உன்னதப்பாட்டு 6:2-9

உன்னதப்பாட்டு 6:2-9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

என் காதலர் தோட்டங்களில் மேய்வதற்கும், லில்லிப் பூக்களைச் சேர்ப்பதற்கும், நறுமணச்செடிகளின் பாத்திகளுக்கும் போயிருக்கிறார். நான் என் காதலருக்குரியவள், என் காதலர் என்னுடையவர்; அவர் லில்லிப் பூக்களுக்கிடையில் தன் மந்தையை மேய்க்கிறார். என் அன்பே, நீ திர்சா பட்டணத்தைப்போல அழகானவள், எருசலேமைப்போல வசீகரமானவள், கொடிகள் ஏந்தும் படைகளைப்போல கம்பீரமானவள். உன் கண்களை என்னைவிட்டுத் திருப்பு; அவை என்னை மயக்குகின்றன. உனது தலைமுடி கீலேயாத் மலைச்சரிவில் இருந்து இறங்கிவரும் வெள்ளாட்டு மந்தையைப் போன்றது. உனது பற்கள் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிற செம்மறியாட்டு மந்தையைப்போல் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் இரட்டைக்குட்டி ஈன்றவை, அவற்றில் எதுவும் மலடாய் அல்ல. உனது முகத்திரையின் பின்னால் உள்ள உன் கன்னங்கள் பிளந்த மாதுளம் பழத்திற்கு ஒப்பானவை. அறுபது அரசிகளும், எண்பது வைப்பாட்டிகளும்; கணக்கிடமுடியாத கன்னிப்பெண்களும் இருக்கலாம். ஆனால் என் புறாவோ, என் உத்தமியோ ஈடு இணையற்றவள், அவள் தன் தாய்க்கு ஒரே மகள், அவள் அவளைப் பெற்றவளுக்குச் செல்லப்பிள்ளை. கன்னிப்பெண்கள் அவளைக் கண்டு வாழ்த்தினார்கள்; அரசிகளும் வைப்பாட்டிகளும் அவளைப் புகழ்ந்தார்கள்.

உன்னதப்பாட்டு 6:2-9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

தோட்டங்களில் மேயவும், லீலிமலர்களைப் பறிக்கவும், என் நேசர் தமது தோட்டத்திற்கும் கந்தவர்க்கப் பாத்திகளுக்கும் போனார். நான் என் நேசருடையவள், என் நேசர் என்னுடையவர்; அவர் லீலிமலர்களுக்குள்ளே மேய்கிறார். மணவாளன் என் பிரியமே! நீ திர்சாவைப்போல் அழகும், எருசலேமைப்போல் வடிவமும், கொடிகள் பறக்கும் படையைப்போல் பயங்கரமானவள். உன் கண்களை என்னைவிட்டுத் திருப்பு, அவைகள் என்னை வென்றது; உன் கருமையான கூந்தல் கீலேயாத் மலையிலே இலைகள்மேயும் வெள்ளாட்டு மந்தையைப்போலிருக்கிறது. உன் பற்கள் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிறவைகளும், ஒன்றாகிலும் மலடாக இல்லாமல் இரட்டைக்குட்டிகளை ஈன்றவைகளுமான ஆட்டுமந்தையைப்போல் இருக்கிறது. உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் வெடித்த மாதுளம்பழம்போல் இருக்கிறது. ராணிகள் அறுபதுபேரும், மறுமனையாட்டிகள் எண்பதுபேருமுண்டு; கன்னியர்களுக்குத் தொகையில்லை. என் புறாவோ, என் உத்தமியோ ஒருத்தியே; அவள் தன் தாய்க்கு ஒரே பிள்ளை; அவள் தன்னைப் பெற்றவளுக்கு அருமையானவள்; இளம்பெண்கள் அவளைக் கண்டு, அவளை வாழ்த்தினார்கள்; ராணிகளும் மறுமனையாட்டிகளும் அவளைப் போற்றினார்கள்.

