சங்கீதம் 50:1-23

சங்கீதம் 50:1-23 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் வசனித்து, சூரியன் உதிக்குந் திசை தொடங்கி அது அஸ்தமிக்குந் திசை வரைக்குமுள்ள பூமியைக் கூப்பிடுகிறார். பூரண வடிவுள்ள சீயோனிலிருந்து தேவன் பிரகாசிக்கிறார். நம்முடைய தேவன் வருவார், மவுனமாயிரார்; அவருக்குமுன் அக்கினி பட்சிக்கும்; அவரைச் சுற்றிலும் மகா புசல் கொந்தளிப்பாயிருக்கும். அவர் தம்முடைய ஜனத்தை நியாயந்தீர்க்க உயர இருக்கும் வானங்களையும் பூமியையும் கூப்பிடுவார். பலியினாலே என்னோடே உடன்படிக்கைபண்ணின என்னுடைய பரிசுத்தவான்களை என்னிடத்தில் கூட்டுங்கள் என்பார். வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கும்; தேவனே நியாயாதிபதி. (சேலா) என் ஜனமே, கேள், நான் பேசுவேன்; இஸ்ரவேலே, உனக்கு விரோதமாய்ச் சாட்சியிடுவேன்; நானே தேவன், உன் தேவனாயிருக்கிறேன். உன் பலிகளினிமித்தம் உன்னைக் கடிந்துகொள்ளேன்; உன் தகனபலிகள் எப்போதும் எனக்கு முன்பாக இருக்கிறது. உன் வீட்டிலிருந்து காளைகளையும், உன் தொழுவங்களிலிருந்து ஆட்டுக்கடாக்களையும் நான் வாங்கிக் கொள்வதில்லை. சகல காட்டுஜீவன்களும், பர்வதங்களில் ஆயிரமாயிரமாய்த் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள். மலைகளிலுள்ள பறவைகளையெல்லாம் அறிவேன்; வெளியில் நடமாடுகிறவைகளெல்லாம் என்னுடையவைகள். நான் பசியாயிருந்தால் உனக்குச் சொல்லேன்; பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே. நான் எருதுகளின் மாம்சம் புசித்து, ஆட்டுக்கடாக்களின் இரத்தம் குடிப்பேனோ? நீ தேவனுக்கு ஸ்தோத்திரபலியிட்டு, உன்னதமானவருக்கு உன் பொருத்தனைகளைச் செலுத்தி; ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய். தேவன் துன்மார்க்கனை நோக்கி: நீ என் பிரமாணங்களை எடுத்துரைக்கவும், என் உடன்படிக்கையை உன் வாயினால் சொல்லவும், உனக்கு என்ன நியாயமுண்டு. சிட்சையை நீ பகைத்து, என் வார்த்தைகளை உனக்குப் பின்னாக எறிந்துபோடுகிறாய். நீ திருடனைக் காணும்போது அவனோடு ஒருமித்துப்போகிறாய்; விபசாரரோடும் உனக்குப் பங்குண்டு. உன் வாயைப் பொல்லாப்புக்குத் திறக்கிறாய்; உன் நாவு சற்பனையைப் பிணைக்கிறது. நீ உட்கார்ந்து உன் சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, உன் தாயின் மகனுக்கு அவதூறு உண்டாக்குகிறாய். இவைகளை நீ செய்யும்போது நான் மவுனமாயிருந்தேன், உன்னைப்போல் நானும் இருப்பேன் என்று நினைவு கொண்டாய்; ஆனாலும் நான் உன்னைக் கடிந்துகொண்டு, அவைகளை உன் கண்களுக்கு முன்பாக ஒவ்வொன்றாக நிறுத்துவேன். தேவனை மறக்கிறவர்களே, இதைச் சிந்தித்துக்கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் நான் உங்களைப் பீறிப்போடுவேன், ஒருவரும் உங்களை விடுவிப்பதில்லை. ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்; தன் வழியைச் செவ்வைப்படுத்துகிறவனுக்குத் தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொல்லுகிறார்.

