ட வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் மறுபடியும் வரவழைத்து, அவர்களை வேலைக்காரரும் வேலைக்காரிகளுமாக அடிமைப்படுத்திக்கொண்டார்கள். 12ஆதலால், யெகோவாவால் எரேமியாவுக்கு வார்த்தை உண்டாகி, அவர்: 13இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், அவனவன் தனக்கு விற்கப்பட்ட எபிரெயனாகிய தன் சகோதரனை கடைசியில் நீங்கள் ஏழாம் வருடத்தில் அனுப்பிவிடவேண்டும் என்றும், அவன் உனக்கு ஆறுவருடங்கள் அடிமையாக இருந்தபின்பு, அவனை உன்னிடத்தில் வைக்காமல் சுதந்திரவாளியாக அனுப்பிவிடவேண்டும் என்றும், 14நான் உங்கள் முற்பிதாக்களை அடிமைவீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்த நாளில் அவர்களுடன் உடன்படிக்கை செய்தேன்; ஆனாலும் உங்கள் முற்பிதாக்கள் என் சொல்லைக் கேட்காமல் போனார்கள். 15நீங்களோ, இந்நாளில் மனந்திரும்பி, அவனவன் தன் அந்நியனுக்கு விடுதலையைச் சொன்ன காரியத்தில் என் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, என் பெயர் சூட்டப்பட்ட ஆலயத்தில் இதற்காக என் முகத்திற்குமுன் உடன்படிக்கை செய்திருந்தீர்கள். 16ஆனாலும் நீங்கள் மனம்மாறி, என் பெயரைப் பரிசுத்தக் குலைச்சலாக்கி, நீங்கள் அவனவன் விடுதலையாகவும் சுதந்திரவாளியாகவும் அனுப்பிவிட்ட தன் வேலைக்காரனையும் தன் வேலைக்காரியையும் திரும்ப அழைத்துவந்து, அவர்களை உங்களுக்கு வேலைக்காரரும் வேலைக்காரிகளுமாக அடிமைப்படுத்தினீர்கள். 17ஆகையால் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் அவனவன் தன் சகோதரனுக்கும் அவனவன் தன் அயலானுக்கும் விடுதலையைச் சொன்னகாரியத்தில் என் சொல்லைக் கேட்காமல் போனீர்களே; இதோ, நான் உங்களைப் பட்டயத்திற்கும், கொள்ளைநோய்க்கும், பஞ்சத்திற்கும் ஒப்புக்கொடுக்கிற விடுதலையை உங்களுக்குச் சொல்கிறேன்; பூமியின் தேசங்களிலெல்லாம் அலைகிறதற்கும் உங்களை ஒப்புக்கொடுப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார். 18என் முகத்திற்குமுன் செய்த உடன்படிக்கையின் வார்த்தைகளை நிறைவேற்றாமல், என் உடன்படிக்கையை மீறின மனிதரை நான் துண்டங்களின் நடுவாகக் கடந்துபோகும்படி அவர்களை இரண்டாகத் துண்டித்தக் கன்றுக்குட்டியைப்போல் ஆக்குவேன். 19கன்றுக்குட்டியின் துண்டங்களின் நடுவே கடந்துபோன யூதாவின் பிரபுக்களையும், எருசலேமின் பிரபுக்களையும், பிரதானிகளையும், ஆசாரியர்களையும், தேசத்தின் எல்லா மக்களையும் அப்படிச் செய்து, 20நான் அவர்களை அவர்கள் எதிரிகளின் கையிலும், அவர்கள் உயிரை வாங்கத்தேடுகிறவர்களின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன்; அவர்களுடைய பிரேதம் ஆகாயத்தின் பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும். 21யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவையும் அவனுடைய பிரபுக்களையும் அவர்கள் எதிரிகளின் கையிலும், அவர்கள் உயிரை வாங்கத்தேடுகிறவர்களின் கையிலும், உங்களைவிட்டுப் பெயர்ந்துபோன பாபிலோன் ராஜாவினுடைய சேனைகளின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன். 22இதோ, நான் கட்டளை கொடுத்து, அவர்களை இந்த நகரத்திற்குத் திரும்பச்செய்வேன்; அவர்கள் அதற்கு விரோதமாகப் போர் செய்து, அதைப்பிடித்து, அதை நெருப்பால் சுட்டெரிப்பார்கள்; யூதாவின் பட்டணங்களையும், ஒருவரும் அவைகளில் குடியிராமல் பாழாய்ப்போகச் செய்வேன் என்று யெகோவா சொல்கிறார் என்று சொல் என்றார்.

Currently Selected:

எரே 34: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in