உன்னதப்பாட்டு 6:2-9 பரிசுத்த பைபிள் (TAERV)

என் நேசர் கந்தவர்க்கப் பூக்களுக்காக தோட்டத்தில் மேய லீலி மலர்களைக் கொய்ய தன் தோட்டத்திற்குப் போனார். நான் அவருக்குரியவள். அவர் எனக்குரியவர். அவர் லீலிகளை மேய்பவர். என் அன்பே நீ திர்சாவைப்போன்று அழகானவள். எருசலேமைப்போன்று இனிமையானவள். நீ கம்பீரமான நகரங்களைப் போன்றவள். என்னைப் பாராதே உன் கண்கள் என்னை வென்றுவிட்டன. உன் கூந்தல் கீலேயாத் மலைச் சரிவில் நடனமாடும் வெள்ளாட்டு மந்தையைப் போல் அசைந்துகொண்டிருக்கிறது. உன் பற்கள் வெள்ளைப் பெண் ஆட்டுக் குட்டிகள் குளித்து கரையேறுவது போலுள்ளன. அவை இரட்டைக் குட்டிகள் போட்டு, எந்தக் குட்டியையும் இழக்காத ஆட்டினைப் போலுள்ளது. உனது கன்னங்கள் முக்காட்டின் நடுவே வெட்டிவைக்கப்பட்ட மாதளம் பழங்களைப் போன்றுள்ளன. அறுபது ராணிகள் இருக்கலாம் எண்பது மறுமனையாட்டிகள் இருக்கலாம். எண்ண முடியாத அளவிற்கு இளம் பெண்கள் இருக்கலாம். ஆனால் எனக்காக ஒரே ஒரு பெண்ணே இருக்கிறாள். எனது புறாவே நீயே எனது பரிபூரணமானவள். அவளே தன் தாய்க்கு மிகவும் பிரியமான குமாரத்தி. அவளே தன்னைப் பெற்றவளால் மிகவும் நேசிக்கப்படுபவள். இளம் பெண்கள் அவளைப் பார்த்து பாராட்டுகிறார்கள். ராணிகளும் மறுமனையாட்டிகளும் அவளைப் பாராட்டுகிறார்கள்.

உன்னதப்பாட்டு 6:2-9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

தோட்டங்களில் மேயவும், லீலிபுஷ்பங்களைக் கொய்யவும், என் நேசர் தமது தோட்டத்துக்கும் கந்தவர்க்கப்பாத்திகளுக்கும் போனார். நான் என் நேசருடையவள், என் நேசர் என்னுடையவர்; அவர் லீலிபுஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார். என் பிரியமே! நீ திர்சாவைப் போல் செளந்தரியமும், எருசலேமைப் போல் வடிவமும், கொடிகள் பறக்கும் படையைப்போல் கெடியுமானவள். உன் கண்களை என்னைவிட்டுத் திருப்பு, அவைகள் என்னை வென்றது; உன் அளகபாரம் கீலேயாத் மலையிலே தழைமேயும் வெள்ளாட்டு மந்தையைப்போலிருக்கிறது. உன் பற்கள் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிறவைகளும், ஒன்றானாலும் மலடாயிராமல் இரட்டைக் குட்டியீன்றவைகளுமான ஆட்டுமந்தையைப்போலிருக்கிறது. உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் வெடித்த மாதளம்பழம்போலிருக்கிறது. ராஜஸ்திரீகள் அறுபதுபேரும், மறுமனையாட்டிகள் எண்பதுபேருமுண்டு; கன்னியருக்குத் தொகையில்லை. என் புறாவோ, என் உத்தமியோ ஒருத்தியே; அவள் தன் தாய்க்கு ஒரே பிள்ளை; அவள் தன்னைப் பெற்றவளுக்கு அருமையானவள்; குமாரத்திகள் அவளைக் கண்டு, அவளை வாழ்த்தினார்கள்; ராஜஸ்திரீகளும் மறுமனையாட்டிகளும் அவளைப் போற்றினார்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்