சங்கீதம் 50:1-23 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

வல்லமையுள்ள இறைவனாகிய யெகோவா பேசுகிறார், அவர் சூரியன் உதிக்கும் இடத்திலிருந்து, அது மறையும் இடம் வரையுமுள்ள முழு உலகத்தையும் அழைக்கிறார். பூரண அழகுள்ள சீயோனிலிருந்து இறைவன் பிரகாசிக்கிறார். நம்முடைய இறைவன் வருகிறார், அவர் மவுனமாய் இருக்கமாட்டார்; அவருக்கு முன்னாக நெருப்பு சுட்டெரித்துச் செல்கிறது; அவரைச் சுற்றிப் புயல் சீற்றத்துடன் வீசுகிறது. அவர் தமது மக்களை நியாயந்தீர்க்கும்படியாக, மேலேயுள்ள வானங்களையும் பூமியையும் அழைத்துச் சொல்கிறார்: “பலியினால் என்னுடன் உடன்படிக்கை செய்த, பரிசுத்தவான்களை ஒன்றுகூட்டுங்கள்.” வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கின்றன; அவர் நியாதிபதியாகிய இறைவன். “என் மக்களே, கேளுங்கள், நான் பேசுவேன்; இஸ்ரயேலே, நான் உனக்கு விரோதமாகச் சாட்சி கூறுவேன்: நான் இறைவன், நானே உங்கள் இறைவன். எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கும் உங்கள் பலிகளுக்காகவோ, அல்லது உங்கள் தகன காணிக்கைகளுக்காகவோ நான் உங்களைக் கண்டிக்கவில்லை. உங்கள் வீட்டிலிலுள்ள காளைகளோ, உங்கள் தொழுவத்திலுள்ள வெள்ளாடுகளோ எனக்கு வேண்டியதில்லை. ஏனெனில் காட்டிலுள்ள எல்லா மிருகங்களும் ஆயிரக்கணக்கான குன்றுகளிலுள்ள ஆடுமாடுகளும் என்னுடையவைகள். மலைகளிலுள்ள ஒவ்வொரு பறவையையும் நான் அறிவேன்; வயல்வெளிகளிலுள்ள உயிரினங்களும் என்னுடையவைகள். நான் பசியாயிருந்தால் உங்களிடம் சொல்லமாட்டேன்; ஏனெனில் உலகமும் அதிலுள்ள யாவும் என்னுடையவைகள். நான் காளைகளின் இறைச்சியை உண்டு, ஆட்டுக்கடாக்களின் இரத்தத்தைக் குடிப்பேனோ? “நீங்கள் இறைவனாகிய எனக்கு உங்கள் நன்றிக் காணிக்கைகளைப் பலியிடுங்கள்; மகா உன்னதமான இறைவனாகிய எனக்கு உங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுங்கள். துன்ப நாளில் என்னை நோக்கி மன்றாடிக் கூப்பிடுங்கள், நான் உங்களை விடுவிப்பேன்; நீங்கள் என்னை மகிமைப்படுத்துவீர்கள்.” கொடியவர்களுக்கு இறைவன் சொல்கிறதாவது: “என் சட்டங்களைக் கூறுவதற்கும், என் உடன்படிக்கையை உங்கள் உதடுகளினால் உச்சரிப்பதற்கும் உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? என்னுடைய அறிவுறுத்தலை வெறுத்து, என் வார்த்தைகளை உங்களுக்குப் பின்னாக எறிந்துவிடுகிறீர்கள். நீங்கள் திருடனைக் காணும்போது அவனோடு சேர்ந்துகொள்கிறீர்கள்; விபசாரக்காரருடனும் நீங்கள் பங்குகொள்கிறீர்கள். நீங்கள் உங்கள் வாயைத் தீமைக்காக