ரோமர் 3:1-5
ரோமர் 3:1-5 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஆகவே, யூதனாயிருப்பதில் என்ன மேன்மை இருக்கிறது? விருத்தசேதனத்தில் என்ன பயன் இருக்கிறது? எல்லாவகையிலும், அவர்களுக்கு மேன்மை இருக்கவே செய்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனுடைய வார்த்தைகள் யூதர்களிடமே ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றனவே. சிலரிடம் விசுவாசமில்லாதிருந்தால் அதினாலென்ன? அவர்களுடைய விசுவாசக் குறைவு, இறைவனுடைய உண்மையை இல்லாமல் போகச்செய்யுமோ? ஒருபோதும் இல்லை! மனிதர்கள் அனைவரும் பொய்யராக இருந்தாலும் இறைவனோ உண்மையுள்ளவராய் இருக்கிறார். “நீர் உமது வார்த்தைகளில் நீதியுள்ளவர் என்றும், நீர் நியாயம் விசாரிக்கும்போது உமது தீர்ப்பு வெற்றியடையும் என நிரூபிக்கப்படுகிறது” என்று எழுதியிருக்கிறதே. இவ்விதமாய் நம்முடைய அநீதி இறைவனுடைய நீதியை அதிகமாய்த் தெளிவுபடுத்தப்படுகிறது என்று சொன்னால், நாம் என்ன சொல்லுவோம்? அப்பொழுது இறைவன் நம்மேல் தமது கோபத்தை வரப்பண்ணினால், இறைவன் அநீதியுள்ளவர் என்று சொல்லலாமா? நான் இதை மனித வழக்கமாகவே வாதாடுகிறேன்.
ரோமர் 3:1-5 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இப்படியானால், யூதனுடைய மேன்மை என்ன? விருத்தசேதனத்தினாலே பிரயோஜனம் என்ன? அது எல்லாவிதத்திலும் உயர்ந்ததாக இருக்கிறது; தேவனுடைய வாக்கியங்கள் அவர்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்டது விசேஷித்த மேன்மையாமே. சிலர் விசுவாசிக்காமற்போனாலும் என்ன? அவர்களுடைய அவிசுவாசம் தேவனுடைய உண்மையை ஒன்றுமில்லாமல் ஆக்குமா? அப்படியாக்காது: “நீர் உம்முடைய வசனங்களில் நீதிமானாக விளங்கவும், உம்முடைய நியாயம் விசாரிக்கப்படும்போது வெற்றியடையவும் இப்படியானது” என்று எழுதியிருக்கிறபடி, தேவனே சத்தியவான் என்றும், எந்த மனிதனும் பொய்யன் என்றும் சொல்வோமாக. நான் மனிதர்கள் பேசுகிறதுபோலப் பேசுகிறேன்; நம்முடைய அநீதி தேவனுடைய நீதியைக் காண்பித்தால் என்னசொல்லுவோம்? கோபத்தைக் காட்டுகிற தேவன் அநீதி உள்ளவராக இருக்கிறார் என்று சொல்லலாமா?
ரோமர் 3:1-5 பரிசுத்த பைபிள் (TAERV)
எனவே மற்றவர்களிடம் இல்லாத உயர்வு யூதர்களிடம் மட்டும் என்ன உள்ளது? அவர்களின் விருத்தசேதனம் என்பதில் அடங்கி இருக்கும் சிறப்பு என்ன? யூதர்களிடம் நிறைய சிறப்புத் தன்மைகள் உள்ளன. தேவன் அவர்களை நம்பியே தம் போதனைகளைக் கொடுத்தார். இதுதான் மிக சிறப்பான மேன்மையாகும். சில யூதர்கள் தேவனுடைய நம்பிக்கைக்கு உரியவர்களாக இல்லை என்பது உண்மையாகும். எனினும் அது தேவனுடைய வாக்குறுதியை மதிப்பற்றதாகச் செய்யாது. உலகில் உள்ள அத்தனை மக்களும் பொய்யராகிப் போனாலும் தேவன் தொடர்ந்து உண்மையுள்ளவராகவே இருப்பார். “நீர் உமது வார்த்தைகளில் நீதியுள்ளவராய் விளங்குவீர். உம்முடைய நியாயம் விசாரிக்கப்படும்போது வெற்றியடைவீர்” என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளது. நாம் தவறு செய்யும்போது, தேவன் சரியானவர் என்று தெளிவாக அது காட்டிவிடும். எனவே தேவன் நம்மைத் தண்டிக்கும்போது அவர் நீதியில்லாதவர் என்று கூற முடியுமா? (சிலர் இவ்வாறு கூறுவதாக எண்ணுகிறேன்.)
ரோமர் 3:1-5 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இப்படியானால், யூதனுடைய மேன்மை என்ன? விருத்தசேதனத்தினாலே பிரயோஜனம் என்ன? அது எவ்விதத்திலும் மிகுதியாயிருக்கிறது; தேவனுடைய வாக்கியங்கள் அவர்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்டது விசேஷித்த மேன்மையாமே. சிலர் விசுவாசியாமற்போனாலுமென்ன? அவர்களுடைய அவிசுவாசம் தேவனுடைய உண்மையை அவமாக்குமோ? அப்படியாக்கமாட்டாது: நீர் உம்முடைய வசனங்களில் நீதிபரராய் விளங்கவும், உம்முடைய நியாயம் விசாரிக்கப்படும்போது வெற்றியடையவும் இப்படியாயிற்று என்று எழுதியிருக்கிறபடி, தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்வோமாக. நான் மனுஷர் பேசுகிற பிரகாரமாய்ப் பேசுகிறேன்; நம்முடைய அநீதி தேவனுடைய நீதியை விளங்கப்பண்ணினால் என்ன சொல்லுவோம்? கோபாக்கினையைச் செலுத்துகிற தேவன் அநீதராயிருக்கிறார் என்று சொல்லலாமா?