சங்கீதம் 7:6-11

சங்கீதம் 7:6-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவாவே, உம்முடைய கோபத்தில் எழும்பும்; என் எதிரிகளினுடைய கடுங்கோபத்திற்கு விரோதமாக எழுந்திடும். என் இறைவனே, விழித்தெழும்; நீதியைக் கட்டளையிடும். எல்லா நாட்டினரும் உம்மைச் சூழ ஒன்றுசேர்த்து நீர் உன்னதத்திலிருந்து அவர்களை ஆளுகை செய்யும். யெகோவா மக்களை நியாயந்தீர்க்கட்டும். யெகோவாவே, என்னுடைய நீதிக்குத் தக்கதாய் என்னை நியாயந்தீரும்; மகா உன்னதமானவரே, என் உத்தமத்திற்கு ஏற்ப எனக்கு நியாயம் செய்யும். சிந்தனைகளையும் இருதயங்களையும் ஆராய்ந்தறிகிற நீதியுள்ள இறைவனே, கொடியவர்களின் வன்செயலை ஒரு முடிவுக்குக் கொண்டுவாரும்; நீதியுள்ளவர்களைப் பாதுகாப்பாய் இருக்கச் செய்யும். மகா உன்னதமான இறைவனே என் கேடயம்; இருதயத்தில் நேர்மையுள்ளவர்களை விடுவிக்கிறார். இறைவன் நீதியுள்ள நீதிபதி; அவர் நாள்தோறும் தமது கடுங்கோபத்தை வெளிப்படுத்தும் இறைவன்.

சங்கீதம் 7:6-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவாவே, நீர் உம்முடைய கோபத்தில் எழுந்திருந்து, என்னுடைய எதிரிகளுடைய கடுங்கோபங்களுக்காக உம்மை உயர்த்தி, எனக்காக விழித்துக்கொள்ளும்; நியாயத்தீர்ப்பை நியமித்திருக்கிறீரே. மக்கள்கூட்டம் உம்மைச் சூழ்ந்துகொள்ளட்டும்; அவர்களுக்காகத் திரும்பவும் உன்னதத்திற்கு எழுந்தருளும். யெகோவா மக்களுக்கு நியாயம் செய்வார்; யெகோவாவே, என்னுடைய நீதியினாலும் என்னிலுள்ள உண்மையினாலும் எனக்கு நியாயம்செய்யும். துன்மார்க்கனுடைய தீய செயல்கள் ஒழிவதாக; நீதிமானை நிலைநிறுத்தும்; நீதியுள்ளவராக இருக்கிற தேவனே நீர் இருதயங்களையும், சிந்தைகளையும் சோதித்தறிகிறவர். செம்மையான இருதயமுள்ளவர்களை இரட்சிக்கிற தேவனிடத்தில் என்னுடைய கேடகம் இருக்கிறது. தேவன் நீதியுள்ள நியாயாதிபதி; அவர் நாள்தோறும் பாவியின்மேல் கோபம்கொள்ளுகிற தேவன்.

சங்கீதம் 7:6-11 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தாவே எழுந்து உமது கோபத்தைக் காட்டும்! என் பகைவன் கோபங்கொண்டிருக்கிறான், எழுந்து அவனோடு போர் புரியம். கர்த்தாவே, எழுந்து நீதி செய்யும். கர்த்தாவே, ஜனங்களை நியாயந்தீரும். உம்மைச் சுற்றிலும் தேசங்களை ஒன்று சேரும். கர்த்தாவே எனக்கு நியாயம் வழங்கும். எனது நேர்மையையும், நான் களங்கமற்றவன் என்பதையும் நிரூபியும். தீயோரைத் தண்டியும், நல்லோருக்கு உதவும். தேவனே, நீர் நல்லவர். நீர் ஜனங்களின் இருதயங்களைப் பார்க்க வல்லவர். நேர்மையான இருதயம் கொண்ட ஜனங்களுக்கு தேவன் உதவுகிறார். தேவன் என்னைப் பாதுகாப்பார். தேவன் ஒரு நல்ல நீதிபதி, எந்நேரமும் அவர் தீமைக்கு எதிராக தன் கோபத்தைக் காட்டுவார்.

சங்கீதம் 7:6-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தாவே, நீர் உம்முடைய கோபத்தில் எழுந்திருந்து, என் சத்துருக்களுடைய மூர்க்கங்களினிமித்தம் உம்மை உயர்த்தி, எனக்காக விழித்துக்கொள்ளும்; நியாயத்தீர்ப்பை நியமித்திருக்கிறீரே. ஜனக்கூட்டம் உம்மைச் சூழ்ந்து கொள்ளும்; அவர்களுக்காகத் திரும்பவும் உன்னதத்திற்கு எழுந்தருளும். கர்த்தர் ஜனங்களுக்கு நியாயஞ் செய்வார்; கர்த்தாவே, என் நீதியின்படியும் என்னிலுள்ள உண்மையின்படியும் எனக்கு நியாயஞ்செய்யும். துன்மார்க்கனுடைய பொல்லாங்கை ஒழியப்பண்ணும்; நீதிமானை ஸ்திரப்படுத்துவீராக; நீதியுள்ளவராயிருக்கிற தேவரீர் இருதயங்களையும் உள்ளிந்திரியங்களையும் சோதித்தறிகிறவர். செம்மையான இருதயமுள்ளவர்களை இரட்சிக்கிற தேவனிடத்தில் என் கேடகம் இருக்கிறது. தேவன் நீதியுள்ள நியாயாதிபதி; அவர் நாள்தோறும் பாவியின்மேல் சினங்கொள்ளுகிற தேவன்.