பயன்படுத்துகிறீர்கள்; உங்கள் நாவை வஞ்சகத்தைப் பேசப் பயன்படுத்துகிறீர்கள். நீங்கள் உங்கள் சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசுகிறீர்கள்; இடைவிடாமல் உங்கள் சகோதரனையே தூற்றுகிறீர்கள். இவற்றை நீங்கள் செய்தபோது நான் மவுனமாய் இருந்தேன்; நானும் உங்களைப்போலவே இருப்பேன் என்று நினைத்தீர்கள். ஆனால் நான் உங்களைக் கடிந்துகொண்டு, உங்கள் கண்களுக்கு முன்பாகவே உங்களைக் குற்றஞ்சாட்டுவேன். “இறைவனை மறக்கிறவர்களே, இதைக் கவனியுங்கள்; இல்லாவிட்டால் நான் உங்களை முற்றிலும் தண்டித்துப் போடுவேன்; ஒருவரும் உங்களைத் தப்புவிக்கமாட்டார்கள். நன்றி பலியைச் செலுத்துகிறவன் என்னைக் கனம்பண்ணுகிறான்; இறைவனாகிய என் இரட்சிப்பை நான் குற்றமற்றவனுக்குக் காண்பிப்பேன்.”

சங்கீதம் 50:1-23 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

வல்லமையுள்ள தேவனாகிய யெகோவா பேசினது, சூரியன் உதிக்கும்திசை தொடங்கி அது மறையும் திசைவரைக்குமுள்ள பூமியைக் கூப்பிடுகிறார். அழகுள்ள சீயோனிலிருந்து தேவன் பிரகாசிக்கிறார். நம்முடைய தேவன் வருவார், மவுனமாக இருக்கமாட்டார்; அவருக்கு முன்பு அக்கினி அழியும்; அவரைச் சுற்றிலும் மகா புயல் கொந்தளிப்பாக இருக்கும். அவர் தம்முடைய மக்களை நியாயந்தீர்க்க உயர இருக்கும் வானங்களையும் பூமியையும் கூப்பிடுவார். பலியினாலே என்னோடு உடன்படிக்கை செய்த என்னுடைய பரிசுத்தவான்களை என்னிடத்தில் கூட்டுங்கள் என்பார். வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கும்; தேவனே நியாயாதிபதி. (சேலா) என்னுடைய மக்களே, கேள், நான் பேசுவேன்; இஸ்ரவேலே, உனக்கு விரோதமாகச் சாட்சி சொல்லுவேன்; நானே தேவன், உன்னுடைய தேவனாக இருக்கிறேன். உன்னுடைய பலிகளுக்காக உன்னைக் கடிந்துக்கொள்ளமாட்டேன்; உன்னுடைய தகனபலிகள் எப்போதும் எனக்கு முன்பாக இருக்கிறது. உன்னுடைய வீட்டிலிருந்து காளைகளையும், உன்னுடைய தொழுவங்களிலிருந்து ஆட்டுக்கடாக்களையும் நான் வாங்கிக்கொள்வதில்லை. எல்லா காட்டு உயிரினங்களும், மலைகளில் ஆயிரமாயிரமாகத் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள். மலைகளிலுள்ள பறவைகளையெல்லாம் அறிவேன்; வெளியில் நடமாடுகிறவைகளெல்லாம் என்னுடையவைகள். நான் பசியாக இருந்தால் உனக்குச் சொல்லமாட்டேன்; பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே. நான் எருதுகளின் இறைச்சியை சாப்பிட்டு, ஆட்டுக்கடாக்களின் இரத்தம் குடிப்பேனோ? நீ தேவனுக்கு நன்றிபலியிட்டு, உன்னதமான தேவனுக்கு உன்னுடைய பொருத்தனைகளைச் செலுத்தி; ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய். தேவன் துன்மார்க்கனை நோக்கி: நீ என்னுடைய பிரமாணங்களை எடுத்துச்சொல்லவும், என்னுடைய உடன்படிக்கையை உன்னுடைய வாயினால் சொல்லவும், உனக்கு என்ன நியாயமுண்டு. அறிவுறுத்துதலை நீ பகைத்து, என்னுடைய வார்த்தைகளை உனக்குப் பின்னாக எறிந்துபோடுகிறாய். நீ திருடனைப் பார்க்கும்போது அவனோடு ஒருமித்துப்போகிறாய்; விபசாரரோடும் உனக்குப் பங்குண்டு. உன்னுடைய வாயைப் பொல்லாப்புக்குத் திறக்கிறாய், உன்னுடைய நாவு வஞ்சகத்தை வெளிப்படுத்துகிறது. நீ உட்கார்ந்து உன்னுடைய சகோதரனுக்கு விரோதமாகப் பேசி, உன்னுடைய சொந்த சகோதரனுக்கு அவதூறு உண்டாக்குகிறாய். இவைகளை நீ செய்யும்போது நான் மவுனமாக இருந்தேன், உன்னைப்போல நானும் இருப்பேன் என்று நினைவு கொண்டாய்; ஆனாலும் நான் உன்னைக் கடிந்துகொண்டு, அவைகளை உன்னுடைய கண்களுக்கு முன்பாக ஒவ்வொன்றாக நிறுத்துவேன். தேவனை மறக்கிறவர்களே, இதைச் சிந்தித்துக்கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் நான் உங்களைப் பீறிப்போடுவேன், ஒருவரும் உங்களை விடுவிப்பதில்லை. நன்றிபலி செலுத்துகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்; தன்னுடைய வழியைச் சரிசெய்கிறவனுக்கு தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொல்லுகிறார்.

சங்கீதம் 50:1-23 பரிசுத்த பைபிள் (TAERV)

தெய்வங்களுக்கெல்லாம் தேவனாகிய கர்த்தர் பேசுகிறார். சூரியன் உதிக்குமிடத்திலிருந்து அது மறைகிற இடம் வரைக்குமுள்ள பூமியின் எல்லா ஜனங்களையும் அழைக்கிறார். சீயோனிலிருந்து பிரகாசிக்கும் தேவன் அழகானவர். நம் தேவன் வருகிறார், அவர் அமைதியாக இரார். அவருக்கு முன்னே நெருப்பு எரியும். அவரைச் சூழ்ந்து புயல் வீசும். தமது ஜனங்களை நியாயந்தீர்ப்பதற்கு நமது தேவன் பூமியையும் வானத்தையும் அழைக்கிறார். தேவன் கூறுகிறதாவது, “என்னைப் பின்பற்றுகிறவர்களே, என்னைச் சூழ்ந்து நில்லுங்கள், என்னைச் சூழ்ந்து நில்லுங்கள். என்னை வணங்குகிறவர்களே, வாருங்கள். நாம் ஒருவருக்கொருவர் ஒரு உடன்படிக்கை செய்துள்ளோம்.” தேவனே நியாயாதிபதி, வானங்கள் அவரது நன்மைகளைக் கூறும். “எனது ஜனங்களே, நான் கூறுவதைக் கேளுங்கள்! இஸ்ரவேலின் ஜனங்களே, உங்களுக்கு எதிரான எனது சாட்சியைக் காட்டுவேன். நானே உங்கள் தேவன். உங்கள் பலிகளைக் குறித்து நான் குறை கூறமாட்டேன். எப்போதும் இஸ்ரவேலராகிய நீங்கள் உங்கள் தகனபலிகளை என்னிடம் கொண்டுவந்தீர்கள். ஒவ்வொரு நாளும் அவற்றை எனக்கு கொடுக்கிறீர்கள். உங்கள் வீட்டின் எருதுகளையோ உங்கள் மந்தையின் ஆடுகளையோ நான் எடுத்துக்கொள்வதில்லை. எனக்கு அம்மிருகங்கள் தேவையில்லை. காட்டின் மிருகங்கள் எனக்குச் சொந்தமானவை. மலைகளிலுள்ள பல்லாயிரம் மிருகங்கள் எல்லாம் எனக்குச் சொந்தமானவை. உயர்ந்த மலையின் ஒவ்வொரு பறவையையும் நான் அறிவேன். மலையின்மேல் அசையும் பொருட்களெல்லாம் என்னுடையவை. எனக்குப் பசியில்லை! எனக்குப் பசித்தாலும் உணவுக்காக உன்னைக் கேட்கமாட்டேன். உலகமும் அதன் அனைத்துப் பொருள்களும் எனக்குச் சொந்தமானவை. எருதுகளின் மாமிசத்தை நான் புசிப்பதில்லை. ஆடுகளின் இரத்தத்தை நான் குடிக்கமாட்டேன்” என்று தேவன் கூறுகிறார். எனவே ஸ்தோத்திர பலிகளை தேவனுக்குக் கொண்டுவந்து அவரோடு இருக்கும்படி வாருங்கள். நீங்கள் மிக உன்னதமான தேவனுக்கு வாக்குறுதி பண்ணினீர்கள். எனவே வாக்களித்த பொருள்களை அவருக்குக் கொடுங்கள். தேவன், “இஸ்ரவேலரே, துன்பம் நேர்கையில் என்னிடம் விண்ணப்பம் செய்யுங்கள்! நான் உங்களுக்கு உதவுவேன். நீங்கள் அப்போது என்னை மகிமைப்படுத்த முடியும்” என்று கூறுகிறார். தேவன் தீயோரைப் பார்த்து, “நீங்கள் எனது சட்டங்களைக் குறித்துப் பேசுகிறீர்கள். எனது உடன்படிக்கையைக் குறித்துப் பேசுகிறீர்கள். ஆனால் நான் உங்களைத் திருத்தும்போது அதை ஏன் வெறுக்கிறீர்கள்? நான் கூறும் காரியங்களை ஏன் புறக்கணிக்கிறீர்கள்? நீங்கள் ஒரு திருடனைப் பார்க்கிறீர்கள், அவனோடு சேர்வதற்காக ஓடுகிறீர்கள். விபச்சாரமாகிய பாவத்தைச் செய்கிறவர்களோடு நீங்களும் படுக்கையில் குதிக்கிறீர்கள். நீங்கள் தீயவற்றைப் பேசிப் பொய்களைச் சொல்கிறீர்கள். உங்கள் சொந்த சகோதரரையும் பிறரையும் குறித்து எப்போதும் தீயவற்றையே சொல்கிறீர்கள். நீங்கள் இத்தீய செயல்களைச் செய்கிறீர்கள், நான் அமைதியாக இருப்பேன் என்று நினைக்கிறீர்கள். நீங்கள் எதையும் சொல்லாதிருக்கிறீர்கள், நானும் அமைதியாக இருப்பேன் என்று நினைக்கிறீர்கள். ஆனால் நான் அமைதியாக இரேன்! நீங்கள் அதைத் தெளிவாக உணரும்படி நான் செய்வேன். உங்கள் முகத்திற்கெதிராக உங்களை விமர்சிப்பேன்! நீங்கள் தேவனை மறந்திருக்கிறீர்கள். உங்களைக் கிழித்தெறியும் முன்னர் நீங்கள் அதை நன்கு புரிந்து கொள்ளுங்கள்! அது நிகழ்ந்தால் உங்களை மீட்பவர் எவருமில்லை! எனவே ஒருவன் ஸ்தோத்திர காணிக்கை செலுத்தினால் அவன் என்னை உண்மையிலேயே மகிமைப்படுத்துகிறான். ஒருவன் அவனது வாழ்க்கையை மாற்றியமைத்தால் அப்போது நான் அவனுக்கு தேவனுடைய காக்கும் வல்லமையைக் காட்டுவேன்” என்கிறார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்